தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.1

  • 4.1 அன்பு

    வாழ்க்கைத் துணை மீது கொண்ட அன்பும், புதல்வர் மீது
    கொண்ட அன்பும் இல்வாழ்க்கைக்கு அரண் சேர்ப்பன, அதே
    போல், சமுதாயத் தொடர்பு கொள்ளும் இல் வாழ்வானுக்கு,
    ‘அன்பு‘ ஒரு சிறந்த பண்பாக அமைய வேண்டும் என
    வள்ளுவர் கருதுகிறார். அந்த அடிப்படையிலே வள்ளுவர் தம்
    கருத்துகளைக் கூறுகிறார்.

    • சமயங்களும் அன்பும்
    இந்த உலகத்தில் அன்பு என்பது எவ்வளவு முக்கியமானது
    என்பதனைப்     பல     சமயங்களும், அறிஞர்களும்
    குறிப்பிட்டுள்ளார்கள். இந்து சமயத்தில் குறிப்பாகச் சைவ
    சமயத்தில், அன்புதான் கடவுள். ‘அன்பே சிவம்‘ என்பது
    அவர்கள் கோட்பாடு. கிறித்தவர்களும், ‘கடவுள் அன்பாய்
    இருக்கிறார்‘ (God is Love) என்று குறிப்பிடுகிறார்கள்,
    இசுலாமும்,     ‘மனிதனிடம் அன்பு செலுத்துகிறவனுக்கே
    இறைவன் கருணை காட்டுவான்‘ என்கின்றது. ‘அனைத்து
    உயிர்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்‘ என்பது சமண
    சமயக் கோட்பாடு. எனவே, அன்பு என்பது அனைவருக்கும்
    பொதுவானது. உலகின் இயக்கமும், உயிர்களின் பிணைப்பும்
    அன்பினாலேயே அமைந்துள்ளன.


    அன்பின் பெருமையை உணர்ந்தவர் வள்ளுவர். எனவே, அன்பு
    எத்தகைய தன்மையை உடையது; அது இல்வாழ்வானுக்கு
    எவ்வாறு     பயன்படும் என்பதைச் சுட்டுகிறார். மேலும்,
    இல்வாழ்வான் தான் சார்ந்த சமுதாயத்தோடு தொடர்பு கொள்ளும்
    போது அன்பை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதையும்
    வள்ளுவர் குறிப்பிடுகிறார்.


    4.1.1 அன்பின் எல்லை

    அன்பு என்பது ஊற்றுப்போல் தானாக வெளிப்படும் ஓர் உணர்வு.
    ஆள் பார்த்து, பொருள் பார்த்து, அது தோன்றுவதில்லை. அது
    வெளிப்படுவதையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. அன்புக்கு
    எல்லையும் கிடையாது. எனவேதான் வள்ளுவர், அன்பைப் பற்றிக்
    குறிப்பிடும் பொழுது,


    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.


    (குறள்:71)


    (தாழ் = தாழ்ப்பாள் (Lock), ஆர்வலர் = ஆர்வமுடையவர்;
    புன்கணீர் = புல்லிய கண்ணீர் ; பூசல் = வருத்தம்,
    தரும்
    = வெளிப்படும்)

    என்கிறார்.

    ஒருவரது அன்பிற்கு - அதைப்பிறர் அறியாதவாறு
    அடைத்துவைக்கும் - தாழ்ப்பாள் உளதோ? தம்மால் அன்பு
    செய்யப்பட்டாரது துன்பங்களைக் காணும் பொழுது, தம்மை
    அறியாமலே, அன்புடையாரின் கண்கள், சிந்தும் நீரே அவர்
    உள்ளத்தில் உள்ள அன்பை எல்லாருக்கும் தெரியப்படுத்தும்
    என்கிறார் வள்ளுவர். அன்பு என்பது எல்லையற்ற,
    கட்டுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒன்று என்பது அன்புக்கு
    வள்ளுவர் கொடுக்கும் விளக்கம்.


    அன்பின் பெருமையை உணர்ந்த வள்ளுவர், ‘அன்பு உடையார்,
    எல்லாம் உடையார்‘ என்று கூறுகிறார். அன்பு ஆற்றல் வாய்ந்த
    ஒரு சக்தி, அன்பு, பிறரிடம் விருப்பத்தையும், அவ்விருப்பம்
    நட்பையும் ஏற்படுத்தும். இத்தகைய அன்பின் பிணைப்பால்
    இல்வாழ்க்கை எனும் சக்கரம் சுழல்கிறது. இத்தகைய அன்பு
    சமுதாயத்திலுள்ள பிறரின் நட்பை ஏற்படுத்துகிறது. இதனால்
    நல்லுறவு கொண்ட ஒரு சமுதாயம் அமைகிறது என்பது
    வள்ளுவரின் கருத்து.


    4.1.2 அன்பிலார் வாழ்க்கை

    இல்வாழ்க்கையில் அன்பு என்பது எத்தகைய சிறப்பு வாய்ந்த
    பண்பாகத் திகழ்கிறது என்று கூறிய வள்ளுவர், அன்பு
    இல்லாதார் வாழ்க்கை எத்தகையது என்பதையும் சுட்டுகிறார்.

    பொதுவாக, உடலிலுள்ள உறுப்புகள் என்று குறிப்பிடும் பொழுது,
    கண்ணுக்குப் புலப்படுகின்ற உறுப்புகளையே கூறுவது மரபு. கை
    ஓர் உறுப்பு, கண் ஓர் உறுப்பு என்று சொல்லுகிறோம்.
    இவையெல்லாம் கண்ணுக்குப் புலப்படும் புற உறுப்புகள்.
    ஆனால், கண்ணுக்குப் புலப்படாத அக உறுப்பு ஒன்றையும்
    குறிப்பிடுகிறார் வள்ளுவர். அதனை அன்பு என்று சுட்டுகிறார்.
    கை, கால் போன்ற புற உறுப்புகளைப் போல, அன்பும் ஒர்
    உறுப்பே அது அக உறுப்பு. உறுப்புகளாகிய கை, கால்கள்
    பயன்தரும் வகையில், இயங்குவதற்கு அக உறுப்பாகிய அன்பு
    ஒரு காரணம் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். எனவே தான்,


    புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - யாக்கை
    அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு


    (குறள்: 79)


    (புறத்து = புறம்பான, உறுப்பு = அவயம், யாக்கை = உடல்,
    அன்பு இலவர்க்கு = அன்பு இல்லாதவர்களுக்கு)

    உடலின், புறத்துள்ள உறுப்புகள் கை, கால் முதலியன. அகத்து
    அதாவது உள்ளத்துள் உள்ள ஓர் உணர்வு அன்பு. அதையே
    அக உறுப்பு என்கிறார் வள்ளுவர்.     உறுப்புகளால்
    உருவாக்கப்பட்ட இந்த உடலில், அகத்து உறுப்பாகிய, அன்பு
    இல்லா விட்டால், புற உறுப்புகள் என்ன     பயனை
    விளைவிக்கப்போகின்றன? புற     உறுப்புகள் அன்பால்
    இயக்கப்பட்டால்தான் பயனுடைய வாழ்க்கை அமையும்
    என்கிறார் வள்ளுவர்.

    புற உறுப்புகளே, ஒரு மனிதனின் செயல்களுக்குக் காரணமாக
    அமைகின்றன. அச்செயல்கள், நன்மையை விளைவிக்கும் அல்லது
    நல்ல பயனை விளைவிக்கும் செயல்களாக அமைவதற்கு,
    ஒருவனின் உள்ளத்திலுள்ள அன்பே காரணமாகும் என்கிறார்
    வள்ளுவர். இல்வாழ்க்கையில் ஈடுபடுகின்ற ஒருவன், தனக்கும்
    பிறருக்கும் நன்மையை அல்லது பயனை விளைவிக்க
    வேண்டுமென்றால் அவன் உள்ளத்தில் அன்பு நிறைந்திருக்க
    வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து.

    பிறரிடம் அன்பு இல்லாதவர்கள் சுயநலம் (selfishness)
    உடையவர்களாக இருப்பார்கள். அவர்களது செயல்கள்
    பிறருக்குத் நன்மை தராது.

    எனவே அன்பிலாதார் வாழ்க்கை, தமக்கும் பிறருக்கும் தீமை
    தருவதாகவே அமையும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:00:31(இந்திய நேரம்)