தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • மரவளையக் காலக்கணிப்பு

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    மரவளையக் காலக்கணிப்பு, மரங்களில் காணப்படும் வளையம் போன்ற அமைப்பைப் பயன்படுத்தி காலத்தைக் கணிப்பதைக் குறிக்கும். இது தொல்லியல் ஆய்விற்கு மிகவும் பயனுள்ளதாகும். இம்முறை ஆங்கிலத்தில் “டென்டரோகுரோனாலஜி” எனப்படுகின்றது. இதை ஏ.இ.டக்லஸ் என்பவர் கண்டுபிடித்தார். இது சுற்றுச்சூழலியலிலும் பயன்படுகின்றது. இம்முறையானது இரு பயன்பாடுகளை உடையது. அவையாவன பின்வருமாறு ,

    அ. மரங்களை நேடியாகக் காலக்கணிப்பு செய்ய.

    ஆ. கரிமக் காலக்கணிப்பில் கிடைக்கும் காலத்தைத் திருத்துவதற்கு (calibration).

    ஒரு மரத்தைக் குறுக்காக வெட்டும்போது அதில் வளையங்கள் போன்ற அமைப்பு காணப்படுகின்றது. குளிர்ப் பகுதியில் (temperate) உள்ள மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வளர்ச்சி வளையத்தை (Growth ring) உருவாக்குகின்றன. இவ்வாறு உருவாகும் வளையங்களை எண்ணி, ஒரு மரத்தின் வயதைக் கணக்கிடலாம். இவ்வாறு ஒரு பகுதியில் வாழும் ஒரே இன மரங்களின் வளையங்கள் ஒப்பாய்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு உயிர்வாழும் மற்றும் இறந்த மரங்களின் வளையங்கள் ஒப்பிடப்பட்டு ஒரு பெரும் காலவரிசை (master Sequence) உருவாக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மரங்களின் காலம் தீர்மானிக்கப்படுகின்றது. இரண்டாவது பயனாக மர வளையங்கள் கரிமக் காலக்கணிப்பு செய்யப்படுவதன் வழியாகக் கரிமக் காலக்கணிப்பில் ஏற்பட்டுள்ள பிழை திருத்தப்படுகிறது.

    மேற்கோள் நூல்

    Colin Renfrew and Paul Bahn. Archaeology Theory Method and Practice. Thames and Hudson.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:11:03(இந்திய நேரம்)