தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • திருப்பரங்குன்றம்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    திருப்பரங்குன்றம் தொல்லியல், வரலாறு மற்றும் சமயச் சிறப்பு வாய்ந்த ஊராகும். திருப்பரங்குன்றத்தில் சமண முனிவர்களுக்கான படுக்கைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உள்ளன. முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது திருப்பரங்குன்றம் என்ற தலம்.

    அமைவிடம்

    இது மதுரைக்கு 6 கி.மீ தென்மேற்கே அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயரில் உள்ளது போல ஒரு பெரிய மலை இங்குள்ளது.

    சிறப்பு

    கதைகளின்படி, திருப்பரங்குன்றம் என்னும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தலம் முருகன் தெய்வயானையை மணந்த இடமாகக் கருதப்படுகிறது. பாண்டியர்களால் 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குடைவரைக் கோயிலில் ஐந்து சன்னிதிகள் உள்ளன. இவை முறையே முருகன், துர்க்கை, விநாயகர், விஷ்ணு மற்றும் சிவன் போன்ற கடவுள்களுக்காக உருவாக்கப்பட்டவையாகும். பிற்காலத்தில், 17-18 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்கர் பாணித் தூண்களைக் கொண்ட மண்டபமும் படிகளும் கட்டப்பட்டன.

    கல்வெட்டுகள்

    இங்கு சமண முனிவர்கள் தங்கியிருந்த குகைகளில் கல்லில் மெருகேற்றப்பட்டு வழவழப்பாக அமைக்கப்பட்ட படுக்கைகள் உள்ளன. இவற்றில் சங்ககாலத் தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகின்றன. “அந்துவன் கொடுபிதவன்”, “மாரயது கயம்” எனப் படுக்கை, நீர்ச்சுனை செய்தவர்களின் பெயர்கள் இங்கு காணப்படுகின்றன. இவை பொ.ஆ.மு (கி.மு) முதலாம் நூற்றாண்டு முதல் (கி.பி) பொது ஆண்டு முதலாம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்தவை. இங்குள்ள கல்வெட்டுகள் “எருக்காட்டூர்” என்ற ஊரைப் பற்றியும், அந்துவன், பொலாலயன் என்ற ஆட்களைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:05:56(இந்திய நேரம்)