தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • சாரநாதப்பெருமாள் கோவில் - திருச்சேறை
    சிறப்புக்கள்
    1. 108 திவ்ய ஸ்தலங்களில் இத்திருத்தலம் தவிர பெருமாள் தனது 5
      தேவிகளுடன் காட்சி தருவது வேறு எந்த ஸ்தலத்திலும் இல்லை.
      இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள
      காட்சி பரமபதம் எனப்படும் வைகுண்டத்தில் எம்பெருமான்
      தனது வலதுகரத்தில் பத்மம் வைத்துள்ளதற்கொப்பானதாகும்.

    2. திருமால் காவேரிக்குப் பிரத்யட்சமானது தை மாதம் பூச
      நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12
      ஆண்டுகட்கு ஒரு முறை தை மாதம் பூசம் நட்சத்திரத்தில்
      வியாழன் கிரகம் வரும்போது இந்த ஸார புஷ்கரணியில்
      நீராடுவது     குடந்தை     என்னும்     கும்பகோணத்தில்
      கொண்டாடப்படும் மகாமகத்திற்கு ஈடானதாகும்.

    3. குடந்தையில் உள்ள சித்திரத்தேர் மற்றும் திருவாரூர்த்
      தேரினைப்போன்று இங்கு உள்ள தேர் மிகப் பெரியதாகும்.

    4. எம்பெருமான் குழந்தையாகத் தவழ்ந்து வந்ததால்“மாமதலையாய்”
      என்றும் காவிரிக்கும் மேன்மை அளித்ததால் “கங்கையிற்
      புனிதமாய காவேரி” என்றும்     ஆழ்வார்கள்
      மங்களாசாசித்துள்ளனர்.

    5. திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
      மொத்தம் 13 தீஞ்சுவைப் பாக்கள்.

    6. சத்தியகீர்த்தி என்ற சோழவரசன் புத்திரப்பேறு இல்லாது,
      மார்க்கண்டேய முனிவரால் இத்தலத்திற்கு ஆற்றுப்படுத்தப்
      பட்டு, இப்பெருமானை வேண்டி புத்திரபேறடைந்து, விமானம்
      மண்டபம் போன்ற திருப்பணிகள் செய்து, சித்திரை மாதத்தில்
      பிர்மோத்ஸவமும் நடத்திவைத்தான்.

    7. தஞ்சையை ஆண்ட அழகிய மணவாள நாயக்க மன்னராலும்
      அவரது மந்திரி நரச பூபாலராலும், இக்கோவிலின் பிரதானச்
      சுவர்களும்,     சற்றேறக்குறைய     இன்றுள்ள அமைப்பில்
      கட்டப்பட்டது.     இம்மன்னர்     மன்னார்குடியில்     உள்ள
      ராஜகோபாலன் சன்னதிக்கு திருப்பணிக்காக வண்டிவண்டியாகக்
      கல் அனுப்பிய போது, வண்டிக்கு ஒரு கல்லாக, திருச்சேறை
      கோவில் பரிபாலனத்திற்கு நரச பூபாலன் இறங்கி வைக்க இதைச்
      செவியுற்ற மன்னன் அது உண்மையாவென்று சோதிக்க அங்கு
      வந்தான். இதனையறிந்த நரச பூபாலன் இந்த இக்கட்டிலிருந்து
      தன்னைக் காக்குமாறு இராஜ கோபாலனை மனதுள் தியானிக்க
      மன்னர் வந்து இங்கு இறங்கியதும் இந்த திருச்சேறைத் திருமால்
      அவருக்கு மன்னார்குடி ராஜகோபாலனாகவே காட்சியளிக்க அது
      கண்டு மிகவும் ஆச்சர்யமுற்ற மன்னன், நரசபூபாலனைப்
      பாராட்டியது மட்டுமன்றி தானும் உடனிருந்து எண்ணற்ற
      சேவைகள் செய்து பெருவாரியாக நிலங்களையும் தானமளித்தார்
      என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

    8. மாவடிப்பள்ளம் “பாபாஷாகேப்” என்னும் இஸ்லாமியர்
      இப்பெருமானை வணங்கி புத்திரப்பேறு பெற்று இத்தலத்திற்கு
      பூமிதானம் செய்தாரென்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.

    9. குளக்கரையில் காவேரியம்மனுக்குத் தனிக்கோவில் உள்ளது.

    10. புஷ்கரணிக்கு வடமேற்கு திக்கில் உள்ள ஆஞ்சநேயரும்
      அவசியம் தரிசிக்க வேண்டிய வரப் பிரசாதி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:21:09(இந்திய நேரம்)