தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்

    முனைவர் இரா.காமராசு
    உதவிப்பேராசிரியர்
    இலக்கியத்துறை

    நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இந்தப் புலவர் பெயர் நிகண்டன். கலைமானின் கொம்பு ஒன்றை இவர் தன் கையில் முக்கோலாகப் பயன்படுத்தியதால் கலைக்கோட்டுத் தண்டனார் என்னும் விளக்கம் இவர் பெயரோடு சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. இதனால் இவர் ஒரு முனிவர் என அறியமுடிகிறது.

    தண்டு – முனிவர் தவம் செய்யும் போது தன் இடக்கையைத் தாங்குமாறு வைத்துக்கொள்ள உதவும் முக்கோல்.

    நற்றிணை 382 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் இவர் பெயரில் பதிவாகியுள்ளது.

    மணத்தல் என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல் தணத்தல். தணத்தல் என்பது பிரிந்திருத்தலைக் குறிக்கும். தலைவன் தலைவியைச் சிறிது காலம் பிரிந்திருத்தலை ஒருவழித் தணத்தல் என்பர். பொருள்வயிற் பிரிந்தால் பாலைத்திணை ஒருவயிற் தணத்தல் எல்லாத் திணையிலும் நிகழும்.

    தலைவி தோழியிடம் சொல்கிறாள் – அவரின் தற்காலிகப் பிரிவை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அவருக்குப் பழி வருமல்லவா? என்று குடம்பை = குருவிக்கூடு பறவைகள் குடம்பையைப் பிரிந்து இரை தேடச் செல்லும் மீண்டும் தன் குடம்பைக்கே வந்துவிடும். அது போலத்தான் அவர் நம்மைப் பிரிந்திருக்கிறார். விரைவில் திரும்புவார் என்று தலைவி தன் தலைவனைப் பற்றி குறிப்பிடுகிறாள் எனப் பாடுகின்றார் நிகண்டன்.

    குடம்பை தனித்து ஒழியப்புள் பறந்து அற்றே உடம்போடு

    உயிர் இடை நட்பு – (திருக்குறள் 338)

    இதில் வரும் குடம்பை என்னும் சொல்லுக்கு முட்டை என்றும் கூடு என்றும் பொருள் கூறுகின்றனர். நிகண்டன் கலைக்கோட்டம், தண்டனார் ஆட்சியோடு தொடர்புபடுத்திப் பார்த்து இந்தக் குறளுக்குப் பொருள் காண்பது நல்லது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:15:10(இந்திய நேரம்)