Primary tabs
5.5 மெய்ஞ்ஞானத் திறன்
சைவ சமயச் சித்தாந்திகளும் தமிழ்ச் சித்தர்களும் யோகத் தமர்ந்து ஓம் என்னும் பிரணவ நாதத்தைச் செபித்து மூலாதாரத்தில் உள்ள அனலைச் சிரசில் சேர்த்து, அதன்கண் நின்றொழுகும் அமுதத்தினை உடலெங்கும் பரவச்செய்து நீண்ட நாள் வாழ்ந்திருந்ததைப் போலவே, இஸ்லாமிய மெய்ஞ்ஞானியர்களும் வாழ்ந்திருக்கின்றனர். தக்கலை பீர்முகம்மது அப்பா முந்நூறு ஆண்டுக்காலம் வாழ்ந்ததாகவும் பெரிய நூகுலெப்பை நூறாண்டுக் காலம் வாழ்ந்திருந்ததாகவும் நம்பப்படுகிறது.
பெரியநூகுலெப்பை யோகத்தைப் பல்வேறு படலங்களில் மிகப் பரவலாகக் காட்டி இருந்த போதிலும் மூலாதாரப் படலம் என்று தனி ஒரு படலத்தையும் அமைத்துக் கொண்டுள்ளார். இஸ்லாமிய மூலக் கொள்கையான லாயிலாஹா இல்லல்லாஹ் என்பதையே மூலாதார அனலைச் சிரசில் சேர்க்க வல்லதாகக் கொள்கிறார். இதனை,
லாயிலாஹா வென்றான நாலாறாம் எழுத்து மூலம்
ஓய்வில்லா இல்லல் லாகூ உயர்த்திடு சுவாதிட்டானம்(செய்யுள் - 14 : 7)
எனக் காட்டுகின்றார்.
லாயிலாஹா இல்லல் லாஹூ; முஹம்மதுற் றசூலுல்லா
என்னும் அறபி மொழித் திருவசனத்தில் இருபத்து நான்கு எழுத்துகள் இருக்கின்றன என்பதை நோக்கி நாலாறாம் எழுத்து மூலம் - எனக் குறிப்பிடுகின்றார்.
- ஆதாரங்களில் படரல்
பெரியநூகு லெப்பை ஆலிம் காயசித்தித் தியானத்தை தௌஹீது படலத்துள், ஒரு செய்யுளில் விவரிக்கிறார்.
இதைக் கூறும் செய்யுளில், முப்பாழ் என்பது அஹத், உஹத், வாஹிதியத் என்னும் பரம் பொருளின் மும்மையில் ஒருமை நிலைகளாம்.
அஹத் என்பதற்கு ஒருமை நிலை என்றும், உஹத் என்பதற்கு சத்தையும் பண்புகளையும் வகுக்காமல் தொகுப்பாக இருந்த நிலை என்றும், வாஹிதியத் என்பதற்கு - சத்தையும் பண்புகளையும், அனைத்துப் படைப்புகளையும் வகுத்து விவரமாக அறிந்திருக்கும் நிலை என்றும் பொருளாகும்.
இவ்வகையில் வேதபுராணம் மெய்ஞ்ஞான ஒருமைப்பாட்டைக் கொண்டிருக்கக் காணலாம்.
- உவமை அணிகள்
இலக்கியத்திற்கு அழகு தருவது அணிகளாகும். அவ்வகை அணிவகைகளில் உவமை அணி என்பதும் ஒன்று. அறியாதவற்றை, அவற்றுக்கு ஒப்பானவற்றைக் கூறித் தெளிவாக அறியச் செய்வது உவமை அணியாகும்.
பெரிய நூகு லெப்பை ஆலிம் அருளிய வேதபுராணத்துள் உவமை அணிகள் மிகப் பரவலாகப் பயின்று வந்துள்ளன. அவற்றுள் இன்றியமையாத சிலவற்றை மட்டும் காண்போம்.
- போலி மெய்ஞ்ஞானிகள்
மெய்ஞ்ஞான நெறியின் ஆழத்தை அறிந்த மெய்ஞ்ஞானிகட்குள் சில போலி மெய்ஞ்ஞானியர்களும் அன்றைய நிலையில் இருந்தனர். அவர்கள் மெய்ஞ்ஞானப் போதையில் மூழ்கிக் கிடப்பதாகக் கூறி, கண்களை மூடிக்கொண்டு பத்மாசன இருப்பில் இருந்து கொள்வார்கள். கஞ்சா, அபின், சாராயம், கள் என யாருக்கும் தெரியாமல் உண்டு விட்டு, இறைத்தியானத்தில் மூழ்கி இருப்பவர்போல் அமர்ந்திருப்பார்கள். இவர்களுடைய இந்தச் செயல் நீர்க்கோழி மூச்சடக்கி நீருக்குள் நெடுநேரம் மூழ்கி இருப்பதைப் போலாம். இதனை,
கஞ்சா சாராயம் அபினும் கள்ளும்
கள்ள மாய்த்தின் றுக்க விழ்ந்திருக்கும்
அஞ்சா முஷாஹிதா தனிலிருந்து
அமுதம் வாங்கினா னுண்டேன் என்பார்
நெஞ்சால் நீர்க்கோழி ஜலத்திற் குள்ளே
நெடு நேர மதாக மூச்சடக்கித்
துஞ்சாப் பெருமூச்சை விட்டது போல்
துய்ய நபிறசூல் ஓதினார்
(செய்யுள் - 10 : 32)
எனக் காட்டுகின்றார்.
முஷாஹிதா என்பதற்கு நிஷ்டை என்று பொருள்.
- மூலக்கொள்கை
பெரியநூகு லெப்பை ஆலிம் இஸ்லாமிய மூலக்கொள்கைகளான தொழுகை கலிமா ஆகியவற்றை உறுமீன் என்கிறார். குளக்கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து கொண்டு சிறிய மீன்களை எல்லாம் விட்டு விட்டுப் பெரிய மீன் வந்ததும் எட்டிக் கவ்விப்பிடித்துக் கொள்வதைப் போல மெய்ஞ்ஞானியர்கள், சிறுசிறு செபதபங்களை எல்லாம் விட்டு விட்டுத் தொழுகையும் கலிமாவும் பிடித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இவ்வாறு பற்றிப் பிடித்துக் கொள்வது
மடைத்தலக் கொக்குக் காத்திருந்தே
வரும்அம் மச்சத்தைப் புசிப்பது போலாம்(செய்யுள் - 15 : 10)என வேத உதிப்புப் படலத்துள் காட்டுகின்றார்.
- இறையியல்பு
உலக மக்களின் வாழ்க்கை தோணியைப் போன்றது. தோணியைச் செலுத்தத் துடுப்பு இன்றியமையாததாகும். துடுப்பில்லாமல் செல்லும் தோணி தடுமாற்றத்திற்கு உள்ளாகும். நீருக்குள் அமிழ்ந்து போகும். இறைவன் தோணியை நடத்தும் துடுப்பாக இருக்கிறான். அந்த இறைவனை நான் அறிவது எந்த நாளோ என்னும் துடிப்பில்,
கடத்துகின்ற தோணிதனைக் கழைக்குற்றி விட்டாற்போல்நடத்துகின்ற சித்திரத்தை நானறிவ தெந்நாளோஎன (20:45) விளக்குகின்றார்.
- கூட்டில் அடைபட்ட குளவி
கூட்டுப்புழுவென்னும் நிலையில் குளவி கூட்டிற்குள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முழு உருப்பெற்று, கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். இவ்வகையில் மெய்ஞ்ஞான நெறியில் கூட்டுப்புழுவென இருக்கும் தான் முதிர்ச்சி பெறுவது எந்த நாளோ என்னும் அங்கலாய்ப்பில்
கூட்டில் அடைபட்ட குளவியுருப் படுவதுபோல்
பாட்டில் அடைபட்ட பயன்அறிவ தெந்நாளோஎன (எண் 45) விளக்குகின்றார்.
- மனத்தில் அமைதி
மெய்ஞ்ஞானியர்கள் தங்கள் மனத்தில் அமைதியை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு இணைத்துக் கொண்டால் தான் மெய்ஞ்ஞானச் சித்தியில் வெற்றி பெறமுடியும் என்றும் கூறுவர். இதனை ஊசியில் நூல் கோப்பது போல மனத்தில் அமைதியைச் சேர்த்து இறைத்தியானத்தைத் தொடர வேண்டும் என்று கூறுகிறார்.