தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேர மன்னன் மாக்கோதைக் காசு

  • தமிழகத்தில் சங்க காலக் காசுகள்

    சங்க காலம் (பொ.ஆ.மு. 3ஆம் நூ. - பொ.ஆ. 3அம் நூ.)

    சேர, சோழ, பாண்டியர்கள்

     

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    வரலாற்றுக்காலம் முதற்கொண்டே தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் சிற்றரசர்களால் ஆளப்பெற்றதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. தமிழ் இலக்கியங்கள் மட்டுமின்றி வட இந்தியக் கல்வெட்டுக்களும் இதை

     

    மெய்ப்பிக்கின்றன. அசோகரது கல்வெட்டிலும் கிர்னார் பாறைக்கல்வெட்டிலும், காரவேலனது ஹாத்திக்கும்பாக் கல்வெட்டிலும் இவர்கள் குறிப்பிடப் பெறுகின்றனர். இம்மூவேந்தர்களில் சேரர்கள் வில்லையும், சோழர்கள் புலியையும், பாண்டியர்கள் மீனையும் தமது குலச்சின்னங்களாகக் கொண்டுள்ளதை இலக்கியங்கள் விளக்குகின்றன. இவற்றை மெய்ப்பிக்கும் வகையில் இவர்களது குலச்சின்னங்கள் பொறித்த காசுகள் தமிழகத்தில் கிடைக்கின்றன. சோழர்களைத் தவிர மற்ற இருவேந்தர்களும் முத்திரைக் காசுகளை வெளியிட்டுள்ளனர்.

    பாண்டியர் காசுகள்

    சின்னங்களும் எழுத்துப்பொறிப்புக்காசுகளும்

    மூவேந்தர்களில் பாண்டியர்களே தொன்மை மரபினர். இவர்கள் தமது தலை உருவத்துடன் பெருவழுதி என்று பெயர் பொறித்த காசுகளையும் வெளியிட்டுள்ளனர். இவர்களது காசுகளில் ஒரு பக்கம் மீன் சின்னம் கோட்டுருவில் இடம்பெற்றிருப்பினும் மறு பக்கம் , யானை, காளை, வேலியிட்ட மரம், மீன், ஆமை உள்ள தொட்டி, டாரின் போன்ற சின்னங்களும் இடம்பெறுகின்றன. இதில் இடம்பெற்றிருக்கும் சின்னங்களின் அடிப்படையில் ப.சண்முகம் இவற்றிற்குக் காலப் பகுப்பு செய்துள்ளார்.

    காலம்

    முத்திரைக் காசுகளில் இடம்பெற்றிருப்பதைப் போன்று பல்வேறுச் சின்னங்கள் கோட்டுருவில் இடம்பெற்றிருப்பதை முற்காலச் காசுகள்(பொ.ஆ.மு.200- 100) எனவும் உருவங்கள் கோட்டுருவாக இல்லாமல் யானை போன்ற உருவங்கள் தனித்து பிரதானமாக இடம்பெற்றிருப்பது இடைக்காலக் காசுகள்(பொ.ஆ. 1 - 100) என்றும் யானை உருவம் முதன்மை படுத்தப்பெற்று அதன் முன் புறம் திரிசூலம் இடம்பெறும் காசுகள் பிற்காலத்தைச் (பொ.ஆ. 100 - 200) சேர்ந்ததெனவும் வகைப்படுத்துகின்றார். இதைப் போன்றே ஆர் . கிருஷ்ணமூர்த்தியும் நாணயங்களை வகைப்படுத்தியுள்ளார்.

    கிடைக்குமிடம்

    பாண்டியரது காசுகள் மதுரை, வைகை ஆற்றுப்படுகையில் அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகை, கரூர், அழகன் குளம், கும்பகோணம் ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றன. வட இலங்கையிலும் பாண்டியர்களது காசுகள் கிடைக்கின்றன.

    எடையும் உலோகமும்:

    பெரும்பாலான சங்க காலப் பாண்டியர் காசுகள் சதுர வடிவமாகவும் சில காசுகள் வட்டவடிவமாகவும் உள்ளன.0.50 கிராம் எடையிலிருந்து 10.60 கிராம் வரை எடையுள்ள காசுகளும் கிடைத்துள்ளன. இவர்களது முத்திரைக்காசுகள் வெள்ளி உலோகத்தால் ஆனதாக 1.5 கிராம் எடையுடையதாக அரை கார்ஷாப்பணத்திற்குச் சமமானதாகவுள்ளன. பெரும்பாலான காசுகள் செம்பினாலானவை. பிற்காலத்தில் (பொ.ஆ.மு. 100-300) வெளியிடப்பெற்ற ஒரு சில காசுகள் ஈயத்தால் ஆனவையாகவுள்ளன.

    சேரர் காசுகள்

    சின்னங்களும் எழுத்துப்பொறிப்புக்களும்

    பாண்டியர் காசுகளைப்போன்று சேரர் நாட்டிலும் வட இந்திய முத்திரைக்காசுகளுடன் , சேரர்கள் தமது வில், அம்புச் சின்னங்களைப் பொறித்துள்ள முத்திரைக் காசுகளும் கிடைக்கின்றன. பெரும்பாலும் சேரர்களது காசுகளின் ஒரு பக்கம் அவர்களது குலச் சின்னமான நாணேற்றப்பட்ட வில்லுடன் அம்பு இடம்பெறும். மறு பக்கம் கோட்டுருவ யானை, அம்பு பூட்டிய வில், மும்முகடு, மீன்கள், நதி போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன. சங்ககால அரசர்களுள் சேர அரசர்களது எழுத்துப்பொறிப்புக்களே இதுவரை நமக்கு அதிகம் கிடைக்கின்றன. கொல்லிப்புறைய், கொல்லிரும்புறைய், குட்டுவன் கோதை, மாக்கோதை போன்ற சேர அரசர்களது எழுத்துப்பொறித்த காசுகள் கிடைத்துள்ளன.

    காலம்

    சின்னங்களைக் கொண்டு முத்திரைக்காசுகளைப் போல் பல உருவம் உள்ளனவற்றையும் கோட்டுருவில் யானையுடன் அம்பு பூட்டிய வில், அங்குசம், யானை, வேலியிட்ட மரம், ஸ்ரீ வத்சம், 3இதழ்கள், ஆறுகிளைச்சின்னம், ஆமை, டாரின் போன்றசின்னங்கள் இடம்பெற்றிருப்பதையும் முற்காலக் காசுகள் என்றும் (பொ.ஆ.மு.1ஆம் நூற்றாண்டு), முழு யானை உருவம் தனித்துப் பெரிதாக இடம்பெற்றிருப்பதுடன் திமிலுள்ள காளை, குதிரை, வேலியிட்ட மரம், ஸ்ரீ வத்ஸம் போன்ற சின்னங்கள் இடம்பெற்றிருப்பதையும் இடைக்காலக் காசுகள் என்றும் (பொ.ஆ.1ஆம் நூற்றாண்டு) யானை உருவம் மட்டுமே பிரதானமாக இடம்பெற்றிருப்பதைப் பிற்காலக் காசுகள் ( பொ.ஆ.2நூற்றாண்டு ) எனவும் வகைப்படுத்தப் பெற்றுள்ளன. எந்த வகைக் காசுகளாயினும் ஒரு பக்கம் சேரரது குலச்சின்னமான நாணேற்றப்பெற்ற வில்லுடன் அம்புச் சின்னமே இடம்பெறுகிறது.

    கிடைக்குமிடம்

    சேரர் காசுகள் பெரும்பாலும் கரூர், அமராவதி ஆற்றுப்படுகைகளில் அதிக அளவில் கிடைக்கின்றன. ஒரு சில தஞ்சாவூர், மதுரை, திருக்கோயிலூர் , மடிகேரி (கருநாடகம்), ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றன.

    எடையும் உலோகமும்:

    சேரர்களது காசுகள் அதிக அளவு எடையாக 3.66 கிராமிலிருந்து குறைந்த அளவாக 0.76 கிராம் வரை கிடைக்கின்றன. முத்திரைக் காசுகள் வெள்ளியிலானாதாகவும் பிற காசுகள் செம்பிலானதாகவும் சதுர வடிவுடனும் கிடைக்கின்றன. ஈயத்தாலான காசுகள் அரிதாகவே கிடைக்கின்றன.

    சோழர் காசுகள்

    சின்னங்கள்

    யானை

    புலி

    சோழர் காசுகளில் இதுவரை முத்திரைக்காசுகள் கிடைக்கவில்லை எனினும் ஒரு பக்கம் புலிச் சின்னம் மட்டும் முத்திரை முறையில் பொறிக்கப்பெற்றுள்ள ஒரே ஓரு காசு மட்டும் கிடைத்துள்ளது. ஆயினும் முத்திரைக் காசுகளைத்தழுவி யானை, வேலியிட்ட மரம், 6முகடுள்ள குன்று, நதி, காளை, மீன்கள் போன்ற எச்சின்னமும் முதன்மைப்படுத்தப்படாத வகை காசுகளை இவர்கள் வெளியிட்டுள்ளனர். அத்தகைய காசுகள் முற்காலத்தைச் சேர்ந்தவையாகும் (பொ.ஆ.மு. 2 -1ஆம் நூற்றாண்டு). எத்தகைய காசுகளாயினும் ஒரு பக்கம் சோழரது குலச்சின்னமான வாய்ப்பிளந்து வால் உயர்த்தி நிற்கும் புலி உருவம் இவர்களது காசுகளில் இடம்பெற்றிருக்கும். பிற அரச குலங்களைப்போலவே யானை முதன்மைப்படுத்தப்பட்டு வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ நோக்கி நிற்பது போல உள்ள காசுகளும் குதிரை பூட்டிய ரதம், திமிலுள்ள காளை போன்ற காசுகள் இடைக்காலத்தையும் (பொ.ஆ.1-2ஆம் நூற்றாண்டு), யானை, கொடி, மேற்புறம் குடை விளிம்பை ஒட்டி சிறு உருவம் உள்ள காசுகள் பிற்காலத்தையும் (பொ.ஆ.3 ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாகக் கருதப்பெறுகின்றன. சங்க காலச் சோழரது எழுத்துப்பொறிப்புக் காசுகள் இதுநாள் வரையில் கிடைக்கவில்லை என்பதும் இங்குச் சுட்டத்தக்கது.

    கிடைப்பிடம்

    சோழரது காசுகள் கரூர் - அமராவதி, மதுரை - வைகை ஆற்றுப்படுகை அரியலூர் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. காவிரிப்பூம்பட்டின அகழாய்வில் மணிக்கிராமம், வானகிரி போன்ற இடங்களில் முன்புறம் யானையும் பின் புறம் புலியும் பொறித்தக் காசுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் மட்டுமன்றி தாய்லாந்தில் குவான்-லுக்-பத் (kuan-luk-pat) என்ற இடத்தில் ஒரு பக்கம் ரதம் பூட்டிய குதிரையும் பின் புறம் புலியும் உள்ள காசு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    எடையும் உலோகமும்:

    பெரும்பாலான சோழர்களது காசுகள் செம்பினால் ஆனவை. ஈயக்காசுகள் அரிதாகவே கிடைக்கின்றன.

    மூவேந்தர்களும் ஒரு பக்கம் யானை, காளை, குதிரை போன்ற பல சின்னங்களைப் பயன்படுத்தினாலும் மற்றோரு பக்கம் தங்களது குலச்சின்னங்களான மீன் (பாண்டியர்), நாணேற்றப்பெற்ற வில் அம்பு (சேரர்), வால் உயர்த்தி வாய்ப் பிளந்து நிற்கும் புலி (சோழர்) தங்களது காசுகளில் பொறித்துள்ளனர். இச்சின்னங்கள் கொண்டு கிடைத்துள்ள காசு எந்த அரச குலத்தைச் சார்ந்ததென எளிதாக இனங்கான இயலும். சிதறல்களாகக் கிடைக்கும் காசுகளின் எடை அளவுகளை உத்தேசமாகக் கூறயியலுமே தவிர துல்லியமாகக் கூறவியலாது. அதேபோல் இக்காசுகளுக்கு (எளிதில் பிற இடங்களுக்கு எடுத்துச்செல்லக்கூடிய இயல்பினால்) கிடைப்பிடமும் குவியலாக ஆற்றுப்படுகைகளிலும் கிடைத்துள்ள காசுகளைத் தவிர சிதறலாக்க் கிடைக்கும் காசுகளுக்கு உறுதியாகக் கூறயியலாது. அந்தந்த ஆய்வாளர்களும் காசு சேகரிப்பாளர்களும் அந்தக் காசுகளை எவ்விடத்திலிருந்து பெற்றனரோ அந்த இடமே அக்காசுகளின் கிடைப்பிடமாகக் கருத இயலும். பெரும்பாலான தனியார் சேகரிப்பிலுள்ள காசுகள் வணிகர்களிடமிருந்து விலைக்கொடுத்தே வாங்கப்பெறுகின்றன. இவற்றின் உண்மையானக் கிடைப்பிடம் காண்பது எளிதல்ல.

    சங்க காலச் சிற்றரசர் காசுகள்

    மலையமான் காசு

    மூவேந்தர்கள் மட்டுமின்றி சங்க காலத்தில் வேந்தர்களின் கீழ் ஆட்சி செய்த வேளிர்களில் ஒரு சிலரும் காசுகளை வெளியிட்டுள்ளனர். திருக்கோயிலூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மலையமான் என்ற சிற்றரசனும் (சோழர்) தகடூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த அதியமான் (சேரர்) என்ற சிற்றரசனும் காசுகளை வெளியிட்டுள்ளதாகக் கருதப்பெறுகிறது. இவர்களின் பெயர் பொறிப்புகள் இல்லை. கிடைப்பிடம் கொண்டு இவர்களது காசுகளாக ஊகிக்கப்பெற்றுள்ளது. இது தவிர சங்க இலக்கியங்கள் எவற்றிலும் இடம்பெறாத அதின்னன் எதிரான் சேந்தன் என்ற பெயர் பொறித்த ஈயக்காசுகள் 149 கிடைத்துள்ளன. காசுகள் வெளியிட்டிருப்பதால் இவரையும் சிற்றசராகவே கருதவேண்டியுள்ளது.

     

     

     

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:52:03(இந்திய நேரம்)