Primary tabs
-
அழகர்மலை தமிழிக் கல்வெட்டு
அமைவிடம்: மதுரை மாவட்டம், பழமுதிர்ச் சோலை என்றும் அழைக்கப்பெறும் அழகர் மலையில் இயற்கையாக அமைந்த புகழ் மிக்க மலையின் ஒருபகுதியில் இக்கல்வெட்டு உள்ளது.
எழுத்து: சங்க காலத்தமிழ் (தமிழி) எழுத்து
மொழி: தமிழ்
காலம்: பொ.ஆ.மு. 1ஆம் நூற்றாண்டு (தோராயமாக)
குறிப்பு: மலையில் ஏறிப் பார்பதற்கு வசதியாகப் படிகள் அமைத்திருக்கிறார்கள். இயற்கை குகைத்தளத்தில் படுக்கைகள் காணப்பெறுகின்றன.இங்கு நல்ல சுனை ஒன்றும் உள்ளது. முகத்தின் புறத்தே நீண்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. இம்மலையில் மொத்தம் 13 கல்வெட்டுக்கள் உள்ளன. அக்கல்வெட்டுகளையும் அவற்றின் சிறப்பினையும் காண்போம்.அழகர் மலைக் கல்வெட்டுகள் :
அழகர் மலையில் மொத்தம் 13 கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் 5 மதுரையைச் சுற்றியுள்ள வணிகர்கள் செய்த கொடை பற்றிக்கூறுகின்றன. இவற்றுடன் சேர்த்து பிற அனைத்துமே சமணத்துறவிக்குச் செய்து கொடுத்த படுக்கை குறித்தே பேசுகின்றன. இதில் படுக்கையைக் குறிக்கும் பாளிய் என்ற சொல் இடம்பெறாத கல்வெட்டுக்களும் உள்ளன. இச்சொல் இல்லாவிடினும் சமணர் படுக்கைகளிலேயே இக்கல்வெட்டுக்கள் பொறிக்கப்பெற்றிருப்பதால் இவை சமண முனிவர்க்கு எடுக்கப்பெற்ற படுக்கைகளுக்காகவே என்று கொள்வது தவறாகாது.
வணிகர்கள் பற்றி வரும் கல்வெட்டுக்கள் :
கல்வெட்டுப் பாடம்
1. மதிரய் பொன் கொல்வன் அதன் அதன்
பொருண்மை: மதுரையைச் சேர்ந்த பொற்கொல்வன் ஆதன் ஆதன் என்பவர் படுக்கை அமைத்து கொடுத்துள்ளார்.
2. மத்திரைகே உபு வணிகன் வியகன்
பொருண்மை: மதுரையைச் சேர்ந்த உப்பு வணிகன் வியகன் என்பவர் படுக்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.
3. பாணித வணிகன் நெடுமலன்
பொருண்மை:சர்க்கரை வணிகன் நெடுமலன் என்பவர் படுக்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.
4. கொழு வணிகன் எளசந்தன்
பொருண்மை: கொழு வணிகன் எளசந்தன் என்பவர் படுக்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.
5. வெண்பளி இ அறுவை வணிகன் எள அ அடன்
பொருண்மை: வெண்பளி என்ற ஊரைச் சேர்ந்த துணி வணிகன் எளஅ அட்டன் என்பவர் படுக்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.
இதுதவிர உள்ள பிற கல்வெட்டுகளில் படுக்கை அமைத்துக் கொடுத்தவர்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன.
சிறப்பு :
மதுரையைச் சுற்றியுள்ள வணிகர்கள் சமண முனிவருக்குக் கொடுத்துள்ள கொடைபற்றி இக்கல்வெட்டுக்கள் பேசுவது சிறப்பாகும். தமிழகத்தில் சமண சமயம் வளர்ச்சியடைவதற்குத் தமிழ் வணிகர்களின் ஆதரவும் ஒரு காரணமாகும்.