தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.4

  • 4.4 ஒழுக்கம்

    ‘நல்ல நெறிகளைப் பின்பற்றி நடத்தல்‘ ஒழுக்கம் எனப்படும்.
    ஒழுக்கத்தைத் தமிழர்கள் சிறப்பு வாய்ந்த பண்பாட்டுக் கூறாகக்
    கொண்டிருந்தனர். ஒழுக்கம்பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள்
    இதை மெய்ப்பிக்கும். இல்வாழ்க்கையில் ஈடுபடுவாரின் ஒழுக்கம்,
    ஒரு குடும்பத்தை மட்டுமல்ல ஒரு சமுதாயத்தையே மேம்பாடு
    அடையச் செய்யும்.

    • சமுதாயமும் ஒழுக்கமும்
    இயந்திர மயமாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்,
    எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, விபச்சாரம்,
    வன்முறை முதலியன மிகுதியாகிக் கொண்டே இருக்கின்றன.
    இவற்றிற்கு     என்ன     காரணம் என்று, சமுதாயச்
    சிந்தனையாளர்களையோ, அல்லது சமுதாயச் சீர்திருத்த
    வாதிகளையோ கேட்டால், அவர்கள் கூறும் ஒரே விடை ‘தனி
    மனிதனின் ஒழுக்கக் குறைவே‘என்பதாகும்.

    • தனிமனிதனும் ஒழுக்கமும்
    தனி     மனிதனின்     ஒழுக்கம், சமுதாயத்தின் குறை
    நிறைகளுக்கெல்லாம் காரணமாக அமைகின்றது. இல்வாழ்க்கையில்
    வாழும் தனிமனிதன் சமுதாயம் எதிர்பார்க்கும் ஒழுக்க நெறியைப்
    பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால், அவன் வாழும்
    சமுதாயமும் ஒழுக்கம் உடையதாக அமையும் என்று வள்ளுவர்
    கருதினார். இவ்வாறு வள்ளுவர் கருதுவதற்கு உரிய காரணம்
    என்ன? அவர் வாழ்ந்த தமிழ்ச் சமுதாயம் அவ்வாறு கருதி
    வாழ்ந்தது. அது, அந்தச் சமுதாயத்தின் பண்பாடு. எனவே
    சமுதாயத்தில் ஓர் அங்கமாகிய இல்வாழ்வான், இல்வாழ்க்கையில்
    ஈடுபடும் பொழுது மேற்கொள்ளும் ஒழுக்கத்தின் சிறப்பினையும்,
    பயனையும், ஒழுக்கம் இன்மையால் வரும் தீமைகளையும்,
    எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.


    4.4.1 ஒழுக்கமும் ஒழுக்கமுடையானும்

    வாழ்க்கையில் பின்பற்றப்படும் நல்ல நெறியையே ஒழுக்கம்
    என்கிறோம். நல்ல பண்புநலன்களை உடையவனை, நல்ல
    ஒழுக்கம் உடையவன் என்று குறிப்பிடுகிறோம். ஒருவனது நல்ல
    நடத்தை, அவனை ஒழுக்கம் உடையவனாகக் காட்டுகிறது.
    எனவே ஒருவன் ஒழுக்கம் உடையவனா, இல்லையா என்பதை
    அவனது நடத்தையின் வாயிலாகவே அறிந்து கொள்ள முடியும்.

    ஒருவன் நடுவு நிலைமை உடையவனாக இருந்தால் அவனை
    ஒழுக்கம் உடையவன் என்கின்றோம். பிறன் மனைவியை
    விரும்பாத இயல்பு உடையவனை, ஒழுக்கம் உடையவன்
    என்கின்றோம். கற்புடைய ஒரு பெண்ணை, ஒழுக்கம் உடையவள்
    என்று கூறுகின்றோம். எனவே ஒருவரது நல்ல நடத்தையே
    ஒருவரை ஒழுக்கம் உடையவர் என்று அடையாளம் காட்டுகிறது.
    அதனால்,     ஒழுக்கத்தின் பெருமையையும் ஒழுக்கம்
    இல்லாமையால் ஏற்படும் இழிவையும் உணர்த்த அறிவுடையோர்
    ஒழுக்கத்திலிருந்து தவற மாட்டார்கள் என்பதனை,


    ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக்கு அறிந்து


    (குறள் : 136)


    (ஒல்கார் = தளரார் (தவறமாட்டார்), உரவோர் = மனவலிமை
    உடையவர், இழுக்கம் = இழிவு/பழி, ஏதம்படுபாக்கு - குற்றம்
    வருதலை)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

    இல்வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்குத் தாம் சார்ந்த
    குடும்பத்தினாலும், தொடர்பு கொள்ளும் சமுதாயத்தினாலும்
    பல்வேறுவகையான சோதனைகள், துன்பங்கள், தொல்லைகள்
    வரும். அப்பொழுதெல்லாம், ஒழுக்கம் தவறுவதினால் ஏற்படும்
    குற்றத்தை - பழியை நினைத்துப் பார்த்து ஒழுக்கத்திலிருந்து
    அவர்கள் பிறழ்ந்து தவறுசெய்யமாட்டார்கள் என்கிறார்
    வள்ளுவர்.

    நன்னடத்தை என்பது ஒருவனது பண்பட்ட வாழ்விற்கும்,
    புகழுக்கும் காரணமாக அமைகிறது; சமுதாயத்திற்கும் பெருமை
    தருகிறது; பயன் அளிக்கிறது.


    4.4.2 ஒழுக்கமும் உயிரும்

    மனிதனின் விலைமதிக்க முடியாத சொத்துகள் இரண்டு. ஒன்று
    ஒழுக்கம். இன்னொன்று உயிர். அதில் எந்த ஒன்றை இழந்தாலும்
    மீண்டும் பெறமுடியாது என்று குறிப்பிடுவார் தமிழ் அறிஞர்
    கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள். வள்ளுவர் இரண்டையும் ஒப்பிட்டு,
    ஒழுக்கம் உயிரைவிட உயர்ந்தது என்று கருதினார். இதனை


    ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.


    (குறள்: 131)


    (விழுப்பம் = மேன்மை ; ஓம்பப்படும் = போற்றப்படும்)

    என்று குறிப்பிடுகின்றார்.

    ஒழுக்கமே, எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால்,
    அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும் என்பது
    இந்தக் குறளின் பொருள். அதனால், தனிமனிதன் மட்டுமல்ல,
    அவன்சார்ந்த சமுதாயமும் பயன்பெற்று மேம்படும்.

    எனவே, ஒழுக்கத்தை உயிரைவிட மலோகக் கருதிக் காப்பாற்ற
    வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஏன் என்றால் அவர் வாழ்ந்த
    சமுதாயம் ஒழுக்கத்தை உயிரை விட மலோகக் கருதி வாழ்ந்தது.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    அன்பு இல்லாதவர் வாழ்க்கை எதற்கு ஒப்பானது
    என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?

    2.

    ஈதலைவிட சிறப்பான ஒன்று எது?

    3.

    நடு நிலையாளன் என்று யாரைக் குறிப்பிடுவோம்?

    4.

    இல்வாழ்வான் பின்பற்றும் நடுவுநிலைமை எவ்வாறு
    இருக்க வேண்டும்?

    5.

    ஒழுக்கம் எதைவிட உயர்ந்தது? ஏன்?


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:00:45(இந்திய நேரம்)