Cilipidikaram-Padipurai
வஞ்சிக் காண்டம்

6. வாழ்த்துக் காதை


"உரைப் பாட்டு மடை"

1 குமரியொடு வட இமயத்து
ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச்
சோழன் மகள் ஈன்ற மைந்தன்,
கொங்கர் செங் களம் வேட்டு,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன், சினம் செருக்கி
வஞ்சியுள் வந்து இருந்தகாலை;
வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர்
மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை-தன்னில்,
ஒன்று மொழி நகையினராய்,
‘தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்
செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில்
விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்,
எம் போலும் முடி மன்னர்
ஈங்கு இல்லை போலும்’ என்ற வார்த்தை,
அங்கு வாழும் மாதவர் வந்து
அறிவுறுத்த இடத்து ஆங்கண்,
உருள்கின்ற மணி வட்டைக்
குணில் கொண்டு துரந்ததுபோல்,
‘இமய மால் வரைக் கல் கடவுள் ஆம்’
என்ற வார்த்தை இடம் துரப்ப;
ஆரிய நாட்டு அரசு ஓட்டி,
அவர் முடித்தலை அணங்கு ஆகிய
பேர் இமயக் கல் சுமத்தி,
பெயர்ந்து போந்து; நயந்த கொள்கையின்,
கங்கைப் பேர் யாற்று இருந்து,
நங்கை-தன்னை நீர்ப்படுத்தி,
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி;
வஞ்சி மா நகர் புகுந்து;
நில அரசர் நீள் முடியால்
பலர் தொழு படிமம் காட்டி,
தட முலைப் பூசல் ஆட்டியைக்
கடவுள்-மங்கலம் செய்த பின்னாள்-
கண்ணகி-தன் கோட்டத்து
மண்ணரசர் திறை கேட்புழி-
அலம்வந்த மதி முகத்தில்
சில செங் கயல் நீர் உமிழ,
பொடி ஆடிய கரு முகில் தன்
புறம் புதைப்ப, அறம் பழித்து;
கோவலன், தன் வினை உருத்து,
குறுமகனால் கொலையுண்ண;
காவலன்-தன் இடம் சென்ற
கண்ணகி-தன் கண்ணீர் கண்டு,
மண்ணரசர் பெரும் தோன்றல்
உள் நீர் அற்று, உயிர் இழந்தமை
மா மறையோன் வாய்க் கேட்டு;
மாசாத்துவான் தான் துறப்பவும்,
மனைக்கிழத்தி உயிர் இழப்பவும்,
எனைப் பெரும் துன்பம் எய்தி,
காவற்பெண்டும், அடித் தோழியும்,
கடவுள் சாத்தனுடன் உறைந்த
தேவந்தியும் உடன் கூடி
‘சேயிழையைக் காண்டும்’ என்று,
மதுரை மா நகர் புகுந்து;
முதிரா முலைப் பூசல் கேட்டு, ஆங்கு,
அடைக்கலம் இழந்து, உயிர் இழந்த
இடைக்குல மகள் இடம் எய்தி;
ஐயை அவள் மகளோடும்
வையை ஒருவழிக்கொண்டு;
மா மலை மீமிசை ஏறி,
கோமகள்-தன் கோயில் புக்கு;
நங்கைக்குச் சிறப்பு அயர்ந்த
செங்குட்டுவற்குத் திறம் உரைப்பர்-மன்.

"தேவந்தியின் சொல்"


2 முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வட பேர் இமய மலையில் பிறந்து,
கடு வரல் கங்கைப் புனல் ஆடிப் போந்த
தொடி வளைத் தோளிக்குத் தோழி நான் கண்டீர்,
சோணாட்டார் பாவைக்குத் தோழி நான் கண்டீர்.

"காவற்பெண்டின் சொல்
"

3 மடம் படு சாயலாள் மாதவி-தன்னைக்
கடம்படாள், காதல் கணவன் கைப் பற்றி,
குடம் புகாக் கூவல் கொடுங் கானம் போந்த
தடம் பெரும் கண்ணிக்குத் தாயர் நான் கண்டீர்,
தண் புகார்ப் பாவைக்குத் தாயர் நான் கண்டீர்.

"
அடித் தோழியின் சொல்"

4 தன் பயந்தாட்கு இல்லை; தன்னைப் புறங்காத்த
என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை;
கற்புக் கடம் பூண்டு, காதலன் பின் போந்த
பொன் தொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்;
பூம் புகார்ப் பாவைக்குத் தோழி நான் கண்டீர்.

"தேவந்தியின் அரற்று"

5 செய் தவம் இல்லாதேன் தீக் கனாக் கேட்ட நாள்,
எய்த உணராது இருந்தேன், மற்று என் செய்தேன்?
மொய் குழல் மங்கை முலைப் பூசல் கேட்ட நாள்,
அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ, தோழீ?
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ, தோழீ?

"காவற்பெண்டின் அரற்று"


6 கோவலன்-தன்னைக் குறுமகன் கோள் இழைப்ப,
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு, ஏங்கி,
‘சாவது-தான் வாழ்வு’ என்று, தானம் பல செய்து,
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ, அன்னை?
மாநாய்கன்-தன் துறவும் கேட்டாயோ, அன்னை?

"அடித் தோழியின் அரற்று"


7 காதலன்-தன்-வீவும், காதலி நீ பட்டதூஉம்,
ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு, ஏங்கி,
போதியின் கீழ் மாதவர்முன் புண்ணிய தானம் புரிந்த
மாதவி-தன் துறவும் கேட்டாயோ, தோழீ?
மணிமேகலை துறவும் கேட்டாயோ, தோழீ?

"தேவந்தி ஐயையைக் காட்டி அரற்றியது"


8 ‘ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப
வல்லாதேன் பெற்றேன் மயல்’ என்று உயிர் நீத்த
அவ்வை மகள் இவள்-தான், அம் மணம் பட்டிலா,
வை எயிற்று ஐயையைக் கண்டாயோ, தோழீ?
மாமி மட மகளைக் கண்டாயோ, தோழீ?

"செங்குட்டுவன் கூற்று"


9 என்னே! இஃது என்னே! இஃது என்னே! இஃது என்னே கொல்!
பொன் அம் சிலம்பின், புனை மேகலை, வளைக் கை,
நல் வயிரப் பொன் தோட்டு, நாவல் அம் பொன் இழை சேர்,
மின்னுக் கொடி ஒன்று மீவிசும்பில் தோன்றுமால்!

"கண்ணகி செங்குட்டுவனுக்குக் கடவுள் நல்லணி காட்டியது"


10 தென்னவன் தீது இலன்; தேவர் கோன்-தன் கோயில்
நல் விருந்து ஆயினான்; நான் அவன்-தன் மகள்
வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்;
என்னோடும், தோழிமீர்! எல்லீரும், வம், எல்லாம்.

"வஞ்சி மகளிரின் சொல்"


11 வஞ்சியர், வஞ்சி இடையீர், மற வேலான்
பஞ்சு அடி ஆயத்தீர்! எல்லீரும், வம், எல்லாம்;
கொங்கையான் கூடல் பதி சிதைத்து, கோவேந்தைச்
செஞ் சிலம்பால் வென்றாளைப் பாடுதும்; வம், எல்லாம்.

‘செங்கோல் வளைய, உயிர் வாழார் பாண்டியர்’ என்று
எம் கோ முறை நா இயம்ப, இந் நாடு அடைந்த
பைந் தொடிப் பாவையைப் பாடுதும்; வம், எல்லாம்;
பாண்டியன்-தன் மகளைப் பாடுதும்; வம், எல்லாம்.

"ஆயத்தார் சொல்"


12 ‘வானவன், எம் கோ, மகள்’ என்றாம்; வையையார்
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள்; வானவனை
வாழ்த்துவோம் நாமாக, வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள்.

"வாழ்த்து"


13 தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல, உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் வையை
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே!


14 மலையரையன் பெற்ற மடப் பாவை-தன்னை
நில அரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் ஆன்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே!

"எல்லா! நாம்-"


15 காவிரி நாடனைப் பாடுதும்; பாடுதும்,
பூ விரி கூந்தல்! புகார்.

"அம்மானை வரி்"


16 வீங்குநீர் வேலி உலகு ஆண்டு, விண்ணவர் கோன்
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார், அம்மானை?
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண், அம்மானை;
சோழன் புகார் நகரம் பாடேலோர், அம்மானை.


17 புறவு நிறை புக்கு, பொன்னுலகம் ஏத்த,
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார், அம்மானை?
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த
கறவை முறை செய்த காவலன்காண், அம்மானை;
  காவலன் பூம் புகார் பாடேலோர், அம்மானை.
18 கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண,
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் யார், அம்மானை?
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன்காண், அம்மானை:
  கொற்றவன் பூம் புகார் பாடேலோர், அம்மானை.


19


அம்மனை தம் கையில் கொண்டு, அங்கு அணி இழையார
  தம் மனையில் பாடும் தகையேலோர், அம்மானை;
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன்
கொம்மை வரி முலைமேல் கூடவே, அம்மானை;
கொம்மை வரி முலைமேல் கூடின், குல வேந்தன்
அம் மென் புகார் நகரம் பாடேலோர், அம்மானை

"கந்துக வரி"


20 பொன் இலங்கு பூங்கொடி! பொலம் செய் கோதை வில்லிட,
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப, எங்கணும்,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று பந்து அடித்துமே;
  தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே.


21 பின்னும் முன்னும், எங்கணும், பெயர்ந்து; உவந்து, எழுந்து, உலாய்;
மின்னு மின் இளங் கொடி வியல் நிலத்து இழிந்தென,
தென்னவ்ன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று பந்து அடித்துமே.


22 துன்னி வந்து கைத்தலத்து இருந்ததில்லை; நீள் நிலம்-
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்ததில்லை-தான் என,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
  தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே.

"ஊசல் வரி"


23 வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ, ஐயை
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு, ஒற்றை மேல் ஊக்க,
கடம்பு முதல் தடிந்த காவலனைப் பாடி
குடங்கை நெடுங் கண் பிறழ, ஆடாமோ ஊசல்;
  கொடு வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல்.


24 ஓர் ஐவர் ஈர்-ஐம்பதின்மர் உடன்று எழுந்த
போரில், பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த
சேரன், பொறையன், மலையன், திறம் பாடி,
கார் செய் குழல் ஆட, ஆடாமோ ஊசல்;
கடம்பு எறிந்தவா பாடி, ஆடாமோ ஊசல்.


25 வன் சொல் யவனர் வள நாடு, வன் பெருங்கல்,
தென் குமரி, ஆண்ட; செரு வில், கயல், புலியான்
மன்பதை காக்கும் கோமான், மன்னன், திறம் பாடி;
மின் செய் இடை நுடங்க, ஆடாமோ ஊசல்;
விறல் வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல்.

"வள்ளைப் பாட்டு"


26 தீம் கரும்பு நல் உலக்கை ஆக, செழு முத்தம்
பூங் காஞ்சி நீழல், அவைப்பார் புகார் மகளிர்;
ஆழிக் கொடித் திண் தேர்ச் செம்பியன் வம்பு அலர் தார்ப்
பாழித் தட வரைத் தோள் பாடலே பாடல்;
  பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல்.


27 பாடல்சால் முத்தம் பவழ உலக்கையான்
மாட மதுரை மகளிர் குறுவரே;
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன்
மீனக் கொடி பாடும் பாடலே பாடல்;
வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்


28 சந்து உரல் பெய்து, தகைசால் அணி முத்தம்,
வஞ்சி மகளிர் குறுவரே, வான் கோட்டால்:
கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்:
பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல்

"பத்தினிக் கடவுள் செங்குட்டுவனை வாழ்த்துதல்"


29 ஆங்கு, நீள் நில மன்னர், நெடு வில் பொறையன் நல்
தாள் தொழார், வாழ்த்தல் தமக்கு அரிது; சூழ் ஒளிய
எம் கோமடந்தையும் ஏத்தினாள், ‘நீடூழி,
செங்குட்டுவன் வாழ்க!’ என்று.