தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.3-விலக்க வேண்டியவரும் விலக்கக் கூடாதவரும்

  • 6:3 விலக்க வேண்டியவரும் விலக்கக் கூடாதவரும்

    E

    ‘கொடுத்தும் கொ(ள்)ள’ வேண்டிய நட்பைப்பற்றிக் கூறிய வள்ளுவர்
    கொடுத்தும் விட வேண்டிய நட்பு எது என்றும் குறிப்பிடுகிறார்.

    மருவுக மாசு அற்றார் கேண்மை; ஒன்று ஈந்தும்

    ஒருவுக ஒப்பிலார் நட்பு

    (குறள் எண் : 800)


    (மருவுக = பொருந்துக, ஏற்றுக்கொள்க; கேண்மை = நட்பு;
    ஒருவுக = விட்டு விடுக; ஒப்பிலார் = நம்முடன் பொருந்திவராத
    பண்பினர்)

    குறைகள் இல்லாத நல்லவரின் நட்பினை நாடிப் பெறுங்கள்;
    உங்கள் தன்மைகளுக்கும், குணநலன்களுக்கும் ஒத்து வராதவரின்
    நட்பினை (தெரியாமல் ஏற்க நேர்ந்திருந்தால்) ஏதேனும்
    கொடுத்தாவது தவிர்த்தல் நன்று என்கிறார்
    வள்ளுவர்.


    6:3:1 துன்பத்திலும் உண்டு ஒரு நன்மை

    ஒருவனுக்குப் புகழும் செல்வாக்கும் இருக்கும் பொழுது பலர்
    அவனுடன் உறவு கொள்வார்கள். ஆனால் புகழையும்
    செல்வாக்கையும் அவன் இழந்து நிற்கும் பொழுது, சூரிய ஒளியில்
    மறைந்த பனித்துளிபோல் மறைந்து விடுவார்கள். ஆனால்
    உண்மையான நண்பன், அப்படி அல்ல. உண்மையான நண்பனின்
    கடமை என்ன? ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ என்ற குறள்
    நினைவிற்கு வருகிறதா? பின்னோக்கிச் செல்லுங்கள். பத்தி 5.1 க்கு;
    அக்குறளைப் படியுங்கள் மீண்டும் ஒரு முறை.

    ஆம், நல்ல நண்பனின் கடமை ‘இடுக்கண் களைவது’; துன்பம்
    நேர்கையில் வலிந்து தாமாக முன்சென்று துணை நிற்பது. அவ்வாறு
    இன்றித் துன்பம் நேர்ந்த பொழுது கைவிட்டுச் செல்பவரை
    நண்பராக ஏற்றல் கூடாது. துன்பம் உறுத்தும் பொழுது, நண்பராகப்
    பழகியபின் உதவாமல் விலகிச் செல்பவரின் செயலை, நினைத்தாலே
    நெஞ்சம் சுடும்.

    கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

    உள்ளினும் உள்ளம் சுடும்

    (குறள் எண் : 799)


    (கெடுங்காலை = கேடுவந்த நேரத்தில்; அடுங்காலை = துன்பம்
    உறுத்தும் வேளையில்; உள்ளினும் = நினைத்தாலும்)

    ஆயினும் துன்ப காலத்திலும் ஒரு நன்மை உண்டு என்கிறார்
    வள்ளுவர். நல்ல நண்பர்களை இனம் காண அது வாய்ப்பு
    அளிக்கும்.


    கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பது ஓர் கோல்



    (குறள் எண் : 796)


    (உறுதி = நன்மை; கிளைஞர் = நண்பர்)

    நண்பரை இனம்காணும் ஓர் அளவுகோலாக ஒருவரின் கேடுகாலம்
    நன்மை தரும் என்கிறார்.

    சேக்ஸ்பியரின் நாடகங்களில் ஒன்று ஜுலியஸ் சீசர். இதில் சீசரின்
    நெருங்கிய நண்பனாக இருப்பவன் புரூட்டஸ். சீசரைக் கொலை

    செய்வதற்கு எல்லோரும் முயன்ற பொழுது, தன் நண்பன் புரூட்டஸ், தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிய சீசர், அவனிடம் ஓடுகிறான். ஆனால் புரூட்டஸ், தான் மறைத்து
    வைத்திருந்த கத்தியால் சீசரைக் குத்துகிறான்.
    அப்பொழுது, புரூட்டஸைப் பார்த்து சீசர்,
    ‘புரூட்டஸ் நீயுமா?’ (You Too, Brutus!)
    என்றான். துன்பத்தில் உதவ வேண்டிய

    நண்பன் பகைவர்களுடன் சேர்ந்து, பகைவனாக மாறியதைத்
    தெரிந்து கொண்ட சீசர், அதிர்ச்சி அடைந்தான். அப்பொழுது தான்,
    புரூட்டஸின் நட்பு எத்தகையது என்பதைப் புரிந்து கொண்டான்.
    அவனை இனங்கண்டான். எனவே, நீயும் பகைவனாகி விட்டாயா
    என்பதைச் சுட்டவே, ‘நீயுமா’ என்று கேட்டான். எனவேதான்
    வள்ளுவர், ஒருவனது துன்பகாலம், நல்ல நண்பனை அடையாளம்
    காண்பதற்கு உரிய காலம் என்று குறிப்பிடுகிறார்.


    6.3.2 துன்பத்தில் உதவும் நட்பு

    இராமாயணத்தில், ஆட்சிக்கு உரிய மன்னனாக முடிசூட்டிக் கொள்ள
    வேண்டிய இராமன், கைகேயியின் வரத்தால் காட்டிற்குச் செல்கிறான்.
    காட்டிற்குச் செல்லும் பொழுது, தன் மனைவி சீதையுடனும், தம்பி
    இலக்குவனுடனும் எந்த வித உதவியும் இல்லாமல் செல்கிறான்.
    அரண்மனையில் எல்லாவித வாய்ப்பையும், வசதிகளையும்,
    அனுபவித்த இராமனுக்குக் காட்டு வாழ்க்கை புதிது. பல
    துன்பங்களை அவனும் உடன் சென்றோரும் அனுபவிக்க வேண்டி
    இருந்தது. அந்தச் சமயத்தில், இராமனுக்கு உதவி செய்தவன் குகன்
    எனும்     வேடர்கள் தலைவன். மூவருக்கும் பாதுகாப்பு
    கொடுத்ததோடு, அவர்களுக்குத் தங்கும் இடமும், உணவும்
    கொடுத்தான். துன்பமான காட்டு வாழ்க்கையில் குகன் செய்த உதவி,
    பெரிய உதவி. எனவே நண்பனாக ஏற்றுக் கொண்ட குகனைப்
    பின்னர், தம் தம்பிகளுள் ஒருவராக இராமன் ஏற்றுக் கொண்டதாக
    இராமாயணக் கதை கூறும்.
    இதிலிருந்து என்ன தெரிகிறது? துன்பம்
    வரும்பொழுது உதவுபவனே உண்மையான நண்பன். அவன்
    உதவியை என்றும் மறக்கக் கூடாது.

    இராமன் செய்த செயல் இன்னும் மலோனது. நண்பனைச்
    சகோதரனாக ஏற்றுக் கொண்டான். நண்பனைக் கூட சில
    நேரங்களில் மறக்கலாம், அல்லது துறக்கலாம். ஆனால்
    சகோதரனை மறந்தாலும் துறக்க முடியுமா? சகோதரன் இல்லை
    என்று சொல்ல முடியுமா?

    துன்பகாலத்தில் உதவி செய்தவருடைய நட்பை மறந்து விடாதீர்கள்.
    அதைப்போல் எல்லாவகையிலும் குற்றம் இல்லாதவர் நட்பையும்
    மறந்து விடாதீர்கள் என்று வள்ளுவர் வேண்டுகிறார்.


    மறவற்க, மாசு அற்றார் கேண்மை, துறவற்க
    துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு.



    (குறள் எண்: 106)

    (கேண்மை = நட்பு; துப்பு ஆயார் = தனக்கு உதவியாக இருப்பவர்)

    உதவியால் நட்பும், நட்பால் உதவியும்
    தொடர்ந்து வருபவை. ஆனால் எந்தவித
    பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் உதவி
    செய்தவர் நட்பைக் காப்பாற்றுங்கள். அது
    என்றைக்கும் நன்மை கொடுக்கும் என்பது
    வள்ளுவர் கருத்து.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:05:45(இந்திய நேரம்)