தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • பெருமாள்கோவில் - ஆழ்வார்திருநகரி


    சிறப்புக்கள்

    1. ஆதிநாதர் கோவில்     ஒரு     காலத்தில்     தாமிரபரணி
      ஆற்றங்கரையிலிருந்தது. பின்னர் கோவிலையும் ஊரையும்
      பெரிய தாக்கும் பொருட்டு வடக்கே கரையை தள்ளி வைத்து
      அலகல்லும் படித்துறையும் கட்டினர். ஸ்ரீ ஆதிநாதர் கோவிலும்
      புளியமரமும் அவற்றை ஒட்டி இருந்தன. அப்புளி இன்றும்
      பொந்தாயிரம் புளியாயிரம் என்ற பழமொழிக் கொப்ப பல
      பொந்துகளுடன் முதிர்ந்துள்ளது: இன்றும் ஸ்ரீ நம்மாழ்வாருக்கு
      பிடிக்காத காரியங்கள் இந்த தலத்தில் நடந்தால் இப்புளிய
      மரத்திலிருந்து நிணநீர் வடிவது கண்கூடு.

      நம்மாழ்வாரோடு இந்தப்புளி (லட்சுமணன்) தொடர்பு கொண்டது
      போல்     திருக்கண்ணங்குடியில்     திருமங்கையாழ்வாருடன்
      உறங்காப்புளி தொடர்பு கொண்டு விட்டது.

    2. ஆழ்வார்கள் என்றாலே அது ஸ்ரீ நம்மாழ்வாரைத்தான்
      குறிக்கும். சின் முத்திரையோடு சிறு குழவியாக தவழ்ந்து வந்து
      இந்தப் புளியமரத்தின் பொந்தில் அமர்ந்த நம்மாழ்வார் 16
      ஆண்டுகள் கழித்து வாய் திறந்து திருவாய் மொழி
      மலர்ந்தருளினார். வேதத்தின் சாரத்தை திருவாய் மொழியாக
      நம்மாழ்வார் வடித்துக்கொடுத்த இடம்தான், இது,

      ஸ்ரீராமன் மட்டும் ஆதிசேடன் மடியில் அமர்ந்தால் போதுமா,
      அர்ச்சாவதார மூர்த்திகளான தாங்களும் அமர வேண்டாமோ
      என்று நினைத்து பல திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ள
      எம்பெருமான்கள் புளியமரத்தின் இலைகளிலும், கிளைகளிலும்
      அமர்ந்துகொண்டு எம்மைப் பாடுக, எம்மைப்பாடுக என்று நான்
      முந்தி நீ முந்தி என்று நம்மாழ்வாரிடம் பாடல் கேட்டதாக
      ஐதீகம்.

      ஸ்ரீ நம்மாழ்வாரும் எந்த திவ்ய தேசத்திற்கும் நேரில் செல்லாது
      இந்தப் புளியமரத்தின் பொந்தில் இருந்து கொண்டே திவ்ய
      ஸ்தலங்கட்கு பாசுரம் அருளினார்.

    3. இத்தலத்திற்கு அருகாமையிலமைந்த திருக்கோளுரில் பிறந்த
      மதுரகவியாழ்வார் வடநாட்டிற்கு யாத்திரை சென்றபோது
      திடீரென்று அவருக்குத் தென்திசையில் ஒரு ஜோதி தோன்றி
      அவரைக் கவர்ந்திழுக்க இது விந்திய மலையில் தோன்றக்
      கூடுமென நினைத்த அவர் அங்குவந்து கண்டால் மேலும்
      தெற்கே தள்ளித் தெரிய இறுதியில் இவ்விடம் வந்து
      நம்மாழ்வாரின் அவதார மேன்மையைத் தெரிந்து வேறொன்றும்
      நானறியேன்” என்று நம்மாழ்வாருக்கு அடிபணிந்து உய்தலே
      தொழிலெனக் கொண்டு அவரால் மொழியப் பட்ட திருவாய்
      மொழியினை ஏட்டில் எழுதலுற்றார்.

    4. நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை தொகுக்க வந்த நாதமுனிகள்
      மதுரகவியின் வம்சத்தாரிடம் கண்ணி நுன் சிறுத்தாம்மைப்
      பெற்று அதை பன்னீராயிரம் முறை ஜெபித்து ஸ்ரீநம்மாழ்வாரே
      பிரத்யட்சமாகி ஒரு திரையிட்டு அதனுள் அமர்ந்து கொண்டு
      நாலாயிரம் பாக்களையும் அருள நாதமுனியே அவற்றை எழுதி
      தமிழன்னைக்கு பக்தி அணிகலனாகச் சூட்டினார்.

    5. இவ்வூரில் வடகரையில் உள்ள காந்திஸ்வரத்தில் கருவூர்ச்
      சித்தர் என்னும் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார் அவரிடம் ஒரு
      நாய் இருந்தது. அது தினந்தோறும் குருகூர்த் தெருவிற்கு வந்து
      ஸ்ரீ வைணவர்கள் உணவருந்திவிட்டு எறிந்த எச்சில் இலையில்
      உள்ள மீத உணவை உண்டுவந்தது.

      ஒரு நாள் அவ்விதம் எச்சில் இலையுணவை அருந்திவிட்டு
      நதியைக் கடந்து வரும்போது ஒரு நீர்ச்சூழல் ஏற்பட்டு
      அதனின்றும் மீள முடியாமல் உயிர் துறக்க நேர்ந்தது. அது
      உயிர் துறக்கும் சமயம் அதன் கபாலம் வெடித்து மாபெரும்
      ஜோதியாய் எழுந்து விண்ணுடன் கலந்தது. ஆகா இத்தகைய
      பேறு தமக்கு வாய்க்கவில்லையே என்று கருதிய கரூவூரார்

      “வாய்க்குங் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட
      நாய்க்கும் பரமபதமளித்தாய் அந்த நாயோடிந்தப்
      பேய்க்குமிட மளித்தாற்பழுதோ பெருமாள் மகுடஞ்
      சாய்க்கும் படிக்கு கவி சொல்லு ஞானத் தமிழ்க்கடலே”

                      என்று பாடினார்.

    6. ஒரு சமயம் இத்தலத்தில் யானை ஒன்றும் வேடன் ஒருவனும்
      பொருத இருவரும் மாண்டனர். இருவருக்கும் யுத்தம் நடந்து
      கொண்டிருக்கும் போதே எமதூதர்களும், விஷ்ணு தூதர்களும்
      வந்து சேர்ந்தனர். இருவரும் இறந்ததும், இத்தலத்தில் இறந்த
      ஒரே காரணத்திற்காக அவர்களை விஷ்ணு தூதர்கள் அழைத்துச்
      சென்றனர். இத்தலத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில்
      இந்நிகழ்ச்சியை விளக்கும் சிற்பங்கள் தீட்டப்பட்டுள்ளன. குருகா
      மாலை என்னும் நாலும் இந்நிகழ்ச்சியைப் பின்வருமாறு சுட்டிக்
      காட்டுகிறது.

      “செஞ்சர நாணிட்ட சிலைவேடனும் பொருகைக்
          குஞ்சரமும் வான்சேர் குருகை”

    7. கம்பர் இராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றும் போது
      பெரியபெருமாள் சடகோபனைப் பாடினாயோ என்று கேட்க,
      கம்பர் சடகோபரந்தாதி பாடினார்.

      அந்தமில்லா மறையாயிரத் தாழ்ந்த
      வரும்பொருளைச் செந்தமிழாகத்
      திருத்திய வேணி தேவர்கள்
      தத்தம் விழாவு அழகு மென்னா தமிழார்
      கவியின் பந்தம் விழாவொழுகும்
      குருகூர் வந்த பண்ணவனே”

      என்று குருகூரின் பெருமையையும், சடகோபரின் பெருமையையும்
      பாடினார். பின்னர் இவர் குருகூருக்கு வரும் வழியில் ஏற்றம்
      இறைப்போர் பாட்டினையும் “மூங்கில் இலைமேல் தூங்கும்
      பனிநீரை வாங்கும் கதிரோனே என்ற பாடலையும், கணவனை
      இழந்த கைம்பெண்ணின் ஒப்பாரியையும் கேட்டு மிகவும் வியந்து,
      கற்றோர் வாழும் குருகூரில் நமது கல்வி சூரியன் முன்
      மின்மினிக்குச் சமமானதே என்று நாணமுற்றார்.

    8. இந்திரன் தனது மனைவியுடன் மதுவில் மாந்தி இன்பம் நுகரும்
      போது அவனைக் காணவந்த காசிப முனிவரைக் கண்டும்
      காணாதது போலிருக்க இதனால் சினமுற்ற காசிபர் “உனது
      இளமையில் திமிராலும், செல்வச் செருக்காலும் எம்மை
      மதியாதிருந்தமையால் நீ இளமை இழந்து மூப்பாவதுடன்
      ஐஸ்வரியமும் இழக்கக் கடவாய் என்று சபித்தார். இதனால்
      துடித்த இந்திரன் சாப விமோசனம் வேண்டி மன்றாடினான்.
      இவனை நோக்கிய காசிபர், தாமிரபரணி யாற்றங்கரையில்
      எழுந்தருளியுள்ள ஆதிப்பிரானைக் குறித்து தவமிருந்து சாபம்
      போக்கிக் கொள் என்று சொல்ல இந்திரனும் இவ்விடம் வந்து
      தவமிருந்து திருமால் அருளுக்கு உரியவனாகி சாப விமோசனம்
      பெற்றான். நம்மாழ்வார் தம் பாசுரத்தில் “சிரங்களால் அமரர்
      வணங்கும் திருக்குருகூரதனுள்” என்று குறிப்பிடுகிறார்.

    9. இவ்விடத்தில் இருக்கும் புளியமரத்தில் பகவான் பிரம்மச்சர்ய
      யோகத்தில் இருப்பதால் லட்சுமி தேவி பெருமானை நாடிவந்த
      காலத்தில்     லட்சுமி     தேவியை     மகிழ மாலையாக
      ஏற்றுக்கொண்டதாக ஐதீகம்.

    10. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாக்களில் மங்களாசாசனம்
      செய்யப்பட்டது இத்தலம். “நின்ற ஆதிப்பிரான்” என்றும்
      “பொலிந்து நின்ற பிரான் கண்டீர்” என்றும் இப்பெருமானின்
      திருநாமங்களை சொல்லிச் சொல்லி மகிழ்கிறார் நம்மாழ்வார்.

    11. இராமானுஜர் இவ்வூருக்கு எழுந்தருளினார். இராமானுஜர் இந்த
      ஊருக்கு     வெகுதொலைவில் வரும்போதே தாமிரபரணி
      நதிக்கரையில் இத்தலம் காட்சியளிக்க மிகவும் உணர்ச்சி
      வசப்பட்டு,

      இதுவோ திருநகரி, ஈதோ பொருநை
          இதுவோ பரமபதத்து எல்லை இதுவேதான்
      வேதம் பகர்ந்திட்ட மெய்பொருளின் உட்பொருளை
          ஓதும் சடகோபன் ஊர்

      என்று திருவாய் மலர்ந்தருளினார். இராமானுஜர் ஆழ்வார்
      திருநகரியை பரமபதத்து எல்லை என்கிறார். இது பரமபதத்து
      எல்லையாகின்றது. ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டமாகிறது.

      இந்த ஊருக்கு வரும்போது எதிரில் வந்த ஒரு பெண்ணைக்
      கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரமென்று கேட்க “கூவுதல்
      வருதல் செய்திடாயென்று குரைகடல் வண்ணன் தன்னை மேவி
      நன்கமர்ந்த வியன்புணல் வழுதி நாடன் சடகோபன்” என்ற
      பாசுரத்தை அப்பெண் கூறி இன்னும் கூப்பிடு தூரத்தில் உள்ளது
      எனக்கூற இராமானுஜர் அப்பெண்ணை ஆழ்வாராகவே கருதி
      சாஷ்டாங்கமாக தரையில் வீழ்ந்து வணங்கினார்.

    12. மணவாள மாமுனிகளும் இந்த தலத்திற்கு எழுந்தருளினார்.
      ஆதிப்பிரான் சன்னதிக்கு முன்புறம் அமைந்த கருட மண்டபத்தை
      மணவாள மாமுனிகளே நிறுவினார்.

    13. இங்கு ஆழ்வார் சன்னதியும், ஆதிப்பிரான் சன்னதியும்
      தனித்தனியே உள்ளது. பெருமாள் சன்னதியிலிருந்து சுமார் 60
      அடி தூரம் தள்ளி ஆழ்வார் சன்னதி உள்ளது. பெருமாள்
      விமானத்தையும் விட ஆழ்வார் சன்னதி விமானம் சற்று
      பெரியது.

      இங்கு ஆதிநாதரைவிட நம்மாழ்வாருக்குத்தான் ஒரு படி ஏற்றம்.
      ஊரின் பெயரையே மாற்றிவிட்ட பெருமை அவருக்கு
      உண்டல்லவா? ஆழ்வார் தங்கித்தவம் செய்த புளியமரம் 7
      கிளைகளோடு உள்ளது. ஆழ்வார் கோவிலைச் சூழ இருந்த
      பகுதிக்கு ஸ்ரீ பராங்குச சதுர்வேதி மங்கலம் என்பதே பெயர்.
      சுமார் 700 வருடங்களுக்கு முன்பு வரை இப்பெயரே
      பிரசித்தமாயிருந்தது.

    14. இங்கு தெற்கு மாடத் தெருவில் கீழ்புரம் திருவேங்கிட
      முடையான்     சன்னதியும், மேல்புரம் திருவரங்க நாதன்
      கோவிலும்,     வடக்கு மாடத்     தெருவின்     மத்தியில்
      பிள்ளைலோகாச்சாரியர், அழகிய     தேசிகர், ஆண்டாள்
      ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு.

    15. எம்பெருமானார் - ஜீயர் இங்கு எழுந்தருளியுள்ளார். அவருக்குத்
      தனி மடம் உண்டு.

    16. இங்குள்ள     நம்மாழ்வார்     விக்ரஹம்     எந்தவிதமான
      உலோகத்தாலும் செய்யப்பட்டதன்று. தாமிரபரணி தண்ணீரைக்
      காய்ச்சி அதில் ஆழ்வார் தமது சக்தியை பிரயோகித்துள்ளார்.
      எனவே பார்ப்பதற்கே பேரதிசயமாக தோன்றும் காட்சி
      இதுவாகும்.

    17. இங்குள்ள திருமஞ்சன மண்டபம், கண்ணாடி மண்டபம் மிகவும்
      வேலைத்திறம் கொண்டவை.

    18. இந்தக் கோவிலில் மிகவும் அருமையான வேலைப் பாடமைந்த
      கல்நாதஸ்வரம் ஒன்றுள்ளது. இது கருங்கல்லில் குடைந்த
      அதிசய இசைக்கருவியானாலும் மரத்தால் செய்யப்பட்டது
      போலத்தான் தோன்றுகிறது. இது நீளம் 1 அடி மேல்ப்பாகம் 1/4
      அங்குலம். அடிப்பாகம் 1 அங்குலம் குறுக்களவுடையது.
      இதனடிப்பாகம் பித்தளைப் பூணால் செய்யப்பட்டுள்ளது. இது
      இந்தக் கோவிலில் பரத நாட்டியம் நடைபெறும் பொழுது
      வாசிப்பதற்கு பயன்பட்டதாகத் தெரிகிறது. இது சுமார் 350
      வருடத்திற்கு முன்னால் கிருஷ்ணப்ப நாயக்கர் மன்னர்
      காலத்தில் கொடுக்கப்பட்டது. இதற்கு மோகன வீணை என்று
      ஒரு பெயரும் உண்டு.

    19. இங்கு எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு     பெரிய
      திருமேனியுடைய இந்த மூலவரின் பாதங்கள் பூமிக்குள்
      இருப்பதாக ஐதீகம்.

    20. ஸ்ரீரங்கத்தில் இருப்பது போன்று இங்கும் அரையர் சேவை
      உண்டு.     திருமஞ்சனத்தின்போது     பிரபந்தங்களையும்,
      புருஷஸு க்தத்தையும் தாளம் போட்டுக்கொண்டே படிக்கும்
      முறை இங்கு இன்றும் வழக்கில் உண்டு.

    21. 1991இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

      “குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும்
      சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்”

      என்று வள்ளுவர் நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து கூறியதாகச்
      சொல்லப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:25:14(இந்திய நேரம்)