தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கொடுமணல் அகழாய்வு

  • கொடுமணல் அகழாய்வு

    முனைவர் பா.ஜெயக்குமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    அறிமுகம்:

     

    அறிவியல் முறைப்படி பூமியை அகழ்ந்து மக்களின் பண்பாட்டு எச்சங்களைக் கண்டுபிடிப்பது அகழாய்வாகும். தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை இதுவரை மேற்கொண்ட அகழாய்வுகளில் மிக முக்கியமான உலகளவில் சிறப்புப் பெற்ற அகழாய்வாக கொடுமணல் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வு கருதப்படுகிறது. இவ்விடத்தின் வரலாற்றுச் சிறப்புகளை முதன் முதலில் ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என்ற அறிக்கையின் வாயிலாக வெளிக்கொணர்ந்தவர் பேராசிரியர் செ.இராசு அவர்களாவார். பின்னர், 1985 முதல் 1991 வரை பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தலைமையில் நான்கு கட்டங்களாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அமைவிடம்:

    பண்டைய கொங்கு நாட்டில் இன்றைய ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் அமைந்துள்ளது. இவ்வூர் சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

    ஊர்ச்சிறப்பு:

    இவ்வூர் இரும்புக் காலம் (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic period), சங்ககாலம் (Sangam Age) என வழங்கப்படும் காலக்கட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.

    “கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
    பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்”

    என்னும் பதிற்றுப்பத்து (74:5-6) சங்க இலக்கியக் குறிப்புகளிலிருந்து இப்பகுதி சங்ககாலத்தில் பல்வேறு வெளிநாட்டினர் வந்து சென்ற சிறப்புப் பெற்ற பன்னாட்டு வணிகத் தலமாக (பந்தர்) இருந்தது என்பதை அறிய முடிகிறது. யவனர் என இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கிரேக்கம், ரோம், எகிப்து நாடுகளைச் சேர்ந்த மக்கள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர். சங்ககாலத்தில் கொடுமணம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இன்று கொடுமணல் என வழங்கி வருகிறது.

    அகழாய்வுச் சிறப்பு:

    மக்கள் வாழ்ந்த பகுதி (Habitation) மற்றும் ஈமக்குழி (Burial Complex) என இரண்டு வகையான இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மக்கள் இரும்புக் காலத்தைச் சேர்ந்தவர்களாயினும் பெரிய கற்பலகைகள் மற்றும் பெரிய கற்களைப் பெருமளவில் பயன்படுத்தியமையால் இவர்களைத் தொல்லியலாளர்கள் பெருங்கற்படை (megalithic) பண்பாட்டுக்குரிய மக்கள் எனக் கருதுகின்றனர். இந்த அகழாய்வில் இரும்புக் கருவிகளான கத்தி, வாள், ஈட்டி, கேடயம், மணிகள் (beads), அங்கவடி (horse - stirrups) என ஏராளமாகக் கிடைத்துள்ளன. குதிரையின் அங்கவடி கிடைத்துள்ளமை குதிரை அக்கால வணிகத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த்தை வெளிப்படுத்துகிறது. மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்து கடல்வழியாக குதிரைகள் ஏராளமாக தமிழகம் வந்திறங்கியதைப் பட்டினப்பாலை (185) குறிப்பிடுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். கார்னீலியன் (carnelian), அகேட் (agate) ஜாஸ்பர் (jasper) பெரில் (beryl), பளிங்கு (quartz), லாபியஸ் லசுலி (Lapius Lajuli), போன்ற அரிய கற்களால் செய்யப்பட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த மணிகள் (beads) ஆயிரக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கொடுமணல் அக்காலத்தில் ஒரு பெரிய தொழிற்கூட நகரமாக (industrial city) இருந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது. அக்காலத்தில் ரோமானியர் பிரியமுடன் பயன்படுத்திய அரிய கல் வகைகளாக இ.எச்.வார்மிங்டன் அவர்தம் நூலில் (warmington, E.H., The commerce between the Roman Empire and India, 1948) குறிப்பிட்டுள்ளவையாவும் கொடுமணல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கருப்பு-சிவப்பு, கருப்பு நிறம் கொண்ட சங்ககால மண்கலங்களுடன் ரோமானிய மண்கலங்களான அரிட்டெய்ன் மற்றும் ரூலெட் பானை ஓடுகளும் கலந்து காணப்படுவது தமிழ்ப் பண்பாட்டுடன் யவனப் பண்பாடு கலந்து காணப்படுவதைக் காட்டுகிறது. கருப்பு -சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பானைகளில் பல்வேறு வகையான குறியீடுகள் (graffiti) காணப்படுகின்றன. இக்குறியீடுகள் எதற்காகப் பானைகளில் கீறப்பட்டன என்பதும், இக்குறியீடுகள் குழுக்குறியீடுகளா அல்லது எழுத்துகளின் தோற்ற நிலைகளின் முதல் கட்டமா? போன்றவை குறித்து ஆய்வாளர்களிடையே இன்று வரை விவாதங்கள் தொடர்கின்றன. மேற்சுட்டிய கருப்பு-சிவப்பு, கருப்பு நிற மற்றும் வண்ணப்பூச்சு (russet quated) கொண்ட மண்கலங்கலில் எழுத்துப் ( தமிழ் பிராமி/தமிழி/ தமிழ்) பொறிப்புகள் காணப்படுகின்றன. இது கொடுமணல் அகழாய்வுச் சிறப்புகளில் ஒன்றாகும். அகழாய்வில் 400க்கும் மேற்பட்ட மண்கலச் சில்லுகளில் எழுத்துப் பொறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மண்கலச் சில்லுகளில் பழம் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கொடுமணல் அகழாய்வில் மட்டுமே என்பது பெருமைக்குரியதாகும். மண்கலங்களில் காணப்படும் பெயர்கள் பல (காட்டாக: ஆதன், சாத்தன், கோன், அந்தை, மகன்) சங்க இலக்கியப் பெயர்களுடன் ஒத்ததாகக் காணப்படுகின்றன. அக்காலத் தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக

    விளங்குகின்றன எனில் மிகையன்று. அக்காலத் தமிழ்ப் பண்பாட்டோடு பிராகிருத மொழி பேசிய மக்களின் கலப்பு இருந்ததற்கான பல சான்றுகளும் (காட்டாக: நிகம, விஸாகீ) பானை எழுத்துப் பொறிப்புகளின் வாயிலாக வெளிப்படுவதைக் காணமுடிகிறது. இது இப்பகுதியினுடன் பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் வணிக நிமித்தமாகக் கலந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
    24 காரட் மற்றும் 22 காரட் மதிப்புடனான பொன் ஆபரணங்கள், வெள்ளி மோதிரங்கள், ஈயத்தாலான வளையல்கள், வளையங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் (காட்டாக: அரிய கற்கள் பதிக்கப்பட்ட வெண்கலத்தாலான புலி), விளையாட்டுப் பொருள்கள், மக்கள் வாழ்ந்த பகுதி மற்றும் ஈமக்குழிகளில் மனித எலும்புக்கூடுகள், விலங்குகளின் எலும்புகள், உலைகள் (furnace), மரக்குச்சிகள் பூமியில் நடப்பட்டதற்கான அடையாளங்கள் என அக்காலப் பண்பாட்டு நாகரிகம் சார்ந்த எச்சங்கள் கொடுமணல் அகழாய்வில் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் யாவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கட்டுரையாளர் கொடுமணல் அகழாய்வுகளில் கலந்துகொண்டவர்

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:39:47(இந்திய நேரம்)