Primary tabs
-
5:8 தொகுப்புரை
மனித ஆற்றலில் தளராத நம்பிக்கையும், இவ்வுலக வாழ்க்கையில்
பிடிப்பும் கொண்டவர் திருவள்ளுவர். எனவே தான், நூற்று
முப்பத்து மூன்று அதிகாரங்கள் கொண்ட திருக்குறளுள்,
நூற்றுப்பதினைந்து அதிகாரங்களுக்குக் குறையாமல் - அதாவது
எட்டில் ஏழு பங்கில் - இவ்வுலக வாழ்க்கைச் சிறப்பும்,
இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டியனவும் பற்றிக் கூறியுள்ளார்.
துறவற இயலில் பதின்மூன்று அதிகாரங்களே காணப்படுகின்றன.
வள்ளுவரின் கோட்பாட்டின்படித் துறவறம் என்பது
இல்லறத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று அன்று. இல்லறத்தைப்
பழித்து, வெறுத்து, ஒதுக்கி, அதற்குப் பதிலாக ஏற்க வேண்டிய
ஒன்றாகத் துறவை அவர் காட்டவில்லை. மாறாக, வாழ்க்கைச்
சுகங்களில் அளவற்ற பற்று வைப்பதால் ஏற்படும் விளைவுகளைத்
தவிர்த்து, உலகியல் இன்பங்களை முறையாகத் துய்க்க உதவும்
துணையாகத்தான் துறவை விவரிக்கிறார் வள்ளுவர்.