தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புகளூர் கல்வெட்டு

  • புகளூர் கல்வெட்டு

    முனைவர் மா.பவானி
    உதவிப் பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை

    புகளூர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் ஆறு நாட்டார் என்று ஓரு மலை உள்ளது. மலையடி வாரத்து ஊரை வேலாயுதம்பாளையம் என்பர். இம் மலைப்பகுதியில் இக்கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. மொத்தம் 12 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சங்க காலத்தமிழ் எழுத்தில் எழுதப்பெற்றுள்ளன. மொழி தமிழாகும். இவற்றுள் இரு கல்வெட்டுகள் சேர மன்னர்கள் வழங்கிய கொடை பற்றிக் கூறுகின்றன. எனவே, இவை மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அனைத்துக் கல்வெட்டுக்களும் சமண முனிவருக்குச் செய்து கொடுத்த படுக்கை என்று வழங்கப்படும் பாளிய் மற்றும் அதிட்டானம் குறித்தது.

    கல்வெட்டு 1 :

    மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
    கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
    கடுங்கோன் மகன் ளங்
    கடுங்கோன் ளங்கோ ஆக அறுத்த கல்

    செய்தி :

    யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்குச் சேரமன்னர் செல்லிரும்பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை.

    சிறப்புகள் :

    சங்க கால சேர அரசர்களின் கல்வெட்டு
    கோ ஆதன், செல்லிரும்பொறை , பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ ஆகிய அரசர்களின் பெயர்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன
    கோஆதன் செல்லிரும்பொறையின் மகன் பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளங்கோ ஆவதன் பொருட்டு பாளிய் அமைத்துக் கொடுத்துள்ள செய்தியைக் கூறுகின்றது
    சேர அரசின் மூன்று தலைமுறை இதன் மூலம் தெரியவந்துள்ளது.
    இதிலுள்ள அரசர்கள் பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்தப் பெற்றுள்ளனர்.

    புகளூர்:2

    யாற் றூர் செங்காயப ன்
    (தா)வன் பின்னன் கொற்ற ன்
    அறுபித்த அதிட்டானம்

    செய்தி

    யாற்றூரில் செங்காயபனுக்குத் தாவன் பின்னன் கொற்றன் என்பவர் அதிட்டானம் கொடுத்தது பற்றிக் கூறுகிறது. அதிட்டானம் என்றால் தரைப் பகுதி என்று பொருள்.

    கல்வெட்டு:3

    அதிட்டான்னம்

    செய்தி

    யார் கொடுத்தார் என்ற செய்தி இல்லை. ஆனால், அதிட்டானம் செய்து கொடுத்துள்ளனர்.

    கல்வெட்டு:4

    நலி(ய்) ஊ ர் பிடன் குறும்மகள்கீ ர ன் கொற்றி செய்பித பளி

    செய்தி

    நலி ஊரை சேர்ந்த பிடனுடைய இள மகளான கீரன் கொற்றி செய்பித்த பாளியைப் பற்றி கூறுகிறது.

    கல்வெட்டு:5

    நலி (ய்) ஊர் பிடந்தை மகள் கீரன் கொறி அதிட்டான்

    செய்தி

    நலி ஊரை சேர்ந்த பிடந்தையின் மகளான கீரன் கொற்றி கொடுத்த படுக்கை

    கல்வெட்டு:6

    கொ ற் ற ந் தை இ ள வ ன் மு ன் று

    செய்தி

    கொற்றந்தை இளவன் என்னும் பெயர் உள்ளது. முன்று என்பது படுக்கைக்கு முன் உள்ள கல்திட்டு எனலாம்

    கல்வெட்டு:7

    அதிட்டானம்

    செய்தி

    யார் கொடுத்தார் என்ற செய்தி இல்லை. ஆனால் அதிட்டானம் செய்து கொடுத்துள்ளனர்.

    கல்வெட்டு:8

    கரு ஊர் பொன் வாணிகன் நத்தி அதிட்டாணம்

    செய்தி:

    கருஊரைச் சேர்ந்த பொன்வாணிகனான் நத்தி கொடுத்த அதிட்டாணம்

    கல்வெட்டு:9

    எ ண் ணை வாணிகன் வெ நி ஆ த ன் அ தி ட் டா ண ம்

    செய்தி

    எண்ணை வாணிகனான வெநி ஆதன் கொடுத்த அதிட்டானம்

    கல்வெட்டு:10

    னா க ன் ம க ன் பெ ரு ங் கீ ர ன்

    செய்தி

    நாகனுடைய மகன் பெருங்கீரன் என்று உள்ளது

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:49:14(இந்திய நேரம்)