தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • நித்திய கல்யாணப்பெருமாள்கோவில் - திருவிடந்தை

    சிறப்புக்கள்
    1. இந்த வராஹ மூர்த்தியை மாமல்லபுரத்திலிருந்து அரிகேசரிவர்மன்
      என்னும் மன்னன்    தினமும்    வந்து    வணங்கிசென்று
      கொண்டிருந்தான். இம்மன்னன் தன் பொருட்டு தினமும் 12
      மைல் வந்து சேவித்துச் செல்வதைக்கண்ட எம்பெருமான்
      இவனது கனவில் தோன்றி உனக்காக மாமல்லையில்
      எழுந்தருளுகிறேன் என்று சொல்லி பிராட்டியை வலப்பக்கத்தில்
      வைத்துக்     கொண்டு     எழுந்தருளினார்.     இக்கோவில்
      மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் பாதையின்
      ஓர்பால்    அமைந்துள்ளது.    இப்பெருமானைக்கூட
      திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

    2. 360 கன்னியரை ஒன்றாக்கி ஒரே பெண்ணாகச் செய்தமையால்
      இங்குள்ள பிராட்டிக்கு அகிலவல்லி நாச்சியார் என்று பெயரும்
      உண்டு.

    3. தினமும் ஒரு     திருமணம்     செய்து கொண்டதால்
      பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்றும் ஊருக்கு
      நித்ய கல்யாணபுரி என்றும் பெயராயிற்று. வராக அவதாரம்
      எடுத்தமையால் வராகபுரி என்னும் பெயருண்டு. அசுரகுல
      கால நல்லூர் என்பதே கல்வெட்டுகளில் காணப்படும் பெயர்.
      ஸ்ரீயின் அவதார ஸ்தலமாதலால் ஸ்ரீபுரி என்றும் இந்த ஊருக்கு
      நான்கு பெயர்கள் உண்டு.

    4. 360 கன்னியரில் முதற்கன்னிக்கு கோமளவல்லி என்பது பெயர்.
      இங்கு தனிக் கோயிலில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி
      நாச்சியார் என்பதே திருநாமம்

    5. நித்ய கல்யாண அவதாரத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம்.
      இவ்விருவர் திருமேனியில் (முகத்தில்) தாடையில் பொட்டு
      இயற்கையாகவே அமைந்திருப்பது கண்கூடு. இந்தப் பொட்டு
      திருமகள் திருமண வைபவத்தை நினைவு கூறும் நிகழ்ச்சியாகும்.

    6. இங்கு பெருமாள் எழுந்தருளியுள்ள முறை மிகச் சிறப்பான
      ஒன்றாகும். ஒரு திருவடி பூமியிலும் மற்றொன்று ஆதிசேடனும்
      அவன் பத்தினியான இருவர் முடியிலும் வைத்துக்கொண்டு,
      அகிலவல்லி நாச்சியாரை இடது தொடையில் தாங்கிக்கொண்டு,
      சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் வராஹ மூர்த்தியாய்
      நின்றிலங்குகிறார்.

    7. கி.பி. 1052 ஆம் ஆண்டில் விஜய ராஜேந்திர தேவ சோழனின்
      35வது ஆட்சியாண்டில்    இக்கிராமம்    இப்பெருமாளுக்கே
      தேவதானமாய்த் தரப்பட்ட செய்தியை ஜெயங்கொண்ட சோழ
      மண்டலத்து கலியாண திருவிடவெந்தை தேவர்க்கு நித்திய
      சிறப்புக்கும்... நாம் பிறந்த பூர நாளால் திங்கள் தோறும் திருவிழா
      உள்ளிட்டு வேண்டும்     நிபந்தனைகளுக்கும்.. யாண்டு
      முப்பத்தைந்தாவது முதல் தேவதான இறையிலியாக ... கொடுக்க
      வென்று திருவாய் மொழிந்தருளினாரென்று திருவோலை கூறுகிறது.
      மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இயங்கும்
      இத்தலத்தின் (SSI 258 of 1910) கல்வெட்டு - செய்தியைக்
      கூறுகிறது.

    8. முதல் ராஜராஜசோழன் ராஜராஜசோழத் தேவர், குலோத்துங்க
      சோழன் போன்றோர் இங்கு கைங்கர்யம் செய்து, இவர்கள்
      தொடர்பான கல்வெட்டுகளும் காணப்படுவதால் இது ஒரு
      காலத்தில் சோழநாட்டுக்கு அடங்கிய பகுதியாகும், சோணாட்டுத்
      திருப்பதியாகவும் விளங்கி இருத்தல் வேண்டும்.

    9. கலிச்சிங்கன் என்ற பெயரில் திருமங்கையாழ்வாருக்கு இங்கு ஒரு
      மடம் இருந்த செய்தியும் கல்வெட்டால் அறிய முடிகிறது. இது
      மிகவும்    தொன்மையான    மடம்.    மலையாளத்திலிருந்து
      யாத்திரையாக வந்த சில வியாபாரிகள் இத்தலத்தின் தீப
      கைங்கர்யத்திற்கு பொன் அளித்த செய்தியும் கல்வெட்டால்
      அறியப்படுகிறது.

    10. யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட    பல்லக்கு ஒன்று
      இக்கோவிலில் உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில்
      ஒன்றும், இங்கொன்றுமாக இந்தியாவிலேயே இந்த இரண்டு
      யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென தொல்பொருள்
      ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர்.

    11. திருமங்கையாழ்வாரால் மட்டும் 13 பாசுரங்களில் மங்களாசாசனம்
      செய்யப்பட்டதலம். தமது சிறிய திருமடலில் திருமங்கையாழ்வார்
      இக்கிராமத்தின் எழிலைச் சொல்லுகிறார் பாருங்கள்.

      “காரார் குடந்தை கடிகை கடன்மல்லை
      ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை”

    12. திருவிடவெந்தை என்று சொன்னால் யாருக்கும் தெரியாது.
      திருவடந்தை திருவடந்தை என்று சொன்னால்தான் தெரியும்.
      சென்னையிலிருந்து வரும் பேருந்துகளிலும் திருவடந்தை என்ற
      பெயரே காணப்படுகிறது.

    13. மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார்.

    14. இன்று சிறப்புற்றிருக்கும் கோவளம் என்பதே ஒரு காலத்தில்
      பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும்    முகத்தான்
      கோமளவல்லிபுரம் என்று வழங்கப்பட்டதாகும். இங்குதான்
      காலவரிஷி தவம் புரிந்தார

    15. எம்பெருமான் 360 கன்னிகைகளை இரண்டு கன்னிகளாக்கி
      ஏற்றுக் கொண்டார் என்றும் சொல்வர். ஒருவர் கோமளவல்லி
      (தனிக் கோவில் நாச்சியார்) இன்னொருவர் அகிலவல்லி,
      இத்திருநாமத்தில் அனைத்து ஜீவராசிகளும் அடங்கி விட்டதாக
      ஒரு ஐதீஹம். ஒவ்வொரு தினமும் அவர் திருமணம் கொண்டதும்
      ஓர் அடையாளம். அதாவது பிறக்கும் உயிர்கள் ஒவ்வொன்றையும்
      ஒவ்வொரு வினாடியிலும் ஏற்று அவைகட்கு நாயகனாக
      அருள்புரிகிறார் என்பதும் ஐதீஹம். (அதாவது நாமெல்லாம்
      நாயகி போன்றும் எம்பெருமான் ஒருவரே நாயகன் என்றும்
      சொல்லும் வைணவக் கொள்கை ஈண்டு நோக்கத்தக்கது)

    16. நித்ய கல்யாணப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் இத்தலத்தில்
      மணமாகாத ஆண்களும் பெண்களும் திருமணத்தின் பொருட்டு
      வேண்டிச் செல்வர் அவர்கட்கு திருமணம் நடைபெறுவதும்
      கண்கூடு.

    17. திருவிடவெந்தை எம்பெருமானைப் பற்றி தமது 108
      திருப்பதியந்தாதியில் பிள்ளைப் பெருமாளைய்யங்கார் கூறுகிறார்.

      எத்தனையோ பிறவிகள் போயிற்று. அவற்றில் எல்லாம் செய்த
      கொடு வினைகள் விடாதே பின்தொடர்ந்து விரட்டி வந்து
      வாட்டியது. இந்தப் பிறவியிலோ நான் வேறுயாருக்கும் அடிமை
      செய்யாது     எம்பெருமான்     ஒருவனுக்கே அடிமை
      பூண்டொழுகலுற்றேன். இதற்குமுன் நான் குற்றேவல் செய்தேன்.
      அதாவது மானிடர்க்கு அடிமைப்பட்டு வயிறு வளர்த்தேன்.
      இது குற்றமுள்ள அடிமையாயிற்று. ஆனால் இந்தப் பிறவியிலோ
      நான் எம்பெருமான் ஒருவனுக்கே அடிமை செய்வதென்று
      தீர்மானித்து அதன்படி ஒழுகினேன். எனவே இது வழுவிலா அடிமையாயிற்று.

      இவ்வாறு     திருவிடந்தை     எம்பெருமானுக்கே
      அடிமைப்பட்டேனென்று தெரிந்ததும் என்னைப் பின் தொடர்ந்து
      வந்த பாவமெல்லாம் பயந்து கொண்டு ஓடிப்போய்விட்டன.

      நின்று திரியும் பிறவியெல்லாம் நேர்வித்துக்
      கொன்று திரியும் கொடுவினையார் - இன்று
      வெருவிட வெந்தைக்கே விழுமிய தொண்டானேன்
      திருவிட வெந்தகைக்கே செறிந்து.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:52:31(இந்திய நேரம்)