Primary tabs
-
கள்ளப்பிரான் கோவில் - ஸ்ரீவைகுண்டம்வரலாறு
பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
பிரம்மன் எழுந்தருளியுள்ள சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளயம்
ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்து கொண்டிருந்த காலத்தில் சோமுகாசுரன்
என்ற அரக்கன் பிரம்மதேவன் வைத்திருந்த (ச்ருஷ்டி ரகஸ்யக்
கிரந்தம்) படைப்புத்தொழில் ரகசியம் பற்றிய புத்தகத்தை
எடுத்துக்கொண்டு ஒளிந்து கொண்டான்.தம்நிலையுணர்ந்து வருந்திய பிரம்மா அதனை அவனிடமிருந்து
மீட்கும்பொருட்டு விஷ்ணுவைக் குறித்து தவமியற்ற எண்ணி தன்
கரத்திலிருந்து ஒரு பிரம்பை ஒரு பிரம்மச்சாரியாகச் செய்து, தாம்
தவமியற்றுவதற்கு ஒரு சிறந்த இடத்தை தெரிவு செய்து வருமாறு
பூவுலகிற்கு அனுப்பினார். தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும்
ஜயந்தீரபுரத்திற்கு வந்து, அங்கிருந்த அழகியின் மயக்கத்திலீடுபட்டு
தான் வந்த வேலையை மறந்து போயினான்.இதன்பின் பிரம்மா தன் மறுகையிலிருந்த தண்டத்தை ஒரு
பெண்ணாக்கி, யான் தவம் புரிய ஏற்ற இடம் பார்த்து வா என்று
சொல்ல அவள் தாமிரபரணியாற்றங்கரையில் சோலைகள் நிறைந்த
ஓரிடத்தை தெரிவு செய்து பிரம்மனிடம் கூற, பிரம்மன் அங்கு வந்து
திருமாலைக் குறித்து கடுந்தவம் இருக்கலானார். பிரம்மனின் தவத்தை
மெச்சிய திருமால் வைகுண்டத்திலிருந்து படைப்பின் ரகசியத்தை
மீளவும் பிரம்மனிடமே சேர்ப்பித்தார்.வைகுண்டத்திலிருந்து எழுந்த கோலத்தில் இவ்விடம் காட்சி
தந்தமையாலும், இதே திருக்கோலத்தில் பக்தர்களுக்கு இவ்விடத்தே
நின்று அருள வேண்டுமென்று பிரம்மன் வேண்டியதால்
இத்திருத்தலத்திற்கு ஸ்ரீவகுண்டம் என்ற பெயருண்டாயிற்று.பின்பு இதே ஸ்ரீவைகுண்டத்தில் காலதூஷகன் என்னும் திருடன்
ஒருவன், இப்பெருமானை வழிபட்டே திருடச் செல்வதும், அவ்வாறு
திருடிய பொருட்களில் பாதியை இப்பெருமானுக்கே சமர்ப்பணம்
செய்து, இடையறாது பக்தி செலுத்திவந்தான். ஒரு நாள் தன்
கூட்டத்தினருடன் அரசனின் அரண்மனையில் திருடிக்கொண்டிருக்கும்
போது இவன் கூட்டத்தைச் சார்ந்த சிலரை காவலாளிகள் பிடித்து
விசாரணை செய்ய, அவர்கள் தாங்கள் காலதூஷகனின் கையாட்களே
என்றும் எங்களோடு வந்தால் காலதூஷகனைக் காண்பிக்கிறோம் என்று
சொல்ல அவ்விதமே காவலாளிகளும் தேடிவந்தனர்.இதனையறிந்த காலதூஷகன் ஸ்ரீவைகுண்டனைச் சரணைடந்து
தன்னைக் காக்குமாறு வேண்ட அப்பெருமானே காலதூஷகன்
வேடத்தில் எதிரில் வர, காவலாளிகள் பிடித்துக்கொண்டுபோய்
மன்னன் முன்னிலையில் நிறுத்தினர். காலதூஷகனை மன்னன் கூர்ந்து
நோக்கியபோது தன் சுயரூபத்தை அவனுக்கு மட்டும் காட்டியருள
அடிபணிந்து நின்ற மன்னன் என்னிடம் கொள்ளையடித்துச் செல்ல
வேண்டிய காரணம் என்னவென்று கேட்க, “திரவியத்திற்கு சத்ருக்கள்
நால்வர்”. அவர்கள் தர்மம், அக்னி, சோரன், ராஜா என்பவர்கள்.
இதில் முதலாவதாகிய தருமத்தை நீ கொஞ்சமேனும்
கடைப்பிடிக்கவில்லை. இதை உனக்குப் புகட்டி தர்மத்தில் உன்னை
நிலைநாட்டச் செய்யவே இந்நாடகமாடினோம் என்றார்.மிகவும் ஆனந்தித்து பேரின்பக் காட்சியைக் கண்ட அம்மன்னன்
எனக்கருள்புரிந்த இத்திருக்கோலத்திலேயே கள்ளப் பிரானாக
(சோரநாதனாக) எந்நாளும் காட்சியளிக்க வேண்டுமென்று வேண்டிக்
கொள்ள வைகுண்டத்து எம்பெருமான் அவ்விதமே ஆகட்டும் என்று
கூறி மறைந்தார்.சோரநாதனிடம் ஈடற்ற பக்தி கொண்ட அம்மன்னன், கால
தூஷகனையும் நண்பனாகக் கொண்டு இக்கோவிலுக்கு எண்ணற்ற தான
தருமங்களைச் செய்து மண்டபமும், மதிலும் எழுப்பினான். இம்மன்னன்
யாரென்றும், பெயரின்னதென்றும் அறியுமாறில்லை.அதுமுதல் இப்பெருமானுக்கு கள்ளப்பிரான் என்ற திருநாமமே
பிரதானமாக இருந்து வருகிறது.