தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Cultural Gallery - -

  • பவளவண்ணப்பெருமாள் கோவில்
    திருப்பவளவண்ணம்

    வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர்
        மல்லையாய் மதிள் கச்சியூராய், பேராய்
    கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்
        குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான்
    பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
        பணி வரையினுச் சியாய் பவள வண்ணா
    எங்குற்றா யெம்பெருமான் உன்னை நாடி
        யேழையே னிங்ஙணமே யுழிதருகேனே
                (2059) திருநெடுந்தாண்டகம் 9

    திருமங்கையாழ்வார் இந்த ஸ்தலத்திற்கு வந்தார். எம்பெருமானின்
    நிறம் சற்றே வித்தியாசமாக இருந்தது. ஈதென்ன விந்தை எட்டுக்
    கைகளுடன் இருந்தவனை யாரிவர் என்று எண்ணி வியந்தோம், அட்ட
    புயகரத்தோர் என்றார். ஆனால் இங்கு நிற்பவனை யார் என்று
    கேட்பது. இவனது நிறமல்லவா வித்தியாசமாக தெரிகிறது. ஏற்கனவே
    நாம் இவன் என்ன வண்ணத்தினன் என்று மயங்கி நின்றோம்.
    இப்போது இந்த வண்ணம் வேறு புது மயக்கம் தருகின்றதே என்று
    சிந்தனையில் ஆழ்ந்தார். திருமங்கைக்கு அர்ச்சாவதாரத்திலும் அவர்
    தம் வண்ணங்களிலும்தான் எத்துனை ஈடுபாடு, எவ்வளவு ஆழ்ந்த
    மயக்கம்.

    இப்பெருமான் கொண்ட வண்ணத்தை யோசித்துப் பார்க்கிறார்.
    கடல் மல்லையானின் நிறமாக இருக்குமோ, காஞ்சியூரானின் வண்ணமாக
    இருக்குமோ, திருப்பேர் நகரானின் நிறமோ, பாற்கடலோன்
    வண்ணந்தான் இப்படி தோன்றுகிறதோ ஒருவேளை பனிமலையின்
    உச்சியில் உள்ள திருப்பிரிதியான் நிறமோ என்றெல்லாம் எண்ணி
    இவைகள் எல்லாம் அல்லவே என்று யோசித்து நிற்கிறார். ஒருவேளை
    கலியுகத்தில் எம்பெருமான் கொண்ட வண்ணமோ கலியுகத்தில்
    எம்பெருமான் வண்ணம் கருநீலமல்லவா இது அதுவுமன்றே என்று
    எண்ணுகிறார்.

    எம்பெருமானுக்கு நான்கு யுகங்கட்கும் நான்கு வண்ணங்கள்
    சொல்லப்பட்டுள்ளதால் திருமங்கைக்கு இந்த வண்ண மயக்கு
    உண்டாகிவிட்டது. எம்பெருமான்

    திரேதா யுகத்தில் ஸ்வேத வர்ணனாக வெண்ணிறம்
    கிரேதா யுகத்தில் ப்ரவேளச வர்ணனாக பவள நிறம்
    துவாபார யுகத்தில் மரகத வர்ணனாக பச்சை (மரகதம்) நிறம்
    கலியுகத்தில் ச்யாமள வர்ணனாக கருநீலம் -(மேகவர்ணம்)

    இந்த நான்கு வண்ணங்களுள் ஒன்றாகத்தானே இருக்கவேண்டும்
    என்று எண்ணுகிறார். இங்கு என்ன நடந்தது. எவ்விதம் இவ்வண்ணம்
    வந்துற்றது என்று எண்ணிப்பார்க்கும் போது பிரம்மனின் யாகத்தைக்
    கலைக்க சரஸ்வதி கொடிய அரக்கர் கூட்டத்தை யனுப்பினாளே, அந்த
    அரக்கர்களை எல்லாம் கொன்று குவித்து ரத்தக்களரியாக இவ்விடத்து
    நின்றாரே அந்த செம்மை சேர்ந்த பவள வண்ணமல்லவா இதில்
    ஊடாடுகிறது என்று எண்ணி பவளவண்ணர் என்று தலைக்கட்டி நின்றார்.

    கடல்மல்லையிலும்,     கச்சியூரிலும்,     திருப்பேர்     நகரிலும்
    திருஇடவெந்தையிலும்     பாற்கடலிலும், திருப்பதியிலும் உள்ள
    வண்ணங்களிலிருந்து வேறுபட்ட பவளவண்ணர் என்று முடிவு கட்டி
    பவள வண்ணர் என்று மங்களாசாசித்தார்.

    இந்தப் பவளவண்ணர் கோவில் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள
    காலாண்டார் தெருவில் உள்ளது. காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து
    சுமார் 2 பர்லாங் தொலைவு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:35:15(இந்திய நேரம்)