தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • நிலாத்திங்கள் துண்டத்தான் கோவில்
    திருநிலாத் திங்கள் துண்டம்
    சிறப்புக்கள்
    1. இப்பெருமாள் பார்ப்பதற்கு பேரழகு பொருந்தியவர். குளிர்ந்த
      கிரணங்களை வீசிக்கொண்டே இருக்கிறார் என்பதை இவர்
      முன்நின்ற சிறிது நேரத்திலேயே உணரமுடிகிறது. அவ்வளவு
      ரம்யமான தேஜஸ் பொருந்திய தண் என்ற நிலவுமுகன்.
      பெயருக்கேற்ற பொருத்தத்துடன் பேரழகு பொலிய நிற்கிறார்.

    2. மாமரத்தை தழைக்கச் செய்த பிறகு பார்வதி மீண்டும் யாகத்தை
      துவக்க இதனால் மேலும் சினந்த சிவன் தனது தலையில் உள்ள
      கங்கையை     ஏவினார்     தமக்கையாயிற்றே என்றெண்ணி
      தன்யாகத்திற்கு ஊறுவிளைவிக்க வேண்டாமென்று வேகமாக
      வந்த கங்கையை     வேண்டினாள். கங்கை     அதைப்
      பொருட்படுத்தவில்லை. பார்வதி தனது பக்தி மேலீட்டால்
      மணலினால் லிங்கம் செய்து தவமிருந்தாள். கங்கையால் அந்த
      லிங்கத்தைக் கரைக்க முடியவில்லை. இதைக் கண்ட பார்வதி
      மிக்க சந்தோஷத்துடன் அந்த லிங்கத்தை ஆலிங்கனம் செய்து
      கொண்டாள். இவ்விருவருக்கும் நிலாத்திங்கள் துண்டத்தான்
      அருள்பாலித்தார்.

      இவ்விதம் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒருசேர அருளிய ஸ்தலம்
      உண்டென்றால் அது இது ஒன்றுதான்.

    3. (காஞ்சியில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் அமைந்துள்ள
      இந்த திவ்ய தேசத்தில் சிவன் கோவில் குருக்களே பூஜை செய்து
      தீர்த்தம் கொடுக்கின்றார். தமிழ்நாட்டிலுள்ள திவ்ய தேசங்களில்
      சிவனடியார்களால் பூஜை செய்யப்படும் பெருமாள் உண்டென்றால்
      அது இவர் ஒருவர் தான்.)

    4. புராணங்களில் நேர் ஒருவரில்லா வல்லி என்று குறிக்கப்பட்ட
      இந்தப் பிராட்டிக்கு நிலாத்திங்கள் துண்டத்தானின் திவ்ய
      தேசத்தில் தனிச் சன்னதி உள்ளதாக அறிய முடிகிறது. இங்கு
      தற்போது நாச்சியாரில்லை. புராணங்கூறும் புஷ்கரணியில்லை.

    5. திருமங்கையாழ்வாரால் மட்டும் தலைப்பிலிட்ட பாடலால்
      மங்களாசாசனம்.

    6. நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில்,

      “மீண்டும் தெளியார்கள் மேதினயினோர் நின்னடிப்பூ
          பாண்டரங்க மாடிப் படர் சடை மேல் - தீண்டிக்
      கலாத்திங்கள் துண்டத்தான் மீதிருப்பக் கண்டு
          நிலாத்திங்கள் துண்டத்தானே”

      நிலாத்திங்கள் துண்டத்தானாக எழுந்தருளியுள்ள எம்பெருமானே,
      அர்ஜு னன் நின்னை பூசித்து நின் திருவடிகளில் சமர்ப்பித்த
      மலர்களை திருவடி பாக்கியத்தின் மேன்மை கருதி. பதினொன்று
      கூத்துக்களில் ஒன்றான பாண்டரங்கம் என்னும் கூத்தாடும் சிவன்
      தன் தலையில் ஏற்றுக் கொண்டான். இதை ஆழ்வார்கள் பலரும்
      அருளியுள்ளனர்.

      இவ்விதம் கலாத்திங்கள் (கலை-நிலவு) கலாத்திங்கள் - வளரும்
      திங்கள் (கலை என்றாலே வளர்தல் என்ற ஒரு பொருளும்
      உண்டு) சூடிய இவனது தலைமேல் தனது பாத பூஜைப்
      புஷ்பங்கள் இருந்தும் இந்த மேதினயோர் நீயே பரம்பொருள்
      என்று நின் திருவடிப் பெருமையை தெளியாமல் உள்ளார்களே
      என்று பாடி இருப்பது இத்தல வரலாற்றோடு மிகவும் சிந்தித்துப்
      பார்க்கத் தக்கதாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:33:48(இந்திய நேரம்)