தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.2

  • 4.2 இனிய சொல்

    ஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் அன்பை எவ்வாறு
    உணர்த்துவது? எவ்வாறு வெளியிடுவது? முதல் நிலையில், நாம்
    பேசும் இனிமையான பேச்சின் மூலம் வெளிப்படுத்துவோம். நமது
    செயல்மூலம் அவர்கள் மீதுள்ள அன்பைக்காட்டுவோம். எனவே,
    பிறர் மீது அன்பு செலுத்துங்கள்; அதற்கு அடையாளமாக
    இனிமையாகப் பேசுங்கள் என்கிறார் வள்ளுவர். வாழ்க்கை
    வெற்றிகரமாக அமைவதற்கு, குடும்பத்தாரிடம் மட்டுமல்லாமல்,
    பிறரிடமும் இனிமையாகப் பேசவேண்டும். வாழ்க்கையில்
    முகமலர்ச்சியுடன்     இருப்பதும், பிறரிடம் இனிமையான
    சொற்களைச் சொல்லிப் பழகுவதும் மிகவும் இன்றியமையாதவை.
    இவற்றை அடிப்படையாகக் கொண்டு வள்ளுவரின். ‘இனியவை
    கூறல்‘ என்ற அதிகாரம், இனிமையான சொற்களைக் கூறுவதின்
    சிறப்பைக் கூறுகின்றது.


    4.2.1 ஈதலினும் சிறப்பு

    சில நேரங்களில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டிற்குச்
    செல்வோம். அப்பொழுது அவர்கள் நம்மை அன்பாக வரவேற்று,
    அவர்கள் வீட்டில் உணவு அருந்திச் செல்லுமாறு, மிகவும்
    அன்புடன் வற்புறுத்துவார்கள். அப்பொழுது நாம், அவர்களிடம்
    என்ன சொல்வோம்? ‘மிகுந்த நன்றி, நீங்கள் இவ்வளவு
    அன்பாகச் சாப்பிடச் சொன்னதே எனக்குச் சாப்பிட்டது போன்ற
    நிறைவைக் கொடுத்தது. இன்று மன்னித்துக் கொள்ளுங்கள்,
    இன்னொரு நாள் கட்டாயம் சாப்பிடுவேன்’ என்று கூறுவோம்.
    இல்லையா? ‘அவர்கள் அன்பாக வரவேற்றார்கள். அன்பாகச்
    சாப்பிடச் சொன்னார்கள்‘ என்று எதை வைத்துச் சொல்கிறோம்?
    அவர்கள் நம்மிடம் கூறிய இனிய சொற்கள். இல்வாழ்க்கையில்
    ஈடுபட்டோர், இத்தகைய இனிய சொற்களால் நல்ல
    நண்பர்களைப் பெறுவார்கள். இனிமையாகப் பேசுவது மனித
    நேய உணர்வை வெளிப்படுத்தும். இரண்டு வரிகளில்
    இனிமையாகப் பேசுதலின் சிறப்பினை குறிப்பிடுகின்றார்.


    அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின்.


    (குறள்: 92)


    (அகன் = மனம், அமர்ந்து = மலர்ந்து)

    ஒருவரைக் கண்டபொழுதே, முகமலர்ந்து இனிய சொற்களைச்
    சொல்லும் இயல்புடையவனாக இருந்தால், அது, மனம்உவந்து
    ஒரு பொருளை ஈவதை விடச் சிறப்பு உடையது என
    வள்ளுவர் கூறுகின்றார்.

    ஒருவனிடம், இனிய சொல் இயல்பாக அமைந்து இருக்கின்ற
    ஒன்று. ஈவது என்பது பொருள் சேமிப்பில் இருப்பதைப்
    பொறுத்து அமைவது. எனவே முகமலர்ச்சியோடு இனிய
    சொற்களைச் சொல்லுவதே, மனமகிழ்ச்சியுடன் தானம்
    கொடுப்பதை விடவும் சிறந்தது என்கிறார் வள்ளுவர்.
    உள்ளத்தில் உள்ளதுதான், சொற்களாக வெளிவரும் என்பார்கள்.
    பிறர்மீது அன்புடையார் உள்ளமே, இனிய சொற்களை
    உதிர்க்கும் என்கிறார் வள்ளுவர்.


    4.2.2 வறுமை இல்லை

    பிறரிடம் இனிய சொற்களைச் சொல்பவர்கள் செயல், ஈகையை
    விடச் சிறந்தது என்று கூறிய வள்ளுவர், இனியசொல்லை
    உடையவனுக்கு வறுமையும் வராது என்கிறார்.

    வள்ளுவர், நல்குரவு (வறுமை) என்ற அதிகாரத்தில்,
    வறுமையினால் ஏற்படும் பசியினால் வருந்தும் ஒருவன்,
    மருந்துகளாலோ, பிறவற்றாலோ நெருப்பின் உள்ளே கிடந்து
    உறங்குதலும் கூடும். ஆனால், பசியினால் வருந்தும் ஒருவனால்
    கண்மூடித் தூங்கக்கூட முடியாது என்று கூறுகிறார் (குறள் : 1049).
    இவ்வாறான கொடுமை வாய்ந்த வறுமையாகிய துன்பத்திலிருந்து
    தப்பவேண்டுமா? இனிமையாகப் பேசுங்கள் என்று குறிப்பிடுகிறார்
    வள்ளுவர்.


    துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
    இன்புறூஉம் இன்சொல வர்க்கு


    (குறள்: 94)


    (துன்புறூஉம் = துன்பம் தரும், துவ்வாமை = வறுமை,
    இல்லாகும்
    = இல்லாமல் போகும், மாட்டும் = இடத்தும்,
    இன்புறூஉம் = இன்பம் தரும்)

    எல்லாரிடத்திலும்,     இன்பம் தரும் இனிய சொல்லைச்
    சொல்பவர்களுக்குத் துன்பம் தரக்கூடிய வறுமை இல்லை
    என்கிறார் வள்ளுவர்.

    பிறரிடம் அவர்கள் மகிழ்ச்சியடையும் படியாக இனிமையாகப்
    பேசிப்பழகுகின்றவர்களுக்கு அவர்களின் அன்பைப் பெற்ற நல்ல
    நண்பர்கள் பலர் இருப்பார்கள் அவர்கள் நல்ல நண்பர் ஒருவர்
    வறுமையில் வருந்த அனுமதிக்க மாட்டார்கள். எனவே,
    பலநிலையிலும் அவர்களது இன்னல்களில் உதவுவார்கள்.
    அதனால் அவர்களுக்கு வறுமை எனும் துன்பம் வந்து சேராது.
    இல்வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர் பிறரிடம் இனிமையாகப் பேச
    வேண்டும். அதனால் நன்மைகள் பல விளையும் என்கிறார்
    வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:00:35(இந்திய நேரம்)