தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தாமப்பல் கண்ணனார்

  • தாமப்பல் கண்ணனார்

    முனைவர் இரா.காமராசு
    உதவிப்பேராசிரியர்
    இலக்கியத்துறை

    தாமப்பல் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது புறநானூறு 43 என்றுள்ள பாடலாக அமைந்துள்ளது. அப்பாடலில் இவர் தம்மை ஒரு பார்ப்பனன் என்று கூறிக்கொள்கிறார்.

    இப்புலவர் சோழ அரசன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தான் என்பவனோடு வட்டு ஆடினார். புலவர் வட்டாட்டத்தில் நகர்த்தும் காய்களைக் கையில் மறைத்து மாவளத்தானை ஏமாற்றினார். அதனைப் பார்த்துவிட்ட மாவளத்தான் தான் உருட்டி விளையாடிக் கொண்டிருந்த காயால் புலவரை அடித்தான்.

    அடிப்பட்ட புலவர் வக்கனையாகப் பேசினார். சோழர் குடியின் பெருமையைப் பேசினார். சோழர் குடியில் பிறந்த இவனது முன்னோர் பார்ப்பார் நோவன செய்யார். நீ பார்ப்பானாகிய என்னை. நோவச் செய்துள்ளாய் என்றார். அது கேட்ட மாவளத்தான் தன் குடியின் பெருமையை எண்ணித் தான் செய்தது இழிசெயல் எனக் கருதி நாணி நின்றான்.

    புலவர் ‘பிழை செய்தது நான், நீ பிழை செய்தது போல நாணினாய், தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்துக் கொள்ளுதல் உன் குடியில் பிறந்தவர்களுக்கு எளிது போலும், என்று சொல்லி மாவளத்தானைப் பாராட்டினார்.

    பறந்த பருந்தின் பற்று நகம் பட்டுத் தப்பிய புறா சோழன் சிபியின் மடியில் விழுந்தது. புறாவையும் காப்பாற்ற வேண்டும். பருந்துக்கும் இரை தர வேண்டும் எனக் கருதிய மன்னன் புறாவின் எடைக்குச் சமமாகத் தன்னையே நிறுத்துப் பருந்துக்குக் கொடுத்தான். சோழனின் முன்னோர் இத்தகைய அருள் உள்ளம் கொண்டவர் என்று புலவர் கூறினார்.

    அவிர் சடை முனிவர் என்னும் தொடர் ஞாயிற்றையும் தவ முனிவர்களையும் குறிக்கும் வகையில் விளக்கம் தரப்பட்டுள்ளது. உலகில் வாழ்பவர்களின் துன்பம் நீங்க முனிவர்கள் தவம் மேற்கொண்டனர். காற்றையே உணவாக உண்டு அவர்கள் வெயிலில் உலவுவர். ஞாயிறு உலகின் நலனுக்காக காற்று உணவு தந்து, வெயிலாகச் சுழல்கிறது. சிபியின் செயல் கண்டு முனிவர்களும் ஞாயிறும் வியந்தனவாம் என்பன போன்ற அறக்கருத்துக்கள் இவர் தம் பாடல்களில் இடம்பெறுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 19:18:03(இந்திய நேரம்)