தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 3.3

  • 3.3 வாழ்க்கைத் துணை

    சிறப்புப் பொருந்திய இல்வாழ்க்கையின் பெருமைக்குத் துணையாக
    இருப்பது வாழ்க்கைத் துணை. இல்வாழ்க்கைக்குத் துணையாக
    இருப்பவள் இல்லாள். இல்வாழ்க்கையின் சிறப்பிற்கும் வெற்றிக்கும்
    இல்லாளே முழுப்பொறுப்பு உடையவள். இல்வாழ்க்கையில்
    அவளது     பங்கு மிகவும் இன்றியமையாதது. எனவே,
    இல்வாழ்க்கையைப் பற்றிக் கூறிய உடனேயே வாழ்க்கைத் துணை
    பற்றிக் கூறுகிறார். ‘ஒருவனது சாதனைகளுக்குப் பின்னே ஒரு
    பெண் இருக்கிறாள் என்பார்கள்‘. எனவே ஒருவனது வெற்றிக்குத்
    துணையாக நிற்பவள், அவனது துணைவியே.


    • பெண்ணுக்குச் சிறப்பிடம்

    இல்லாளாகிய வாழ்க்கைத் துணையினால், இல் வாழ்க்கைக்குக்
    கிடைக்கும் நன்மைகளை, ‘வாழ்க்கையின் துணை நலம்‘ எனப்
    பெயரிட்டுக் குறிப்பிடுகிறார். மனைவியை வாழ்க்கைத்துணை என்று
    குறிப்பிடுகிறார் வள்ளுவர். இது தமிழர் பெண்ணுக்குக் கொடுத்த
    சிறப்பினைப் புலப்படுத்தும். இதுவும் தமிழர் பண்பாட்டின்
    சிறப்பினை எடுத்து இயம்பும்.


    3.3.1 தகுதிகள்

    இல் வாழ்க்கையின், வெற்றிக்குப் பக்கபலமாக, தம் செயல்களால்
    தலைவனுக்கு உறுதுணையாக இருந்து செயல்படும் குடும்பத்
    தலைவியை-வள்ளுவர் ‘வாழ்க்கைத் துணை‘ என்று குறிப்பிடுகிறார்.


    • வரவுக்குத் தகுந்தசெலவு

    வள்ளுவரின் கருத்தின்படி, இல்வாழ்க்கையின் துணையாக
    விளங்கும் மனைவி முதல் நிலையில் தன் கணவனின்
    வருவாய்க்குத் தக்கவாறு செலவு செய்து தம் இல்வாழ்க்கையை,
    ஒரு கட்டுப்பாட்டுக்குள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

    பொருளாதாரம் என்பது ஒரு மனிதனின் தன்மையை, தரத்தை,
    நிலையை வெளிப்படுத்தும். இது சமுதாயத்திற்கும், பல
    சமுதாயங்கள் அடங்கிய நாட்டிற்கும் பொருந்தும். இரண்டாயிரம்
    ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர், பொருளாதாரத்தின்
    இத்தகைய இன்றியமையாத தன்மையை அறிந்திருந்தார்.
    இன்னொரு இடத்தில் கூட, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை
    (குறள் : 247) என்று குறிப்பிடுகிறார். அன்றைய சமுதாயம்
    அதை உணர்ந்திருக்க வேண்டும். எனவே வள்ளுவர், வாழ்க்கைத்
    துணை நலத்தில், முதல் குறளிலேயே, தன் கணவனது
    வருவாய்க்குத் தக்கவாறு செலவு செய்பவளே, இல் வாழ்க்கைக்குத்
    துணையாவாள் என்று கூறுகிறார்.


    மனைத் தக்க மாண்பு உடையாள் ஆகித், தற்கொண்டான்

    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

    (குறள்:51)


    (மனைத்தக்க = இல்லறத்திற்கு ஏற்ற மாண்பு/பெருமை,
    தற்கொண்டான் = தன்னை மணந்த கணவன்,
    வளத்தக்காள்
    = வருவாய்க்குஏற்ப வாழ்க்கை நடத்துபவள்)

    - என்பது குறள்.

    இல்வாழ்க்கையில், குடும்பத்தலைவனுக்குத் துணையாக அமையும்
    குடும்பத்தலைவி, நல்ல பண்புகளையும், நல்ல செயல்களையும்
    உடையவளாக இருக்க வேண்டும்; பொருளீட்டி வரும் கணவனின்
    வருவாய்க்குத் தக்கவாறு, தன் குடும்பச் செலவைச் செய்ய
    வேண்டும். இத்தகைய தன்மையுடையவளே, இல்வாழ்க்கையின்
    வெற்றிக்குத் துணையாக அமையும் இல்லாள் என்று குறிப்பிடுகிறார்
    வள்ளுவர்.

    ‘மனைத்தக்க‘ அதாவது ‘இல்லறத்திற்கு ஏற்ற‘ என்பதிலேயே,
    இல்லறத்திற்கு ஏற்ற இயல்புகள் சுட்டப்படுகின்றன அவற்றுள்
    ஒன்று குடும்ப வாழ்க்கை சிதையாமல் பாதுகாத்தலாகும். குடும்பம்
    சிதையாமல் பாதுகாக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
    வருவாய்க்குத் தக்கவாறு செலவு செய்ய வேண்டும். வருவாய்க்கு
    மிஞ்சி செலவழித்தார் குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும்
    துன்புறும் - சீரழிந்துவிடும்.

    வள்ளுவர் இன்னொரு இடத்தில் (குறள் :478), வருவாய் சிறிய
    அளவினதாக இருந்தாலும் செலவின் அளவு மிகுதி ஆகாதபடி
    செயல்பட்டால் எந்தக் கெடுதலும் வராது என்று குறிப்பிடுகிறார்.
    எனவே, வாழ்க்கையின் துணையாக அமையும் இல்லாளின்
    தகுதிகளில் ஒன்று வருவாய்க்குத் தகுந்த வகையில் செலவிடல்
    என்கிறார் வள்ளுவர்.


    3.3.2 பண்புகள்

    இல்லாளுக்கு இருக்க வேண்டிய சிறப்புகளுள் ஒன்று,
    குடும்பத்திற்குப் பெருமை தரும் நல்ல பண்புகளைக்
    கொண்டிருப்பதாகும். நல்லபண்புகள் நிறைந்த ஒருத்தி
    மனைவியாக அமைந்துவிட்டால், அதைவிடச் சிறப்பு இந்த உலகில்
    வேறு எதுவும் இல்லை. பெண்களுக்கு உரிய அத்தகைய நல்ல
    பண்புகளில் முதன்மையானது கற்பு என்கிறார் வள்ளுவர்.


    • கற்பு

    கற்பு இல்லாத மனைவியால், பல குடும்பங்கள் அழிந்தன, பல
    பேரரசுகள் வீழ்ச்சியடைந்தன. பெண்ணுக்குரிய சிறந்த சொத்து
    (asset) கற்பு. எனவே, ஒருவனுக்குத் தன்னுடைய கற்புடைய
    மனைவிக்கு இணையான ஒரு பொருள் வேறு எதுவும் இல்லை
    என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.


    பெண்ணின் பெருந்தக்க யாஉள கற்பு என்னும்
    திண்மை உண்டாகப் பெறின்


    (குறள் : 54)


    (பெருந்தக்க = பெருமைஉடையது, யாஉள = எதுஉள்ளது,
    திண்மை = உறுதிநிலை, பெறின் = பெற்றால்)

    - என்பது குறள்.

    கற்பு என்பது மனத்திண்மை, உறுதியான மனம். இத்தகைய உறுதி
    வாய்க்கப்பெற்ற இல்லாளை விடவும், பெருமை உடைய ஒரு
    பொருள் இந்த உலகத்தில் இல்லை என்பது வள்ளுவர் கருத்து.
    ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் மரபில் கற்புக்கு மிகுந்த சிறப்பு
    கொடுக்கப்பட்டது. அந்த மரபின் அடிப்படையிலேதான் வள்ளுவர்,
    கற்பிற்கு இவ்வளவு சிறப்பு கொடுத்துள்ளார்.

    • கற்பின் வலிமை
    கற்புடைய பெண், கணவனைத் தவிர பிற யாரையும்
    தொழமாட்டாள். கடவுளைக் கூடத் தொழமாட்டாள். அத்தகைய
    கற்புடைய பெண், மழையைப் பார்த்து, ‘மழையே நீ இப்பொழுது
    பெய்‘ என்று சொன்னாலும் அது பெய்யும். அந்த அளவுக்கு
    அவள் கற்பு வலிமை உடையது இக் குறட்செய்தியை
    ‘திருவள்ளுவரும் இறைமையும்‘ என்ற பாடத்தில் பகுதி 2.2.3-இல்
    ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.

    • கண்ணகி
    வள்ளுவர் கூறும் கற்பின் வலிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு,
    சிலப்பதிகாரக் கண்ணகியின் வரலாறு. கண்ணகியின் கதையை
    நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். எனினும் அவளுடைய
    கற்புத் திறத்தை வெளிப்படுத்தும் அவளுடைய வாழ்க்கை
    நிகழ்ச்சிகளின் சுருக்கமான தொடரினைப் பார்ப்போம்.
    கண்ணகியின் கணவன் கோவலன், ஒழுக்கம் இல்லாதவன்.
    கோவலன், மாதவி எனும் நடனப் பெண்ணை விரும்பி, அவளிடம்
    சென்று அங்கேயே தங்கிவிடுகிறான். அவளிடம் தன் செல்வங்களை எல்லாம் இழக்கிறான். அதன் பிறகு, கண்ணகியிடம் மீண்டும்
    வருகிறான்.

    கண்ணகியும், கோவலனும் மதுரை என்னும் பாண்டிய நாட்டின்
    தலைநகருக்குச் செல்கிறார்கள். அங்குத் தன் மனைவி கண்ணகியின்
    கால்சிலம்பை விற்கச் செல்கிறான் கோவலன். அப்பொழுது,
    மன்னனின் மனைவியின் கால் சிலம்பைத் திருடி விற்க
    முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொலை செய்யப்படுகிறான்.
    செய்தி அறிந்த கண்ணகி, மிகுந்த அதிர்ச்சி அடைகிறாள்.
    உடனே மன்னன் அவைக்குச் சென்று தன் கணவன் கள்வன்
    அல்லன். அவன் விற்க முயன்றது தன் சிலம்பையே என்று
    மன்னன் அவையில் நிரூபிக்கிறாள். தவறை உணர்ந்த மன்னன்
    உயிர் துறக்கிறான். பிறகு, கண்ணகி நேர்மையற்ற முறையில்
    தன் கணவன் கொலை செய்யப்பட்டதினால் ஏற்பட்ட கோபத்தினால், மதுரையை எரிக்கிறாள். இயற்கைச் சீற்றத்தால்
    அல்லது, பகைவனின் படையெடுப்பால் அழியக் கூடிய ஒரு
    நகரைத் தன் கற்பின் வலிமையால் ஒரு பெண் அழிக்கிறாள்,
    என்பது சிலப்பதிகாரத்தின் கதை.

    இதிலிருந்து பண்டைத் தமிழர் கற்பிற்குக் கொடுத்த சிறப்பு
    புரிகிறதல்லவா? கற்பு தமிழர் வாழ்வியல் கோட்பாடுகளில்
    முதன்மையானது.     தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில்
    இன்றியமையாயது.

    மேற்குறிப்பிட்ட நல்ல பண்புகளை உடைய வாழ்க்கைத் துணை
    அமைவது ஒருவனுக்குச் சிறப்பு என்பது வள்ளுவர் கருத்து.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - I


    1.


    இல்லறத்தை வள்ளுவர் எவ்வாறு
    வரையறுக்கின்றார்?

    2.

    இல்வாழ்க்கைத் துணைக்கு உரிய தகுதிகளாக
    வள்ளுவர் கூறுவன யாவை?

    3.

    முயல்வாருள் எல்லாம் யார் தலைமை உடையவன்
    என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?

    4.

    கற்பின் வலிமையை வள்ளுவர் எவ்வாறு
    விளக்குகிறார்?


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:59:10(இந்திய நேரம்)