தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • மழவை மகாலிங்கையர்

    (1815 – 1876)

    முனைவர் த.கலாஸ்ரீதர்
    உதவிப்பேராசிரியர்
    ஓலைச்சுவடித்துறை

    இவர் மதுரைக்குக் கிழக்கே உள்ள மழவராயனேந்தல் எனும் ஊரில் பிறந்தவர். வீரசைவ மரபினர். சென்னையில் திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் என்னும் வீர சைவர்களிடம் தமிழ்ப் பயின்றவர். இலக்கண அறிவு நிரம்பியவர். விரைந்து செய்யுள் இயற்றும் திறம்படைத்தவர். இசைப்பற்று மிக்கவர். அஞ்சா நெஞ்சத்தினர். பெரும் புலவர்களுடன் நட்புரிமையுடன் இருந்தவர். திருவாவடுதுறை ஆதீனவித்துவானாக இருந்த தாண்டவராய தம்பிரானுக்கு உயிர்த் தோழராக விளங்கியவர். ஆறுமுக நாவலர் மொழிபெயர்த்து உதவிய தமிழ் விவிலியத்தைப் படித்துப் பார்த்துப் பிழையற்று நன்றாக இருக்கின்றது என்று பாராட்டியவர். சென்னை மாகாணக் கல்லூரியின் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.

    பதிப்பு நூல்கள்

    1840இல் இவரால் பரிசோதிக்கப்பட்ட திருக்குறள் மூலம் சென்னைக் கல்வி களஞ்சிய அச்சுக்கூடத்தில் அச்சிட்டுப் பதிப்பிக்கப்பட்டது. 1856இல் இவரால் பாடப்பெற்ற மழவைச் சிங்காரச் சதகம் களத்தூர் ஆறுமுக முதலியாரது இலக்கணக் களஞ்சிய அச்சுக்கூடத்தில் அச்சிட்டுப் பதிப்பிக்கப்பட்டது. பெரிய புராணம் இவரால் நூதனமாகச் செய்யப்பட்ட உரையுடன் சரஸ்வதி விலாச அச்சுக்கூடத்தில் வீரணத்தோட்டம் கோவிந்த நாயகரால் அச்சடிக்கப்பட்டு சாலிவாகன சகம் 1767 குரோதி ஸ்ரீத்தில் அச்சிட்டுப் பதிக்கப்பட்டுள்ளது. இந்நூலுள் உரை செய்தவரைப் பாராட்டி வேதகிரி முதலியாரும் தாண்டவராயத் தம்பிரானும் பாடிய சாத்துக் கவிகள் சிவலிங்கம் போல் அச்சடிக்கப்பட்டுள்ளன. இவர் அருணாசல புராணம் எனும் நூலை 1850இல் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். மேலும், தமிழ் இலக்கணச் சுருக்கம் எனும் நூலை எழுதி 1879இல் பதிப்பித்துள்ளார். போதக வாசகம் என்னும் ஒரு நூலும் இவரால் செய்யப்பட்டது. இவர்தாம் முதன்முதலாகத் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையுடன் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து 1845இல் சென்னைக் கல்விக் கூடத்தில் அச்சிட்டுப் பதிப்பித்தவராவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:16:48(இந்திய நேரம்)