2. அற இலக்கியம்

திருக்குறள்

பாடல் கருத்து
Theme of the Poem


கல்வி

(1) கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்கவேண்டும். அவ்வாறு கற்ற பிறகு, கற்றபடி நடக்க வேண்டும்.

குறள் - 1

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.


(2) எண் மற்றும் எழுத்து என்று சொல்லப்படும் இந்த இரண்டும் வாழும் உயிர்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

குறள் - 2

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.


(3)  கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகிறவர் கற்றவரே. கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.

குறள் - 3

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

(4)  மகிழும்படியாகக் கூடிப் பழகி, வருந்தி நினைக்கும்படியாகப் பிரிதல் புலவர் தொழிலாகும்.

குறள் - 4

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.

(5)  செல்வர் முன் வறியவர் நிற்பதுபோல் ஆசிரியர்முன் ஆசையால் தாழ்ந்துநின்று கல்வி கற்றவரே உயர்ந்தவர்; அவ்வாறு கல்லாதவர் இழிந்தவர்.

குறள் - 5

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்

கடையரே கல்லா தவர்.

(6)  மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அதுபோல மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவு அறிவு உருவாகும்.

குறள் - 6

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

7.  கற்றவனுக்கு எந்த நாடும், ஊரும் தன் நாடாகும்; ஊராகும். ஆகையால் ஒருவன் இறக்கும் வரையில் கல்லாமல் காலம் கழிப்பது ஏன்?

குறள் - 7

யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.

(8)  ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வி அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையதாகும்.

குறள் - 8

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

(9)  தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் அக்கல்வியையே விரும்புவர்.

குறள் - 9

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

(10)  ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே யாகும். கல்வியைத் தவிர மற்ற பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல.

குறள் - 10

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை.

அறிவுடைமை

(1)  அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அத்துடன் பகைவர்களாலும் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் ஆகும்.

குறள் - 1

அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

(2)  மனத்தைக் கண்ட இடத்தில் செல்லவிடாமல் தீமையானதில் இருந்து நீக்கிக் காத்து, நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

குறள் - 2

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.

(3)  எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும், அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.

குறள் - 3

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

(4)  தான் சொல்லுவதை எளிய பொருளுடையனவாகவும் பதியுமாறும் சொல்லித் தான் பிறரிடம் கேட்டவற்றில் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பதே அறிவாகும்.

குறள் - 4

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.

(5)  உலகத்தில் உயர்ந்தவரை நட்பாக்கிக் கொள்ளுவது சிறந்த அறிவாகும்; அந்நட்பை முதலில் மகிழ்ந்தும், பின்பு வருந்தியும் வராமல் காப்பது அறிவு.

குறள் - 5

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு.

(6)  உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றனரோ, அவ்வாறே அவரோடு பொருந்தி தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

குறள் - 6

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு.

(7)  அறிவுடையார் எதிர்காலத்தை முன்னே எண்ணி அறிய வல்லார்; அறிவில்லாதவர் அதனை அவ்வாறு அறிய முடியாதவர்.

குறள் - 7

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

(8)  அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாமல் இருப்பது அறியாமையாகும். அஞ்சத்தகுந்ததைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையோர் செயலாகும்.

குறள் - 8

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

(9)  வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளும் அறிவுடையோருக்கு நடுங்கும்படி வரும் துன்பம் எதுவும் இல்லை.

குறள் - 9

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.

(10)  அறிவுடையார் எல்லாம் உடையவரே ஆவர். அறிவு இல்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

குறள் - 10

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.