தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • பவளவண்ணப்பெருமாள் கோவில்
    திருப்பவளவண்ணம்
    சிறப்புக்கள்
    1. எம்பெருமானின்     நிறத்தைக்கொண்டு     மங்களாசாசனம்
      செய்யப்பட்ட ஸ்தலம் இது ஒன்றுதான். எம்பெருமான்
      நான்குயுகங்களிலும்தான் கொண்ட 4 வர்ணங்களை இங்கு
      காட்டிக்கொள்வதாக ஐதீஹம்.

      இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே பச்சை
      வண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது
      இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் அமைந்துள்ளது.
      காலாண்டார் கோவிலில் பவள வண்ணரும் அதற்கெதிரில்
      அமைந்துள்ள பெரிய கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர்
      கோவிலும் அமைந்துள்ளது. இவ்விரண்டு பெருமாள்களையும்
      கூர்ந்து நோக்கினால் வண்ண வேறுபாடுகளை உணரலாம்.

    2. பச்சை வண்ணர் கோவிலை திருமங்கை மங்களாசாசனம்
      செய்யவில்லை. இருப்பினும் இங்கு வரும் பக்தர்கள் பவள
      வண்ணரைச் சேவித்துவிட்டு பச்சை வண்ணரையும் சேவித்துச்
      செல்வதையே மரபான கொள்கையாகக் கொண்டுள்ளனர். இந்த
      பச்சை வண்ணர் ஆதிசேடன் மீது அமர்ந்த திருக்கோலத்தில்
      பரமபத நாதனாக எழுந்தருளியுள்ளார். இவர் பிரும்மரிஷிக்கு
      காட்சி கொடுத்ததாக ஐதீஹம்.

    3. இக்கோவில்கள் சென்னை ஸ்ரீ கரலபாடி ஆழ்வாரய்யா சாரீட்டீஸ்
      எனப்படும் அறக்கட்டளை நிர்வாகத்திற்குட்பட்டது. சுமார்
      நூறாண்டுகட்குமுன் வைணவ சம்பிரதாயத்தில் இருந்த கரலபாடி
      ஆழ்வாரய்யாவின் கனவில் தோன்றி பழுதுற்ற இத்தலங்களைப்
      புதுப்பிக்க எம்பெருமானே கட்டளை இட்டதாகவும் செய்தி.

    4. திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்ட
      ஸ்தலம்.

    5. அச்வினி தேவதைகட்கும், பார்வதி தேவிக்கும் பெருமாள் காட்சி
      கொடுத்ததாக ஐதீஹம்.

    6. பிள்ளைப்     பெருமாளயங்கார்     தமது     நூற்றெட்டு
      திருப்பதியந்தாதியில் இதே வண்ணமயக்கை நிரல்படுத்தி
      இத்தலத்திற்குப் பாடல் இட்டுள்ளார்.

      எம்பெருமானே நீ நான்கு யுகங்களில் நான்கு வண்ணங்களில்
      திருமேனி கொண்டிருந்தாய். அதுவும் சரியான காரணத்தோடு
      அவ்வகை வண்ணம் கொண்டிருந்தாய்.

      கிரேதாயுகத்தில் மக்களிடையே சத்துவ குணம் நிரம்பி இருந்தது.
      அந்த அநுபவத்திற்கேற்றவாறு நீயும் பால் நிறவண்ணங்கொண்ட
      திருமேனி பெற்றிருந்தாய். திரேதாயுகத்திலும் துவாபர யுகத்திலும்
      ராஜோ குணமும், தமோ குணமும் கலந்தவராய் மக்கள்
      இருந்தனர். அதில் நீயும் கருநீலம் கலந்த பச்சை நிறத் திருமேனி
      பெற்றிருந்தாய்.

      கலியுகமோ தமோ குணம் (நேரத்திற்கேற்ற குணம்) கொண்ட
      யுகமாக இருப்பதால் நீயும் காளமேகம் போன்ற திருமேனி
      பெற்றாய்.

      இப்போது அவரின் பாடலைப் பாருங்கள்

      கண்டறிந்தும் கேட்டறிந்தும் தொட்டறிந்தும் காதலால் உண்டறிந்தும் மோந்தறிந்தும் முய்யேனே - பண்டைத்
      தவள வண்ணா, கார்வண்ணா, சாமவண்ணா, கச்சிப்
      பவள வண்ணா நின் பொற்பாதம்.

      கச்சியில் இருக்கும் பவள வண்ணனே, நின் பொற்பாத
      மகிமைகளை     பக்தியென்னும்     காதலால்     கண்களால்
      கண்டுணர்ந்தும், காதாற்     கேட்டுணர்ந்தும்     கையால்
      தொட்டுணர்ந்தும், நாவினால் சுவைத்தறிந்தும் (பாசுரங்களால்
      சேவித்து உணர்தல்) மூக்கினால் முகந்துணர்ந்தும் ஈடேறகில்லேன்.
      நீதானே முந்திய யுகங்களில் வெண்ணிற வண்ணனாகவும், கருநிற
      வண்ணனாகவும், சாமநிற வண்ணனாகவும் வந்தாயல்லவா பவள
      வண்ணனே என்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:35:55(இந்திய நேரம்)