Primary tabs
-
கரந்தைச் செப்பேடுகள்
காலம் :- பொ.ஆ. 11 ஆம் நூற்றாண்டு
எழுத்தமைதி் :தமிழ் மற்றும் கிரந்தம்
மொழி : சமஸ்கிருதம் மற்றும் தமிழ்
செப்பேடு உள்ள இடம் :அரசு அருங்காட்சியகம், சென்னை
நராக்கன் மாராயன் என்னும் இராஜேந்திரசோழ பிரமாதிராஜனது வேண்டுகோளுக்கிணங்க, முதலாம் இராஜேந்திரன் (பொ.ஆ.1012-1044), தமது தாயின் பேரில் திரிபுவன மாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்னும் அக்ரஹாரத்தை அமைத்துத் தந்ததை இச்செப்பேடு குறிக்கிறது. முதலாம் இராஜேந்திரனின் எட்டாம் ஆட்சியாண்டில் இச்செப்பேடு வெளியிடப்பட்டது.
செப்பேட்டின் அமைப்பு
சமஸ்கிருதப் பகுதியில் முதல் பாடலிலிருந்து பன்னிரண்டாம் பாடல் வரை வழக்கம் போல் சோழ வம்சத்தின் புராண அரசர்களைப் பற்றிக் கூறுகிறது. பதின்மூன்றாம் பாடல் தொடங்கி வரலாற்றுக் கால மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
தமிழ்ப் பகுதியில் "நமக்கு (இராஜேந்திர சோழருக்கு) யாண்டு எட்டாவது, நாள் நூறேழி நால் பெரும்பற்றப்புலியூர் விட்ட வீட்டின் உள்ளால் மாளிகையின் கீழை மண்டபம் இராஜேந்திர சோழ ப்ரமாதிராஜனில் நாம் உண்ணாவிருந்த" பொழுது இப்பரிசு அளிக்கப்பட்டதைப் புலப்படுத்துகிறது. ஐம்பத்தொரு ஊர்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு திரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்று ஒரு அக்ரஹாரம் ஏற்படுத்தி 1080 சதுர்வேதிபட்டர்களுக்குப் பங்காக அளிக்கப்பட்டதைக் கூறுகிறது. ஊர்களின் பெயர்கள், அவைகளின் எல்லைகள், பட்டர்களின் பெயர்கள், அவர்களது ஊர்கள் ஆகியவை தரப்பட்டுள்ளன.