Primary tabs
-
சங்ககால இலக்கியங்களில் இலைமறை காயாகச் சமயக் கருத்துகள் விளக்கம் பெற்றிருந்தன. சிலப்பதிகாரத்தில் சமயக் கருத்துகள் வெளிப்படையாக விரிவாக அமைவதைக் காண்கிறோம். ஆயினும் எல்லாச் சமயங்களும் போற்றப்பட்டன என்பதையும் சமயப்பொறையே மேலோங்கி இருந்தது என்பதையும் நன்கு உணர முடிகிறது. அதற்குப் பின்வந்த மணிமேகலையில் அந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. தம் சமயக் கோட்பாட்டை விரிவாகக் கூறும் போது பிற சமயக் கோட்பாட்டின் மீதான காழ்ப்புணர்ச்சி மணிமேகலையில் ஆங்காங்கே வெளிப்படுகிறது.
பழந்தமிழ் நூல்களில் சமணம் என்ற இந்தப் பாடத்தில் சங்ககாலத்திற்கு முற்பட்ட தொல்காப்பியம் இலக்கண நூலாக இருந்தபோதிலும் சமண சமயக் கருத்துகள் இடம் பெற்றிருந்ததைப் பார்த்தோம். ஒரு கருத்து இலக்கணத்தில் இடம்பெற வேண்டுமென்றால் அதற்கு முன் இலக்கியங்களில் அக்கருத்து பேசப்பட்டிருக்க வேண்டும். சமூக வாழ்வில் மக்களிடையே பரவலாக வேரூன்றியிருக்கும் கருத்துகள் அக்கால கட்டத்தில் இயற்றப்படும் இலக்கியங்களில் இடம்பெறுவது இயல்பு; அது தவிர்க்க முடியாததும் கூட. தவிர, புதியனவாகத் தோன்றி மக்களிடையே செல்வாக்குப் பெற்ற கருத்துகளும் சிந்தனைகளும் கூட இடம் பெறும் வாய்ப்புண்டு என்பதை மறுக்க முடியாதல்லவா?
தவிர, சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலும் ஆங்காங்கே சமணப்பள்ளிகள் இருந்தமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன. அது மட்டுமன்றி, சமணச் சான்றோர் பாடிய பாடல்கள் சிலவும் இடம் பெற்றிருப்பதை விளக்கமாகப் பார்த்தோம். சமணச் சார்புடைய நிலையாமை, ஊழ்வினை, வடக்கிருத்தல் ஆகிய கோட்பாடுகள் ஆங்காங்கே விளக்கம் பெற்றதையும் அறிந்தோம். அதனால் சமண சமயம் சங்ககாலத்திற்கு முன்னும் பின்னும் தமிழக மண்ணில் வேரூன்றி யிருந்தமையைத் தெளிவாக அறிய முடிகிறது. சமணப் பள்ளிகள் சமணத் துறவிகள் தங்குவதற்கென அமைந்த இடங்களாகும். அவ்விடங்களில் தங்கி மக்களுக்குத் தம் சமயக் கோட்பாடுகளை அறிவுறுத்தி வந்தனர். மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை ஆகிய நூல்களில் அதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது சமணம் இங்குக் காலூன்றி வளர்ந்தமையை அறிந்து கொள்ளலாம்.
மேலும் சங்கம் மருவிய காலகட்டத்தில் தோன்றிய அறநூல்களுள் பலவும் சமணர் தந்தவையே. அவற்றுள் முதன்மை பெற்ற திருக்குறளும் சமண சமய நூலாகக் கருதப்பட வாய்ப்பிருக்கிறது எனக் கண்டோம். திருக்குறளைச் சமண நூலென ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமணச் சார்புடைய பல கோட்பாடுகளை அழுத்தமாகப் பேசுகிறது என்பதை மறுக்க முடியாதல்லவா? திருக்குறளை அடுத்துத் தோன்றிய நாலடியார், பழமொழி போன்ற அறநூல்களும் சமணரால் எழுதப்பட்டவையே ஆகும். ஆயினும் அவையெல்லாம் பொது அறங்களாக விளங்குகின்றன. சமயக் கருத்துகளைப் பரப்பிய சமணச் சான்றோர் மக்கள் நல்வாழ்வு வாழவேண்டுமென்ற அக்கறையோடும் சமயப்பொறையோடும் செயல்பட்டமையைப் புரிந்து கொள்ளலாம்.
சங்கம் மருவிய காலத்திற்குப் பின் தோன்றிய காப்பியங்களாகிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சமணம் தமிழகத்தில் காலூன்றி உறுதியாய் நின்றதோடு மக்களின் ஆதரவையும் பெற்றதற்குச் சான்றாகின்றன.
மேற்கூறியதையெல்லாம் நோக்கும்போது சமண சமயம் கிறிஸ்து பிறப்பதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைத் தன் இடமாகக் கொண்டு வளம் பெற்றிருக்க வேண்டும் என்பது புலனாகிறது.
1.ஒன்றாக நல்லது கொல்லாமை என்று கூறுவதிலிருந்து என்ன புலனாகிறது?2.திருக்குறளுக்கு அடுத்து அறநூல்களில் சிறப்புப் பெறும் நூல் எது? அதன் சிறப்புக்குரிய காரணம் யாது?3.பழமொழியின் தனித்துவம் யாது?4.மணிமேகலைக் காப்பியத்தின் மூலம் சமண சமயம் அக்கால நிலையில் சிறப்பாக இருந்தது என்பதை எங்ஙனம் அறியலாம்?