Primary tabs
-
கூர்ம அவதாரம்
தொன்மம்:
கூர்ம அவதாரம்விஷ்ணுவின் அவதாரங்களில் இரண்டாவது அவதாரமாகக் கூர்ம அவதாரம் அமைகிறது. இந்த அவதாரத்தின் தோற்றப் பின்னணி என்பது பாகவத புராணத்தில் விரிவாக எடுத்துக் கூறப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் தாங்கள் இழந்ததைப் பெற்றிட வேண்டும் என்று திருப்பாற்கடலில் உள்ள அமிழ்தத்தைப் பருகினால் மட்டுமே சாத்தியப்படும் என்று நம்பினர்.
இதன் பொருட்டு தேவர்களும் அசுரர்களும் அமிழ்தம் வேண்டித் திருப்பாற்கடலைக் கடைந்தனர். இப்பணிக்காக மந்தாரமலையினை அச்சாகவும், வாசுகி பாம்பினைக் கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தனர். இச்செயலில் மந்தாரமலை கீழ்நோக்கி இறங்கத் தொடங்கியது. அந்நிலையில் விஷ்ணு கூர்ம (ஆமை) வடிவெடுத்து அம்மலையினை நிலைபெறச் செய்தார். விஷ்ணுவின் இக்கோலம் கூர்ம அவதாரம் எனப்படுகிறது.
கலை:
பொதுவாக மத்சய மற்றும் கூர்ம அவதாரங்கள் தொடக்ககாலத் தமிழகக் கலையில் அதிக அளவில் காண முடியாத சிற்பங்களாகும். இருப்பினும் கூர்ம அவதார படிமம் குடுமியான் மலை மற்றும் தாமக்கொம்பு ஆகிய இடங்களில் காணப்படுகிறது. கலை அமைதி என்ற நிலையில் கூர்ம அவதாரப்படிமம் பாதிமனிதன், பாத ஆமை என்ற வகையில் அமைக்கப் பெற்றிருக்கும். இச்சிற்பத்தில் காணப்படும் நான்கு கைகளில் முன் கைகள் இரண்டின் முறையே அபயம் மற்றும் வரதம் பின் கைகளில் சங்கு, சக்கரம் இடம் பெற்றிருக்கும். சில இடங்களில் கூர்ம அவதாரப் படிமங்கள் மனித உடலின் அமைப்பு இன்றி ஆமை வடிவிலே காட்டப்படுவதுண்டு.