தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • சௌம்யநாராயணப்பெருமாள் கோவில்
    திருக்கோட்டியூர்
    சிறப்புக்கள்
    1. கதம்ப முனி 64 சதுர்யுகங்கள் இப்பூவுலகில் இருந்ததாக
      பிர்ம்மாண்ட புராணங்கூறுகிறது. எனவே இந்த திவ்யதேசத்தின்
      தொன்மை எழுத்தில் அடங்கும் தன்மையதன்று.

    2. மூன்று     தளங்களுடன் கூடிய அஷ்டாங்க விமானம்
      இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். 108 வைணவ திவ்ய
      ஷேத்திரங்களில் இங்கும் திருக்கூடல் என்னும் மதுரையிலும்
      ஆகமவிதிகட்குட்பட்ட அஷ்டாங்கவிமானம் அமைந்துள்ளது.

      முதல் தளத்தில் “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை
      மெத்தையாக விரித்ததன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற”
      திருப்பாற்கடல் நாதனாகப் பள்ளி கொண்ட காட்சி.

      பாற்கடலில் இருந்து எழுந்துவந்த காரணத்தால் ஷீராப்தி
      நாதனாக முதல் தளத்திலும், அதன்பிறகு 2வது தளத்தில் நின்ற
      திருக்கோலத்திலும் 3வது தளத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும்
      பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

      தேவர்களின் நடுவில் நின்றமையால் ஸ்தித நாராயணன் எனவும்,
      ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டதால் உரக மெல்லணையான்
      என்றும் திருப் பெயர்கள் உண்டாயிற்று.

    3. அஷ்டாங்க விமானத்தின் வடபகுதியை மயனும், தென்பகுதியை
      விஸ்வகர்மாவாகவும்     அமைத்தனர்.     விஸ்வகர்மாவால்
      செய்யப்பட்ட பாகத்தில் இரண்யனைப் பிடித்துக் கொண்ட
      நரசிம்ம உருவமும், மயனால் செய்யப்பட்ட பகுதியில்
      இரண்யனைக் கொன்ற நரசிம்ம உருவமும் அமைக்கப்பட்டுள்ளது.
      இந்த நரசிம்ம மூர்த்திகள் காண்போரை பிரம்மிக்கச் செய்யும்
      தோற்றமுள்ளவை.

    4. அஷ்டாங்க விமானத்தில் தென்திசை நோக்கிய நரசிம்மனுக்கு
      தெற்காழ்வான் (தட்சினேஸ்வரன்) என்றும், வடதிசை நோக்கிய
      நரசிம்மனுக்கு வடக்காழ்வான் (உத்தரேசுவன்) என்பதும்
      திருநாமம்.

    5. நகக்கிரகங்களில் சந்திரனின் மகன் புதன். இந்த புதனின்
      மைந்தன் புருரவன் என்பவன் மிகச்சிறந்த தர்மவானாக இருந்து
      செங்கோல் செலுத்தி நாட்டையாண்டுவந்த காலத்தில் கங்கா
      ஸ்நானம் செய்யும் பொருட்டுதனது விமானத்திலேறி வரும்போது,
      இத்திவ்ய தேசத்தின் மேல் பறக்க முடியாதபடி (அஷ்டாங்க
      விமானத்தின் சக்தியால்) தரையிறங்க நேர்ந்ததும் அதன்பின்
      இங்குள்ள     பெருமானின்     சக்தியறிந்து     வழிபட்டு,
      இத்திருக்கோவிலைச் சுற்றி அந்தணர்களும், பெரியோர்களும்,
      வாழ்வதற்குரிய அழகிய நகரத்தை நிர்மாணித்துச் சென்றான்.
      (இக்கதை பிரம்ம கைவர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது.)

    6. மற்ற ஸ்தலங்களில் உள்ளதைப்போன்று பஞ்ச லோகங்களால்
      அமையாது, தூய வெள்ளியில் உற்சவருக்கு விக்ரகமிருப்பது
      இன்னொரு சிறப்பாகும் (இச்சிலை இந்திரன் கொடுத்ததாக
      ஐதீகம்) வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று
      திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

    7. வைணவ மத வளர்ச்சியில் ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு
      ஏற்றமுண்டோ அதற்குச்     சமமான     ஏற்றம்     இந்த
      திருக்கோட்டியூருக்கு உண்டு. “திருமந்திரம் விளைந்த திவ்ய
      தேசம்” என்ற திருப்பெயரும் இத்தலத்திற்கு உண்டு. இராமானுஜர்
      ஸ்ரீரங்கத்திலிருந்து 17 முறை இங்குவந்து திருக்கோட்டியூர்
      நம்பிகளிடம் ஞானம் பெறமுயல, 17 முறையும் பல
      காரணங்களைக் கூறி திருப்பியனுப்பி இறுதியாக 18வது முறை
      வந்தபோது இராமானுஜருக்குத் “திருமந்திர உபதேசம்”செய்வித்து
      இதனை யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது. அவ்வாறு குருவின்
      கட்டளையை மீறித் தெரிவித்தால் உமக்கு நரகம்தான்
      கிடைக்குமென்றார்.

      சரி, என்று ஒப்புக்கொண்ட இராமானுஜர் அவரிடம் விடைபெற்றுக்
      கொண்டு திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி “எல்லீரும்
      வாருங்கள், திருமந்திரம் தெரிந்து கொள்ளுங்கள்” என்று உரக்கக்
      கூவி திருமந்திரத்தை எப்படி உச்சரிப்பதென்பதை எல்லோருக்கும்
      தெரிவித்தார்.

      இதனைச் செவியுற்ற திருக்கோட்டியூர் நம்பி விரைந்து வந்து
      இராமானுஜரை நோக்கி “இராமானுஜரே திருமந்திரத்தைப்
      பிறருக்கு     உரைத்தால் உமக்கு என்ன     தண்டனை
      கிடைக்குமென்பதை மறந்து விட்டீரா” என்றார்.

      அதற்கு இராமானுஜர் “தெரியும் சுவாமீ, இம்மந்திரத்தைப்
      பிறருக்குச் சொன்னால் எனக்கு நரகம் கிட்டுமென்றீர்
      பரவாயில்லை, அடியேன் ஒருவன் நரகம் புகுந்தாலும்
      பரவாயில்லை. இம்மந்திரம் தெரிந்து உச்சரிக்கும் அனைத்து
      ஜீவாத்மாக்களுக்கும் மோட்சம் கிட்டுமே என்றார்.

      இதனைக் கேட்டு, ஒரு கணம் சிந்தித்த நம்பிகள் இராமானுஜரை
      பகவானின் அவதாரம் என்றே கருதி     “நீர் தான்
      எம்பெருமானாரோ” என்று கூறி கட்டித் தழுவிக் கொண்டார்.

      அது முதல் இராமானுஜருக்கு “எம்பெருமானார்” என்னும்
      திருநாமம் உண்டாயிற்று. இராமானுஜருக்கு, உடையவர்,
      ஸ்ரீபாஷ்யகாரர், திருப்பாவை ஜீயர் என்னும் திருநாமங்களும்
      உண்டு.

      எனவே வைஷ்ணவ சம்பிரதாய ஏற்றத்திற்கும் ஒரு
      மறுமலர்ச்சிக்கும்     பாசறையாக     திருக்கோட்டியூர்
      திகழ்ந்ததென்பதில் ஐயமில்லை.

    8. அஷ்டாங்க     விமானத்தின்     மூன்றாவது தளத்திலிருந்து
      கொண்டுதான் இராமானுஜர் திருமந்திர ரகசிய அர்த்தத்தை
      வெளியிட்டார். இந்த 3வது மாடியில் கோபுரத்தின் உச்சியில்
      ஊரைப் பார்த்தவண்ணம் இராமானுஜருக்கு சிலை வைக்கப்பட்டு
      உள்ளது.

    9. திருக்கோட்டியூர் நம்பியின் அவதாரஸ்தலமான     இங்கு
      அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருக்கோட்டியூர்
      நம்பியின் வம்சா வழியினர் இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து
      வருகின்றனர்.

    10. மற்றவிடத்து இல்லாதவாறு, இங்குள்ள தாயாருக்கு திருமாமகள்,
      நிலமாமகள், குலமாமகள் என்ற மூன்று திருநாமங்களுண்டு.

    11. இங்குள்ள திருக்கோட்டியூர் நம்பிகள் சன்னதியில் அவரின்
      திருவாராதன மூர்த்தியான ஸ்ரீராமன், சீதை, இலட்சுமணன்,
      அனுமான், பவிஷ்யதாச்சாரியர் விக்ரகமும் எழுந்தருளியுள்ளன.

    12. திருக்கோட்டியூருக்கு தெற்கில் சுமார் 18 கீ.மி. தொலைவில்
      அமைந்துள்ள ஒக்கூர் என்னும் ஊரில் வாழ்ந்த சங்ககாலத்துப்
      பெண்பாற் புலவர் “ஒக்கூர் மாசாத்தியார்” என்பார்
      இக்கோவிலைப் பற்றிப் பாடிய பாட்டொன்று புறநானூற்றில்
      காணப்படுகிறது.

    13. முகம்மதிய படையெடுப்பின் போது இப்பெருமானை (உற்சவரை)
      கும்பகோணத்தில் மறைத்து வைத்திருந்தனர், என்றும் அதற்கு
      காரணமாய் இருந்த அமுதனுக்கு நன்றிப்பாக்கள் பாடப்பட்டன
      என்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது.

    14. பத்ரிகாச்ரமத்தைப் போல இத்தலம் பெருமைவாய்ந்ததெனவும்,
      அதனால்     இதனை     தென்பத்ரியென்றும்     கூறுவர்
      “நைமிசாரண்யத்தில் செய்ததவப்பயனும், கங்கை கரையில் நேர்ந்த
      மரண பலமும் (ஆயுள் விருத்தி) குருச்சேத்திரத்தில் செய்த
      தனப்பிரயோஜனமும்” ஆகிய இம்மூன்றும் திருக்கோட்டியூரைச்
      சேவிப்பதால் கிடைக்குமென்று ப்ரம்மாண்ட புராணத்தில் 47வது
      ஸ்லோகம் கூறுகிறது. கோஷ்டியூர் போகாதவன் குரங்காய்ப்
      போவான் என்பதும் வைணவப் பழமொழி.

    15. மகாமகக் கிணறு (சிம்மக்கிணறு) இங்கு உள்ளது. 12
      ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நீராடுவது மிகவும் விசேஷம்.

    16. பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்,
      திருமழிசையாழ்வார்     ஆகிய     ஐந்து ஆழ்வார்களாலும்
      மங்களாசாசனம் செய்யப்பட்டது. மொத்தம் 40 பாசுரங்கள்
      மங்களாசாசனம்.

    17. திருக்கோட்டியூர் வாழ்ந்த செல்வ நம்பிகளைத்தான் பெரியாழ்வார்
      தம் பாசுரத்தில் அவ்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்
      கோன் அபிமான துங்கன் செல்வன் என்று தனக்கு பரதத்துவ
      நிர்ணயம் செய்ய உதவி செய்ததைக் குறிக்கிறார். இவ்வூரின்
      செல்வநம்பிகள் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனை
      புரோகிதர் ஆவர்.

    18. பராசர பட்டர் என்பவர் கூரத்தாழ்வாருடைய திருக்குமாரர்.
      வீரசுதந்திர சிம்மராயன் என்னும், சிற்றரசன் திருவரங்கன்
      கோயிலை ஜீர்னோத்தரணம் செய்கையில் “திருவீதி பிள்ளை
      பட்டர் என்பாரின் திருமாளிகை மதிற்புரத்து மூலையில் இருந்தது.
      அதை இடித்து அப்புறப்படுத்த சிற்றரசன் முனைந்தபோது மனம்
      வெதும்பிய பராசர பட்டர் சிற்றரசனை பகைத்துக்கொண்டு
      திருவரங்கத்தினின்றும் வெளியேறி     1 1/2     ஆண்டுகள்
      திருக்கோட்டியூரில் தங்கி இருந்தார். இவர் கோஷ்டிஸ்தவம்
      என்னும் நூல் எழுதியுள்ளார்.

    19. இராமானுஜரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

    20. செல்வ நம்பிகள் பெரியாழ்வாரைத் திருக்கோட்டியூருக்கு
      அழைத்து வந்தபொழுது ஸ்ரீஜெயந்தி உற்சவம் நடைபெற்றது.
      பக்திப் பரவசத்துடன் மிகவும் நேர்த்தியான ஆடல்பாடலால்
      உற்சவம் நடந்ததைக் கண்டு இதுதான் ஆயர்பாடி என்றும்,
      வண்ண மாடங்கள் சூழ்.... திருக்கோட்டியூர் என்று
      மங்களாசாசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து தாலாட்டு,
      நீராட்டல், பூச்சூடல் போன்றனவும் இவருக்கே பாடினதாயும்
      கொள்வர்.

    21. உரக மெல்லணையான் என்று பெரியாழ்வார் மூலவரையும்
      திருமாமகட் கினியான் என்று உற்சவரையும் மங்களாசாசனம்
      செய்கிறார். திருமங்கையாழ்வார், திருப்பிரிதி என்ற திவ்ய
      தேசத்தில் தொடங்கிய பதிகம் மூலமான அர்ச்சாவதார
      மங்களாசாசனத்தை, திருக்கோட்டியூரில் நிறைவு செய்கிறார்,

    22. செந்நெற்குடி புலவர் சுப்புராயலு என்பர் சௌமிய நாராயண
      மூர்த்திப் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இப்பெருமானுக்கு
      யாத்துள்ளார்.

    23. சிவகங்கை சமஸ்தானத்து வாரிசினர் தொன்று தொட்டு
      இத்தலத்திற்குப் பெருந்தொண்டு புரிந்து வருகின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:16:51(இந்திய நேரம்)