தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • ஊரகத்தான் கோவில் - திரு ஊரகம்

    சிறப்புக்கள்

    1. பெரிய காஞ்சி என அழைக்கப்படும் பகுதியில் காமாட்சியம்மன்
      கோவிலுக்கு எதிரில் நான்கு ராஜவீதிகட்கு மத்தியில்
      அமைந்துள்ளது இத்தலம். ஊரகம் (பேரகம்) இரண்டும் சேர்ந்து
      ஒரு திவ்ய தேசம்தான் “மதில் கச்சி யூரகமே பேரகமே” என்பது
      சிறிய திருமடலில் திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம்.

    2. இங்கு எழுந்தருளியுள்ள உலகளந்த பெருமாள் மிகப்
      பிரம்மாண்டமானவர். நெடிதுயர்ந்த இவர்     திருமேனி
      பார்ப்பதற்குப் பேராச்சர்யம் உடைத்து 108 திவ்ய தேசங்களில்
      மட்டுமல்ல இந்தியாவிலேயே இத்தகைய பிரம்மாண்டமான
      உலகளந்த பெருமாள் இல்லையென்று சொல்லலாம். பேரகத்தான்
      என்பது இவர் திருநாமம்.இப்பெருமாள் தனது இரண்டு கரங்களை
      நீட்டி தனது இடது காலை விண்ணோக்கித்தூக்கிய
      திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

      இடதுகரத்தில் இரண்டு விரல்களையும், வலது கரத்தில் ஒரு
      விரலையும் உயர்த்திக்காட்டி எழுந்தருளியுள்ளார். இடது
      திருக்கரத்தின் இரண்டு விரல்களை உயர்த்தியதால் ஈரடியால்
      மண்ணும் விண்ணும் அளந்ததையும் வலது திருக்கரத்தில்
      ஒருவிரலை உயர்த்தி ஓரடியை எங்கே வைப்பது என்று
      மகாபலியிடம் கேட்டதாக இதற்கு ஆன்றோர் பொருள் கூறுவர்.

    3. இதேபோல் பேரகத்தில்     எழுந்தருளியுள்ள     ஆதிசேட
      எம்பெருமானும் மிகப் பிரசித்தி வாய்ந்தவர். இவர் போன்ற
      நாகமூர்த்தியை வேறெங்கும் காண்டலரிது. இவரிடம் தூய
      மனதுடன் கேட்கும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறுகிறது.
      இப்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்து திருக்கண்ணமுது
      (பாயாசம்) படைத்துப் புத்திரப்பேறு இல்லாதவர்கள் புத்திரப்
      பேரடைகின்றனர். இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாக
      விளங்குகிறது. இவ்வெம் பெருமானுக்குத்தான் (ஊரகத்தான்)
      ஊரகத்தான் என்பது திருநாமம்.

    4. திருமழிசையாழ்வாராலும், திருமங்கையாழ்வாராலும் மங்களாசாசனம்
      செய்யப்பட்ட திவ்ய தேசம்.

    5. நம்மாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார் என்று
      ஆன்றோர் மொழிவர்.

      நின்றவாறும், இருந்தவாறும், கிடந்தவாரும் நினைப்பிரியன
      ஒன்றாலா வுருவாய அருவாய நின் மாயங்கள்
      நின்று நின்று நினைக்கின்றேன்
      உன்னையெங்ஙனம் நினைக்கிற்பின்
      பாவியேற்கு ஒன்று நன்குரையாய்
      உலகுமுண்ட வொண்சுடரே

      என்ற பாசுரத்தில் நின்றவாறும் என்ற மங்களாசாசனத்தை
      இத்தலத்திற்கிட்ட மங்களாசாசனமாய் கொள்வர்.

      நின்றவாறும் - திருவூரகத்தில் நின்றபடியை ஆதல் என்பது
      நம்பிள்ளை ஈடு

    6. இந்த ஒரு திவ்ய தேசத்திற்குள்ளாகவே நீரகம், காரகம்,
      கார்வானம் ஆகிய திவ்ய தேசத்து எம்பெருமான்களும் திவ்ய
      தேசங்கள் இருப்பதால் இத்தலத்தை தரிசித்தால் நான்கு திவ்ய
      தேசங்களைத் தரிசித்ததாகி விடும்.

    7. ஊரகம், நீரகம், காரகம், கார் வானம் ஆகிய நான்கு திவ்ய
      தேசத்து எம்பெருமான்களையும் சேர்த்து திருமங்கையாழ்வார்
      ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

    8. பிள்ளைப் பெருமாளையங்கார் தமது 108 திருப்பதியந்தாதியில்
      இத்தலத்திற்கான பாசுரங்களை இட்டருளினபோது, மகாபலியிடம்
      எம்பெருமான் மூன்றடி மண்வேண்ட மகாபலி நீர்வார்த்து (தாரை
      வார்த்துக்) கொடுத்ததை நினைவூட்டுகிறார்.

      நேசத்தா லன்றுலகை நீர்வார்க்க வைத்தளந்த
      வாசத்தாள் என்தலைமேல் வைத்திலையேல் - நாகத்தால்
      பாரகத்துள்ளன்றி நான் பாழ்நரகில் வீழ்ந்தென் சொல்
      ஊரகத்துள் நின்றாயுரை

      மாவலி தாரை வார்த்துக்கொடுத்தபோது ஈரடியால் உலகளந்து
      மூன்றாவதடியை அவன் தலைமீது வைத்து நின்திருவடியை
      அவனுக்குப் பொலியச் செய்தல் போன்று என் சென்னியின்
      மேலும் வைப்பாயாயென்று கேட்கிறார்.

      “திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் வைத்தாய்”
      என்று ஆழ்வாருரைத்தபடி தமக்குமாகட்டும் என்கிறார்.

    9. திருமங்கையாழ்வார் தமது திருநெடுந்தாண்டகத்தில் 30 பாக்களை
      இட்டருளினார். முதல் பத்துப்பாக்களும் எம்பெருமான் எல்லாம்
      தாமேயான தன்மையில் அமைந்தவை. இரண்டாம் பத்து
      திருத்தாயார் (பிராட்டி) வார்த்தையாக அமைந்தவை. இந்த
      இரண்டாம் பத்தின் மூன்றாம் பாடலில், தான் வளர்த்தெடுத்த
      கிளியை எடுத்து அணைத்து வைத்துக்கொண்டு சொல்கிளியே
      கல்மாரி காத்தவனைச் சொல், கச்சி யூரகத்தானைச் சொல்,
      வெஃகாவில் துயின்றவனைச் சொல், மல்லர்களைப் பொருது
      வென்றவனைச் சொல் என்று அவனது திருப்பெயர்களெல்லாம்
      எடுத்துக் கூறி, சொல்லாய் கிளியேச் சொல்லாய் என்று பிராட்டி
      வார்த்தையாக இத்தலத்தை மங்களாசாசனம் செய்திருப்பது
      சிறப்பம்சங்களுள் தலையாயதாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:04:45(இந்திய நேரம்)