தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • கல்யாண சகந்நாதப் பெருமாள் கோவில்
    திருப்புல்லாணி
    சிறப்புக்கள்
    1. கடற்கடவுள் தன் பத்தினியோடு இராமனைச் சரணமடைய
      அவனுக்கு மோட்சமளித்த ஸ்தலம்.

    2. புல்லவர், கண்ணுவர், சமுத்திர ராஜன், வீடணன், போன்றோர்
      எம்பெருமானை இவ்விடத்துச் சரண் புகுந்து பரமபதம்
      பெற்றதால் இது ஒரு சரணாகதித் தலம் சரணாகதி தத்துவத்திற்கு
      108 திவ்யதேசங்களில் இது தான் மிகவும் முக்கியத்துவம்
      வாய்ந்தது.

    3. வால்மீகி இராமாயணம், துளசிராமாயணம், மஹாவீர சரிதம்,
      ரகுவம்சம் போன்ற நூல்களில் இத்தலம் குறிக்கப்படுதல் இதன்
      தொன்மைக்குச் சான்று. சங்க காலத்து புலவர் புல்லங்காடர்
      என்பவர் இவ்வூரினர்.

      இவ்வூரின் பெயரை வைத்தே அவரை விளித்தமை இவ்வூரின்
      தொன்மைப் புகழுக்கோர் சான்று.

    4. இங்கு ஸ்தல விருட்சமாக அமைந்துள்ள அரசமரம் (அசுவத்தம்)
      மிகச்சக்தி வாய்ந்தது. லட்சுமி அரசமரத்தில் உறைகிறாள் என்றும்,
      மரங்களில் நான் அரசமரமாக உள்ளேன் (அச்வத்த ஸர்வ
      விருட்சாணாம்) என்று கீதையில் கண்ணனும் கூறியது. இதன்
      சிறப்பை விளக்கும். புத்திரப்பேறு இல்லாதவர்கள் ஸேதுவில்
      நீராடி இத்தலத்தில் உள்ள மூர்த்தியை வணங்கி இங்குள்ள
      தெய்வாம்சம் பொருந்திய அரசமரத்தினடியில் நாகப் பிரதிஷ்டை,
      செய்து பால்ப் பாயாசம் அருந்தினால் புத்திரப்பேறு
      உண்டாகுமென்பது புராண வரலாறு. இம்மரத்தை பக்திச்
      சிரத்தையோடு வலம் வந்தால் ஏற்படு நன்மைகளைப் பற்றிக்
      கீழ்க்காணும் கவிதை விளக்குகிறது.

      “பெருவயிறு கண்டமாலை, உதரவலி
          அண்ட வாயு, பிரமியகிரந்தி, சூலை, தலைநோவும்
      இருமலொடு, தந்தவாயு, குருடு, செவிடு, சொல் ஊமை
          இவைகள் முதல் தொந்த ரோக வினையாவும்
      ஒருநொடியில் அஞ்சி ஓடும் வறுமையொடு சஞ்சிதாவி
          யுபரியனடைந்த பாவம் அவைதாமும்
      மருமலர் பிறந்த கோதை மருவி மகிழ்புலாணி
          வளர் அரசு கண்ட பேரை அணுகாவே”

    5. இத்தலத்தைப் பற்றி திருஞான சம்பந்தர் “அணையில் சூழ்கடல்
      அன்றடைத்து வழி செய்வதவன்” என்றும் “கடலிடை மலைகள்
      தம்மால் அடைந்த மால்களும் முற்றி” என்று திருநாவுக்கரசரும்
      தம் பதிகங்களில் புகழ்ந்துய்ந்தனர்.

    6. தர்ப்பசயன ராமன், ரசாயனச் சத்து பொருந்திய சக்ர தீர்த்தம்
      இவ்விரண்டும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

    7. ஆதிஸேது, என்றழைக்கப்படும் சேதுக்கரை இங்கிருந்து 4 கி.மீ.
      தொலைவில் உள்ளது. ரத்னாகாரம் என்றும் இதனை அழைப்பர்.
      ஸேது என்ற வட சொல்லுக்கு “அணை” என்று பெயர். எனவே
      ஸ்ரீ வைஷ்ணவர்கள் இந்த சேதுவைத் “திருஅணை” என்பர்.
      ஒரு காலத்தில் இந்த ஸேதுவே (திரு அணை) இந்தியாவின்
      தெற்கெல்லையாகத்     திகழ்ந்தது என்பதை “ஆதிஸேது
      ஹைமாசலம்” என்று பழங்கால நூல்களில் கூறுவதிலிருந்து
      அறியலாம்.

      கண்ணன் திருமேனிபட்ட பிருந்தாவனம் என்ற நெருஞ்சிக்காடு
      புனிதம் பெற்றது போல், இராமனின் சம்பந்தத்தால் இந்த
      ஸேதுவும் மேன்மை பெற்றது. இந்த ஸேதுக் கரைக்குப்
      பக்கத்தில் கடலுக்குள் கிழக்கே சற்று தள்ளி ராமன் கட்டிய
      அணை என்று கூறப்படும் நீண்டதொரு “கல் அரண்” தென்படும்.
      இதன் அருகில் சென்று பார்ப்பது சகல பாவங்களையும்
      போக்கும். என்று சொல்லப்படுகிறது.

      இந்தக் கடற்கரையில் இராம தூதனான அநுமான் தென்றிசை
      நோக்கி கூப்பிய கரங்களுடன் இராம தியானத்தில் ஆழ்ந்துள்ள
      காட்சி மிகவும் எழில் வாய்ந்ததாகும். இந்த ஆஞ்சநேயரும்
      மிகப் பெரும் வரப்பிரசாதியாக மக்களின் துன்பங்களைப் போக்கி
      அருள் பாலிக்கிறார்.

    8. இராமாயணத்தோடும், இராமாயணம் பேசுவோருடனும் நீங்காத்
      தொடர்பு கொண்டது இத்தலம்.

    9. திருமங்கையாழ்வாரால் மட்டும் 21 பாசுரங்களில் மங்களாசாசனம்
      செய்யப்பட்ட தலம், புன்னை முத்தம் சூழ்ந்த அழகாய
      புல்லாணியே என்றும், போது அலரும் புன்னை சூழ்
      புல்லாணியென்றும்,     பூஞ்செருத்தி     பொன்     சொரியும்
      புல்லாணியென்றும் பவ்வத்திரை உலவு புல்லாணி என்றும்
      இத்தலத்தைச் சுற்றியுள்ள இயற்கை யெழிலில் மாந்தி
      மயங்குகிறார். திருமங்கையாழ்வார்.

    10. இத்தலத்தில் கிருஷ்ண பரமாத்மா தொட்டில் கண்ணணாக
      அவதரித்துள்ளார். தசரதர் புத்திரப் பேற்றை வேண்டி இங்கு
      வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தாரென்பர். அவர்கள் இங்கு
      செய்த யாகத்தின் பயனாகவே நான்கு வேதங்களும் இராமன்
      முதலான 4 புத்திரர்களாக அவதரித்தனர் என்பது வரலாறு.
      எனவே இன்றளவும் இத்தலம் புத்திரப் பேற்றை நல்கும் புனித
      தலமாகக் கொள்ளப்படுகிறது.

    11. மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியது மட்டுமன்றி
      இப்பெருமான்     மீது     அவர்     கொண்ட     ஈடுபாடும்
      பெருமைக்குரியதாகும்.

    12. ஆழ்வார், ஆச்சார்யர்கள் பாசுரம் தவிர்த்து புல்லை, அந்தாதி,
      திருப்புல்லாணி மாலை, தெய்வச்சிலையான் ஸ்துதி, வாசனமாலை,
      புல்லாணிப் பெருமாள், நலுங்கு போன்ற நூல்களும்
      இத்தலத்தைப் பற்றி செய்திகள் தருகின்றன.

    13. இத்தலத்தின் சிறப்பைப் பற்றி சங்க நூலான அகநானூற்றின்
      70வது பாடல் பின்வருமாறு கூறுகிறது.

      “வெள்வேர் கவுரியிர் தொன் முதுகோடி
          முழங்கிடும் பௌவம் இரங்கும் முன்றுறை
      வெல்போர் ராமன் அருமறைக் கவித்த
          பல்வீழ் ஆலம் போல்
      ஒலி அவிந்த தன்றிவ் வழுங்கலூரே”

      வேலினை உடைய பாண்டியரது மிக்க பழமையுடைய திருவணைக்
      கரையின் அருகில் முழங்கும் இயல்பினதாக பெரிய கடலில்
      ஒலிக்கின்ற துறைமுகத்தில் வெல்லும் போரினில் வல்ல இராமன்
      அரிய மறையினை ஆய்தற் பொருட்டாக புட்களின் ஒலி
      இல்லையதாகச் செய்த பலவிழுதுகளையுடைய ஆலமரம் போல
      இவ்வூரில் எழும் ஒலி அவிந்து அடங்கியது.

    14. இராமநாதபுரம்     சேதுபதி சமஸ்தானத்தின் சேதுபதிகள்
      தொன்றுதொட்டு இத்திருத்தலத்திற்கு ஆற்றும் தொண்டு
      அவர்தம் பெருமையை வரலாற்றோடு இணைக்கும் சிறப்பை
      பெற்றதாகும்.

    15. ரத்னாகாரம் எனப்படும் இந்த சேதுவை கண்ணுற்ற பேர்கட்குப்
      பாவங்கள் இல்லையென்று இராமபிரானே தெரிவித்துள்ளார்.
      “திரு அணை காண அருவினை இல்லை” என்று இதைக் கூறுவர்.
      இதன் மேன்மையைக் கம்பர்.

      “மெய்யின் ஈட்டத்து இலங்கையர் மேன்மகன்
          மெய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது
      ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
          கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்”

      ஐயனே குபேரனது புண்ணியத்தால் முதலில் நான் அழகாகப்
      படைக்கப்பட்டேன். பின்பு உனது தவமகிமையால் ராவணன்
      வந்து குடியேறினான். நெடிது வாழ்ந்தான். நாளடைவில்
      அரக்கர்கள் பல கொடுஞ்செயல்கள் செய்து இங்கு பாபச் சுமை
      பெருகிவிட்டது. இனிமேல் என்னால் பொறுக்க முடியாது. நீ
      விரைவில் வந்து தீமை போக்கி என்னைப் புனிதமாக்கி அருள்
      என்று இராமனை நோக்கி இலங்கா தேவி கையை நீட்டி நின்றது
      போல் (சேது) இவ்வணை காட்சியளிக்கின்றதென்பதைக் கம்பன்
      தன் இராமாயணத்தே காட்டுகிறான்.

      நாங்கள் மணலில் சிறு வீடு கட்டி விளையாடிக்
      கொண்டிருக்கிறோம்.     எம்பெருமானே     நீயோ அன்று
      கடலைத்திருத்தி அணைகட்டி     விளையாடினாய்.     உன்
      பொற்பாதங்களின் மேன்மையை உலகோருணர முடியாது. ஓ,
      மாகடல் வண்ணனே நீ உன் தேவிமார்களுடன் வந்து நாங்கள்
      கட்டிக்கொண்டிருக்கும் இந்த மணல் வீடுகளை மிதித்து ஆடி
      சிதைக்கமாட்டாயா என்று கேட்கிறார் ஆண்டாள் இதோ
      அப்பாடல்.

      “ஓத மாகடல் வண்ணா உன் மண
          வாட்டி மாரோடு சூழறும்
      சேதுபந்தம் திருத்தினா யெங்கள்
          சிற்றில் வந்து சிதையேலே - 520

      திருமழிசையாழ்வார் சேதுவின் வரலாற்றையே தெளிவாகப் பேசிப்
      போகிறார்.

      இராமன் வாலியைக் கொன்றதனால் இராமனுக்கு உதவ வந்த
      வானர சேனையினால் கட்டப்பட்டது, இந்த சேது. எனவே
      வாலியை     வீழ்த்துவதற்கு இதுவே முன்னோடியாயிற்று.
      இலங்கையை அழிப்பதற்காக கட்டப் பட்ட சேது. இராவணனை
      ஒடுக்குவதற்காக இராமன் உகப்போடு வீறு நடைபோட ஏதுவாய்
      அமைந்தது இந்த சேது, என்று திருமழிசையாழ்வார் இந்த
      சேதுவை மங்களாசாசனம் செய்கிறார்.

      “இது இலங்கை யீடழியக் கட்டிய சேது
          இது விலங்கு வாலியை வீழ்த்தது - இது விலங்கை
      தானொடுங்க வில்னுடங்கத் தண்தா ரிராவணனை
          ஊனொடுங்க எய்தான் உகப்பு”
              - நான்முகன் திருவந்தாதி 28

      இவ்விருவரின் மங்களாசாசனங்களைப் பார்த்தார் குலசேகராழ்வார்.
      ஆகா,     சேதுக்கரைக்கு     இப்படியொரு மங்களாசாசனம்
      நல்கியுள்ளனரே நாமும் இதனை மங்களாசாசனம் செய்ய
      வேண்டாமோ என்று சிந்தை கொண்டார். இவர்கள் விட்டுவிட்ட
      ஒன்றைச் சேர்த்து (அதாவது சேது அணையை கட்டுவதற்கு
      அணில்கள் செய்த பேருதவியை நினைத்து) குரங்குகள்
      மலைகளைத் தூக்கிக் கொண்டு அத்துடன் கடலில் குதித்து
      தம்மைக் குளிப்பாட்டிக்கொண்டு ஓடியும் ஆடியும் புரண்டும் ஒரு
      பாதையை அமைத்தன. குரங்குகளால் போடப்பட்ட மலைக்கற்கள்
      மற்றும் பாறைகளில் இடையிலிருந்த இடுக்குகளை அப்பாதையின்
      (சேது அணையின்) நெடுகில் இருந்த மணலில் விழுந்து புரண்டு
      தம் மேனி முழுவதும் ஒட்டிக்கொண்டு இருந்த மணலைக்
      கொண்டு சென்று அவ்விடுக்குகளில் தண்ணீர் புகாமல் மணலை
      உதறி அடைத்து கைங்கர்யம் (பணிவிடை) செய்தனவாம்
      அணில்கள். எம்பெருமானுக்கு அந்த அணில்களைப் போலக்கூட
      நான் ஒரு சேவை செய்திலேன். வறிதே நின்றிருக்கும் மரங்கள்
      போல் வலிய நெஞ்சு படைத்தவனாகிவிட்டேன். வஞ்சகனாகி
      விட்டேன். அரங்கத்து எம்பெருமானுக்கு ஆட்படாமல் எளியேன்
      அயர்கின்றேனே என்று, இந்த சேதுக்கரைப் பெயரைச்
      சொல்லாமல் மறைமுகமாக மங்களாசாசனம் செய்கிறார்.

      குரங்குகள் மலையை நூக்கக்
          குளித்துத் தாம் புரண்டிட்டோடி
      தரங்க நீரடைக்கலுற்ற
          சலமிலா அணிலம் போலேன்
      மரங்கள் போல் வலிய நெஞ்ச
          வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
      அரங்கனார்க் காட்செய் யாதே
          அளியத்தே னயர்க்கின் றேனே - 898

      இவ்விதம்     சேது     அணையும்     ஆழ்வார்களின்
      மங்களாசாசனங்களைப் பெற்றதால் திருப்புல்லாணி திவ்ய
      தேசத்தைத் தரிசித்தபின் இந்த சேதுக்கரைக்கு வந்து சேது
      அணை இருக்கும் திக்கை நோக்கித் தொழுது கடல் நீராடிச்
      செல்வர். தற்போது இவ்வணை கடலுக்குள் அமிழ்ந்துவிட்டது.
      இங்குள்ள மீனவர்கள் தமது சிறு படகுகளில் கடலுக்குள்
      மூழ்கியுள்ள இவ்வணையருகே பக்தர்களை அழைத்துச் சென்று
      காட்டி வருவர். எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
      முன்னால் நடந்த இந்த நிகழ்வினை சமீபகால விஞ்ஞானம் உறுதி
      செய்துள்ளது. ஆம். விண்வெளியில் உலகைச் சுற்றிக்
      கொண்டிருக்கும் விண்வெளிக்கலம் ஒன்று இந்த சேது
      அணையை முழுவதுமாகப் படம் பிடித்துக் காட்டி நம்
      புராணங்கூறுவது     யாதும்     பொய்யே     அல்லவென்றும்,
      முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்றும் நிரூபணம்
      செய்துள்ளது.

      விபீடணன் சரணாகதிக்கு வந்துள்ளதை இராமபிரானுக்கு
      தெரிவித்து     அவனுக்கு அடைக்கலம்     கொடுத்தருள
      வேண்டுமென்ற பாவனையில் சிரந்தாழ்த்தி, வாய் புதைத்து
      நிற்கும் அனுமனின் தோற்றம் மனமுருக வைக்கிறது. இது
      போன்ற ஆஞ்சநேயரை மற்ற திவ்யதேசத்தில் காண்பதரிது.

    16. மூலவரின் திருநாமத்தை,

      பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்
      தெய்வச் சிலையாற் கென் சிந்தை
      நோய் செப்புமினே - 1780

      என்று திருமங்கையாழ்வார் எம்பெருமானின் பெயரை இதில்
      குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:38:32(இந்திய நேரம்)