தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • தெய்வநாயகப் பெருமாள் கோவில் - திருவகீந்திரபுரம்

    சிறப்புக்கள்
    1. இப்பெருமானுக்கு

      1. தாஸ ஸத்யன்
      2. அச்சுதன்
      3. ஸ்த்ரஜ்யோதிஷ்
      4. அனகஞ்யோதிஷ்
      5. த்ரிமூர்த்தி

      என்று ஐந்து பெயர்களைப் புராணம் சூட்டி மகிழ்கிறது. இவற்றில்
      தாஸஸத்யன் என்பதை அடியார்க்கு    மெய்யன் என்றும்
      ஸ்தரஜ்யோதிஷ் என்பதை மேவு சோதியன் என்றும் த்ரிமூர்த்தி
      என்பதை     மூவராகிய ஒருவன் என்றும் திருமங்கை
      எடுத்தாண்டுள்ளார்.

    2. ஆதிசேடன் பூமியைப் பிளந்து உடனே நீர் கொண்டு வந்தான்.
      ஆகாயத்தில் பறந்து சென்ற கருடன் சற்று தாமதித்து
      வைகுண்டத்திலிருந்து விரஜா தீர்த்தத்தைக் கொண்டு வந்தான்.
      இவ்விதம் பரமனின் இரண்டு வாகனங்களால் தீர்த்தம் கொண்டு
      வரப்பட்ட சிறப்பு வேறெந்த திவ்ய தேசத்திற்குமில்லை.

      கருடனால் கொண்டுவரப்பட்ட தீர்த்தமே இங்கு நதியாக மாறி
      கருடாழ்வார் தீர்த்தமாகி காலப்போக்கில் கெடில நதியாகப் பெயர்
      மாறி தற்போதும் கெடிலமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

      சற்று வேறுபட்ட கருத்திலும் இந்நிகழ்ச்சி சில நூல்களில்
      வர்ணிக்கப்பட்டுள்ளது. எம்பெருமான் தாகத்திற்கு தண்ணீர்
      கேட்டதும் கருடன் விரஜா தீர்த்தம் கொணர ஆகாயத்தில்
      பறக்கையில் ஒரு ரிஷியின் கமண்டலத்தில் விரஜா தீர்த்தம்
      இருப்பதையறிந்து தன் அலகினால் கமண்டலத்தைச் சாய்த்து
      நதியாகப் பெருக்கி இத்தலத்தை நோக்கி ஓடச் செய்தார் என்றும்,
      இதைக் கண்டு சினந்த ரிஷி கருடனை எதிர்க்க மனமில்லாமல்
      இத்தண்ணீர் கலக்கமடையக் கடவது என்று சபித்தார். உடனே
      நீர்களங்கமுற்றது. உடனே கருடன் தான் எம்பெருமானின்
      தாகத்தை தணிக்கவே இந்தக் கைங்கர்யத்தை மேற்கொண்டேன்
      என்று கூறியதும் அவ்வாறாயின் கலங்கியது மறையக் கடவதென்ன
      நீரும் முன்போல தெளிந்தது. இன்றளவும் இந்நதியின் நீர்
      பார்வைக்கு கலங்கியிருப்பதைப் போன்று தெரியினும் கையில்
      எடுத்துப் பார்த்ததும் தெளிவாகத் தெரிவதைப் பார்க்கலாம்.

      தான் வருவதற்குள் ஆதிசேடனால் எம்பெருமான் தாகவிடாய்
      தீர்த்ததைக் கண்ட கருடன் எம்பெருமானை நோக்கி நான்
      கொணர்ந்த தீர்த்தத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென
      விண்ணப்பிக்க கருடா நீ கொணர்ந்த தீர்த்தத்தையும் நாம் ஏற்றுக்
      கொள்கிறோம். என் ரதோற்சவ தினத்தில் அந்த நதிக்கரையில்
      பூசைகளை ஏற்று நின் தீர்த்தத்தையும் ஏற்றுக்கொள்கிறோம் என்று
      சொல்ல அவ்விதமே இன்றளவும் ரதோற்சவம் இந்த கெடில
      நதிக்கரையிலேயே நடைபெறுகிறது.

    3. தன்னிடமிருந்தே பிரம்மனும், சிவனும் தோன்றினர் என்பதை
      இப்பெருமான் உணர்த்துகிறார். பிரம்மனுக்கு அடையாளமான
      தாமரைப் பூவினை கையிலும் விஷ்ணுவுக்கு அடையாளமான
      சங்கு     சக்கரங்களையும் சிவனுக்கு     அடையாளமான
      நெற்றிக்கண்ணும், சடையும் கொண்டு இப்பெருமான் திகழ்கிறார்
      என்பர். அதனால் தான் மூவராகிய ஒருவனை என்று
      மங்களாசாசனத்தை மொழிந்தார். மூவரும் இவனே என்பதை
      நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி பாடலாலும் அறியலாம்.

      முதலாம் திருவுருவம் மூன்றென்பர்,
          ஒன்றே நிகரிலகு காருருவா நின்னகத்த தன்றே
      முதலாகும், மூன்றுக்கு மென்பர்
          முதல்வா புகரிலகு தாமரையின் பூ - 2656

    4. இங்குள்ள சோழ மன்னன் ஒருவன் விஷ்ணு கோவில்களை
      இடித்துவிடும் நோக்குடன் இங்கு வந்ததாகவும் ஆடு மேய்க்கும்
      சிறுவர்கள் இது சிவன் கோயில் என்று கூற மன்னன் உற்று
      நோக்க சிவனைப் போல் அம்மன்னனுக்கு இப்பெருமான்
      காட்சியளித்தார் எனவும் கூறுவர்.

    5. இங்குள்ள விமானத்தில் வைகுண்டத்தில் அமர்ந்திருப்பதைப்
      போலவே சுத்த ஸ்த்வ விமானத்தின் கீழ், கிழக்குத்திக்கில்
      பெருமாளும், தெற்கில் தட்சிண மூர்த்தியாகிய சிவனும், மேற்கு
      திக்கில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மாவும் அமைந்துள்ள
      திறம் மேற்கூறியவைகளோடு வியந்து ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

    6. இவ்வூர் (இத்தலம் பற்றிய) புராணத்தை பிரம்மா என்றும்
      பாராயணம் செய்து வழிபட்டு வருவதாக பூ மறையோன்
      பாராயணத்தில் பணியும் அயிந்தை நகர் நாராயணனார் என்று
      மும்மணிக் கோவையில் சுவாமி தேசிகன் அருளியுள்ளார்.

    7. 11 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் இப்பெருமாளை
      நின்றருளிய மகாவிஷ்ணு என்றும் ஏழிசை நாதப் பெருமான்
      என்றும் குறிக்கின்றன.

    8. வைகானஸ முறைப்படி பூஜைகள் நடத்தப்படும் இத்தலத்து
      எம்பெருமான் திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு தமையன் என்பதோர்
      ஐதீஹமும் உண்டு.

    9. வெகு காலத்திற்கு முன் கோவில் பிரகாரத்திலிருந்த ஒரு பழைய
      புன்னை மரத்தின் வேரிலிருந்து சக்ரவர்த்தி திருமகனுடன் (ஸ்ரீராம
      பிரானுடன்) நம்மாழ்வாரும் தோன்றினாரென்றும் அதனாலே இங்கு
      இரண்டு நம்மாழ்வார்கள் சேவை சாதிக்கின்றனர் என்பதும்
      வரலாறு.

    10. திருமங்கையாழ்வாரால்     மட்டும்     பத்துப் பாசுரங்களில்
      மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இப்பெருமான் மீது
      வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவையருளிச் செய்தார்.
      மணவாள மாமுனிகள் பன்முறை எழுந்தருளி மங்களாசாசனம்
      செய்த தலம். வடமொழியில் தேவநாயக பஞ்சாசத்து என்னும்
      தோத்திரப் பாடலும், பிராக்ருத மொழியில் அச்யுத சதகம் என்ற
      தோத்திரப் பாக்களடங்கிய நூலும் இத்தலத்தைப் பற்றிப்
      பரக்கப் பேசுகின்றன.

    11. வ்ருத்தா சுரன் என்னும் அரக்கன் தனது கடின தபோ பலத்தால்
      பெற்ற     சக்தியைக்     கொண்டு இந்திரனை வென்று
      இந்திரலோகத்தை தன் கையகப்படுத்திக் கொண்டான். இந்திரன்
      இவ்விடத்திற்கு வந்து இங்குள்ள தாமரைத் தண்டில் ஒளிந்து
      கொண்டானென்றும். தேவர்கள் இந்திரனை எங்கு தேடியும்
      காணமுடியாது போகவே திருமாலைக் குறித்து தவஞ்செய்து
      தங்களது தலைவனைத் தந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தனர்.
      நீங்கள் அயிந்திரபுரத்தில் ஒரு வைஷ்ணவ யாகம் செய்தால்
      தாமரைத் தண்டில் ஒளிந்துள்ள இந்திரன் வருவான் என்று
      திருமால் அருள அவ்விதமே இங்கு யாகம் நடத்த இந்திரன்
      தோன்றினான்.     திருமாலும் பிரத்யட்சமாகி இந்திரனுக்கு
      வஜ்ராயுதத்தைக் கொடுக்க அதனால் வ்ருத்தாசுரனைக் கொன்று
      மீண்டும் இந்திரன் தனது நாட்டைப் பெற்றானென்பர்.

    12. இங்குள்ள ராமபிரான் தமது இடது கரத்தில் வில்லேந்தி காட்சி
      தருகிறார்.

    13. திருமாலின் அமிசா அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவ
      அவதாரத்திற்கு இச்சன்னதியின் அருகாமையிலேயே ஒரு
      திருக்கோவில் அமைந்துள்ளது. தெய்வநாயகன் சன்னதிக்கு
      எதிரே உயரமான மேடிட்ட பகுதியில் அமைந்து ஒளஷதகிரி
      என்றழைக்கப்படும் இத்தலம் மிகவும் தொன்மையும் பெரும்
      சக்தியும் கொண்டதாகும்.

      ஞானத்தையும் கல்வியையும் தரும் ஹயக்ரீவப் பெருமாள் இங்கு
      எழுந்தருளியுள்ளார். மது, கைடபன் என்னும் அரக்கர்கள்
      பிரம்மனிடமிருந்த படைப்புத் தொழில் நடத்தும் ரகசிய வேதத்தை
      எடுத்து மறைத்துக் கொள்ள பிரம்மன் மேற்படி வேதத்தை தமக்கு
      மீட்டுத்தர திருமாலைக் குறித்து வேண்டினார். திருமால் ஹயக்ரீவ
      வடிவம் கொண்டு அரக்கர்களைத் துவம்சித்து படைப்புத்
      தொழிலுக்கான ரஹ்ஸய வேதத்தை மீண்டும் பிரம்மனிடமே
      ஒப்படைத்தார். இதனால்தான் ஹயக்ரீவ பெருமாளை ‘நால்வேதப்
      பொருளைப் பரிமுகமாய் அருளிய பரமன்’ என்று போற்றுவர்.
      இப்பெருமாளை வழிபடுவர்கட்குத் தங்கு தடையற்ற கல்வியும்,
      தெளிவான ஞானமும் உண்டாகும். ஹயக்ரீவ பெருமாள்
      ஆதித்திருமேனிகள் இந்தியாவில் இரண்டு இடங்களில் உண்டு.
      ஒன்று இங்கு மற்றொன்று மைசூரில் உள்ள பரகால மடம்.

    14. குதிரை முகம் கொண்ட இந்த ஹயக்ரீவம் சகல வித்தைகட்கும்
      ஆதாரமாக விளங்கக்கூடிய அவதார நிலையாகும். வித்தைகளின்
      இருப்பிடம் அதாவது இவர் கல்விக் கடவுள்,

      ஞானானந்த மயம் தேவம்
          நிர்மல ஸ்படிகாக் ருதம்
      ஆதாரம் ஸர்வ வித்யானாம்
          ஹயக்ரீவம் உபாஸ மஹே

      ஞானமயமாக கலக்கமற்ற ஸ்படிகம் போல் திகழும் இந்த
      தேவனே சகல வித்தைகட்கும் ஆதாரமான ஹயக்ரீவமாகும்.
      இந்த அவதாரத்தில் இப்பெருமானின் தோற்றம் பின் கண்டவாறு
      பகரப்படுகிறது.

      சந்திர மண்டலம் போல் வெளுத்த திருமேனி. பஞ்சாயுதங்கள்
      ஏந்திய நான்கு புஜம். குதிரை முகம். நீண்ட காதுகள். வேதமுத
      நுரை தள்ளும் வாய். கருணை பொழியும் விழிகள். பீதாம்பர
      ஆடை தரித்து பெரிய பிராட்டியை மார்பில் கொண்ட
      திருக்கோலம்.

    15. இந்த ஹயக்ரீவ மலைக்கு 74 படிகள் உண்டென்றும் அவைகள்
      இராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபர்களைக் குறிக்கும்
      என்றும் சொல்வர்.

    16. கலியுகத்தில் இவ்விடத்தில் திருமால் அணிந்துள்ள மணியின்
      அம்சமாக ஒரு மகான் அவதரிக்கப் போகிறாரென்று
      புராணங்களில் கூறியதற்கொப்ப ஸ்ரீமாந் நிகாமந்த தேசிகர் இங்கே
      40 ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்து வடகலை சம்பிரதாயத்திற்கு
      அருந்தொண்டாற்றி வளர்த்தார். வடகலை சம்பிரதாயத்திற்கு
      இத்தலம் ஒரு பாசறை போல் விளங்கிற்று என்றால் அது
      மிகையல்ல.

      நாற்பதாண்டுகள் இந்த திவ்ய தேசத்தில் ஜீவித்திருந்த தேசிகர்
      இவ்விடத்தில் ஒரு திருமாளிகை கட்டித் தமது திருக்கரத்தால் ஒரு
      கிணறும் வெட்டினார். இவர் வாழ்ந்திருந்த திருமாளிகை இன்றும்
      உள்ளது.

      இங்கு ஸ்ரீதேசிகர் தம்மைப் போல ஒரு திருமேனி செய்தார். உமது
      திருமேனிக்கும் உம்மைப்போல் உயிரோட்டம் தரமுடியுமா என்று
      ஒரு சிற்ப சாஸ்திரி கேட்க, ஸ்ரீராமானுஜர் பெரும்புதூரில்
      வடித்ததைப் போன்று இங்கு தேசிகரும் தம்மைப் போல் ஒரு
      திருமேனி செய்தார். திருமேனி செய்து முடிக்கப்பட்டவுடன் சிற்ப
      சாஸ்திரி அத்திருமேனியைத் தொட்டபோது அதில் விரல் கீறல்
      பட்டு ரத்தம் கசிந்ததாகவும், ஸ்ரீதேசிகரின் மகிமை அறியாது
      அவரிடம் ஆணவத்துடன் நடந்து கொண்ட முறைக்கு அச்சிற்ப
      வல்லுனர் தேசிகரின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டான்
      என்றும் சொல்வர்.

      எண்ணற்ற அருஞ்செயல்கள் புரிந்து ஹயக்ரீவர் மீதும், தெய்வ
      நாயகன் மீதும் அளவற்ற பக்திகொண்டு அரும்பெரும் நூல்கள்
      இயற்றினார் தேசிகர்.

      ஸ்ரீதேசிகர் ஹயக்ரீவ மந்திரத்தை ஜெபித்து ஹயக்ரீவரை இங்கு
      நேரில் தரிசித்துவிட்டு மலையிலிருந்து இறங்கி வரும்போது
      தெய்வநாயகனை வழிபடாது பெண்ணை யாற்றங்கரைபற்றிச் செல்ல
      அடியார்க்கு மெய்யனான தெய்வநாயகன் வழிமறித்து இவருக்கு
      காட்சி கொடுத்ததாகவும் ஐதீஹம்.

    17. எம்பெருமானின் திருவடிப் பேற்றினையே நினைந்து தொழுது
      திருப்பனந்தாழ்வான் வழிபட்ட இத்தலத்தை தூய்மையான
      சிந்தனையுடையோராய்த்     தொழுது     இப்பெருமானுக்குத்
      தொண்டரானவர்கள்தான் எமக்குத் தலைவராவர் என்கிறார்
      பிள்ளைப் பெருமாளைய்யங்கார்

      ‘அன்பணிந்த சிந்தையரா யாய்ந்த மலர் தூவி
          முன் பணிந்த நீரெமக்கு மூர்த்தியரே என்பர்
      எம்மயிந்தர புரத்தார்க் இன்றொண்ட ரானார்.
          தலைமயிந்தர புரத்தார் தான்.’

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 10:44:44(இந்திய நேரம்)