தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சங்க கால மறவர் கல் (பொ.ஆ.மு 400 - பொ.ஆ.மு 300)

  • சங்க கால மறவர் கல்
    (பொ.ஆ.மு 400 - பொ.ஆ.மு 300)

    முனைவர் மா.பவானி
    உதவிப் பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுப் பெட்டகமாக விளங்கும் செம்மொழி இலக்கியங்கள் கருத்தாழம் மிக்கவை. அவற்றில் இல்லாத செய்திகளே இல்லை என்று கூறும் அளவிற்கு பரந்துபட்ட தன்மை உடையவை. ஆயினும் அவற்றில் கூறப்பட்டிருக்கும் ஒரு சில செய்திகளில் மிகைப்படுத்துதல் அதிகம். அவற்றினைக்கொண்டு அவை எழுதப்பெற்ற காலத்தினை அறிய இயலாது, இதுபோன்ற எதிர்மறைக் கருத்துக்களும் உண்டு. சங்க கால இலக்கியங்களில் கூறப்படும் செய்திகள் உண்மையில் நடைப்பெற்றிருக்குமா? அக்காலத்தில் வழக்கத்திலிருந்த வர¤வடிவங¢கள¢ என்ன? என்பது போன்ற ஐயங்களைத் தகர்த்தெறிந்து சங்க காலத்தைப் படம் பிடித்துக்காட்டும் அளவிற்கு நமக்கு ஏறத்தாழ நூற்றுக்கணக்கான சங்ககாலப் பழந்தமிழ் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இது போன்ற எழுத்துக்கள் இதுகாறும் பெரும்பாலும் சமணர் படுக்கைகளிலேயே கிடைத்துவருகின்றன. சமணர்களுக்கு இருக்கை அமைத்துகொடுத்ததைப் பற்றியே கூறுகின்றன. பல பெயர்சொற்கள் பானை ஓடுகளிலும் காசுகளிலும் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமான எழுத்துப்பொறிப்புகளாகக் கருதத்தக்கவை தமிழர் தம் வீரம் போற்றும் நடுகற் கல்வெட்டுகளாகும்.. இவ்வகைக் கல்வெட்டுக்கள் இதுகாறும் கிடைத்ததில், தற்பொழுது முதன் முறையாக 2006ஆம் ஆண்டு புலிமான் கோம்பை (தேனி), தாதப்பட்டி (திண்டுக்கல்) ஆகிய ஊர்களிலிருந்து கண்டுபிடிக்கப்பெற்றுள்ளன. அண்மையில் 2012 ஜூலை மாதம் தமிழ்ப் பல்கலைக்கழக, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் ஆய்வு மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட பொற்பனைக்கோட்டையில் மற்றுமொரு சங்க கால நடுகல்லைக் கண்டுபிடித்துள்ளனர். ஆக தமிழகத்தில் இதுவரையில் மொத்தம் 5 நடுகற்களே சங்க காலத்தைச் சேர்ந்ததாகக் கிடைத்துள்ளன.

    இந்திய சமுதாயத்தின் பல குழுக்கள் துவக்கத்தில் கால்நடை கவர்தல் மற்றும் மீட்டல் என்ற செயலை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டைப் பெற்றுள்ளன. காலம் செல்லச் செல்ல கால்நடைக்காக நடைபெற்ற போர் நிலப்பகுதிக்காக மாற்றம் பெற்றது. இன்றளவும் அந்த மரபு தொடர்வது நாம் அறிந்ததே.

    இலக்கியத்தில் நடுகற்கள் பற்றிய செய்திகள் :

    சங்க இலக்கியங்களில் எங்கும் நிரவி நிற்பது வீரமும் காதலுமே. தமிழ்ச் சமூகத்தின் ஆணிவேர் வீரமே. இச்சமுகத்தின் முக்கிய பண்பாட்டு கூறுகளுள் ''ஆநிரை கவர்தல்'' (பசு கூட்டங்களை கவர்தல்) ''ஆநிரை மீட்டல்'' (எதிரிகளால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்கூட்டங்களை மீட்டல்) இவையும் ஒன்றாகும். ஆநிரை கவர்தலை ''ஆகோள்'' என்ற சொல்லால் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது (தொல் 20 : 3).

    ஊர் கொலை ஆகோள் பூசன் மாற்றே (தொல் 20:3)
    விழுத்தொடை மறவர் வில்லிடத்
    தொலைந்தோர் எழுத்துடை நடுகல் (ஐங்: 352)
    பேயம் முதிர் நடுகல் பெயர் பயம்
    படரத்தோன்று குயில் எழுத்து (அகம் :297)
    மரம்கோள் உமண் மகன் பெயரும் பருதிப்
    புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்
    கண்ணி வாடிய மன்னர் மருங்குல்
    கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து (அகம் 343)

    இவ்விதம் தன் ஊரைச்சேர்ந்த ஆநிரைகளைக் காக்கும் பொருட்டு உயிர் நீக்கும் வீரர்களுக்குக் கல் எடுத்து அவர்களது பெயரையும் பெருமையையும் எழுதும் செய்திகளை இலக்கியங்கள் கூறுகின்றன. 25க்கும் மேற்பட்ட சங்கப் புலவர்கள் இதுபற்றி வியந்து கூறுகின்றனர். '''பீடும் பெயரும் எழுதி "; ''எழுத்துடை நடுகல்'' போன்ற தொடர்கள் நடுகற்களில் வீரர்களின் பெயரை மட்டுமன்றி அவர்கள் எதன்பொருட்டு மரணம் எய்தினர் என்பதையும் பொறித்துள்ளனர் என்பதையே குறிக்கின்றது. மேற்சுட்டிய நடுகற்கள் கண்டுபிடிக்கும் வரை (2006) இலக்கியங்களில் வரும் ''எழுத்து'' என்ற தொடர் வரிவடிவத்தைக் குறிப்பிடவில்லை அவை ஓவியமாகவும் இருக்கலாம் என்ற ஐயப்பாடு தொடர்ந்தது.

    நடுகற்களும் குத்துக்கல்லும் (hero stones and a menhir) :

    புலிமான் கோம்பையில் கிடைத்துள்ள சங்கத் தமிழ் எழுத்து பொறித்த கல்வெட்டுக்கள் எழுத்தமைதியுடன் கீழ் தரப்பெற்றுள்ளன

    1
    2
    3

    மேற்குறித்த மூன்றும் நடுகல் வகையைச் சார்ந்தவை. ''கல்'' என்ற தொடர் பெரும்பாலும் இறந்தவருக்காக எடுக்கப்பெறும் நடுகல்லையே குறிக்கும். மேற்குறிப்பிட்டுள்ள மூன்று கல்வெட்டுக்களுள் இரண்டு கல்வெட்டுக்கள் பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவை. ''ஆகோள் '' என்ற தொடர் இடம்பெற்றிருக்கும் கல்வெட்டு (எண்: 3) பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என இக்கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்து வெளியிட்ட ஆய்வறிஞர்களுள் ஒருவரான கா. ராஜன் அவர்கள் கருதுகிறார்.

    முதல் கல்வெட்டின் முன் பகுதி உடைந்துள்ளது. முதல்வரியில் “..அன் ஊர் அதன்” என்றும் இரண்டாவது வரியில் “..ன் அன் கல்” என்றும் இடம்பெறுகிறது. இந்த ஊரைச்சேர்ந்த இவருக்காக எடுக்கப்பெற்றது என்று கூற வருகிறது. கல்வெட்டு சிதைந்துள்ளதால் ஊரின் முழுப்பெயரையும் வீரரின் முழுப்பெயரையும் பெற இயலவில்லை.

    இரண்டாவது கல்வெட்டு ''வேள் ஊர் பதவன் அவ்வன்'' எனக் காணப்பெறுகிறது. வேள் ஊரைச்சேர்ந்த பதவனின் மகனாகிய அவ்வனுக்காக எடுக்கப்பெற்ற நடுகல் இது. இதில் முதலில் “அவ்வன்” என்ற பெயர் எழுதப்பெற்றிருக்கவேண்டும் பின்னரே அவ்வனின் தந்தை பதவனின் பெயரும் ஊரின் பெயரும் சேர்க்கப்பெற்றிருக்கவேண்டும் என்று இது எழுதப்பெற்றிருக்கும் முறையைக் கொண்டு கா. ராஜன் கூறுகிறார்.

    மூன்றாவதாகக் குறிப்பிட்டிருக்கும் கல்வெட்டில் ''கல் பேடு தீயன் அந்தவன் கூடலூர் ஆகோள்'' என்று மூன்று வரியில் எழுத்துப்பொறிப்புகள் இடம்பெறுகின்றன. இக்கல்வெட்டு மிகவும் முக்கியமான கல்வெட்டாகும் . ஆநிரை கவரும் பொழுது இறந்த வீரனுக்காக எடுக்கப்பெற்ற கல் இதுவே. தொல்காப்பியத்தில் இடம்பெற்றிருக்கும் ஆகோள் என்ற சொல்லாட்சி இக்கல்வெட்டிலும் இடம்பெற்றிப்பது குறிப்பிடத்தக்கது. கூடலூரில் நடந்த தொறுபூசலில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவனுக்கான எடுக்கப்பெற்ற கல் ஆகும்

    குத்துக்கல் :

    அடியோன் பாகற்பாளிய்

    இக் கல்வெட்டு குத்துக்கல் (menhir) வகையைச் சேர்ந்தது.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் தாதப்பட்டியில் கண்டுபிடிக்கப்பெற்றுள்ளது. 180 செ.மீ. உயரமும் 60 செ.மீ அகலமும் கொண்டது.. இதன் தொடக்கப்பகுதி உடைந்துள்ளதால் தொடக்க எழுத்துக்களை அறியஇயலவில்லை. '' ...ன் அடியோன் பாகற்பாளிய் கல் ''என்று பொறிக்கப்பெற்றுள்ளது. ஒரு தலைவனின் (தலைவனின் பெயர் உடைந்துள்ளது) அடியோன் ஆகிய பாகல் என்பவர்க்காக எடுக்கப்பெற்ற கல். என்பதே இதன் பொருள். ''அடி ஓன்'' என்பதை அடிமக்களைக் குறிக்கலாம் என ''அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்'' என்ற தொல்காப்பிய நூற்பாகொண்டு (தொல் :25) ஊகிக்கிறார் கா. ராஜன்.

    பொற்பனைக்கோட்டை நடுகல் :

    4) அங்கபடை தாணைத் தணயன் கணங்
    5) குமாரன் கல்
    பொற்பனைக்கோட்டையில் கிடைத்த நடுகல் முக்கோண வடிவத்தில் உள்ளது. இதில் 5வரிகள் இடம்பெறுகின்றன. கடைசி இரு வரிகளும் தெளிவாகப் படிக்கும் அளவில் தெளிவாகவுள்ளன. முதல் மூன்று வரிகளைப் படிப்பதில் ஆய்வாளர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. எவ்வாறிருப்பினும் இது நாட்டிற்காக வீர மரணம் எய்திய வீரனுக்காக எடுக்கப்பெற்றது என்பதில் ஐயமில்லை. எழுத்தமைதிக்கொண்டு இதன் காலத்தை பொ.ஆ 3 ஆம் நூற்றாண்டு எனக்கருதலாம். தானைத் தனையன் என்பது கோட்டையை பாதுகாத்த தலைவனைக் குறிக்கும்.

    இந்தியாவின் தொன்மையான நடுகற்கள் என்ற சிறப்பினை இவை பெற்றுள்ளன. நமது செவ்வியல் இலக்கியங்கள் முழுவதும் இந்த எழுத்துக்களிலேயே எழுதப்பெற்றிருக்க வேண்டும் சங்க காலத்தில் வழக்கத்திலிருந்த எழுத்துக்களிலேயே சங்க கால நடுகற்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் எழுத்துப் பொறிக்கப்பெற்ற நடுகற்கள் இவையே. எனவே, இலக்கியங்களில் குறிக்கப்பெறும் நடுகல் பற்றிய செய்திகள் (எழுத்துநடை நடுகல், கூறுளி குயின்ற கோடுமா எழுத்து ) உண்மையே என மெய்ப்பித்துள்ளன. இதுவரை அவை ஓவியங்களைக் குறிக்கின்றன. வரி வடிவங்களை அல்ல என்ற கருத்தும் நிலவியது. இதுநாள் வரை பொ.ஆ.மு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துப் பொறிக்கப்பட்ட இருளப்பட்டி நடுகல் கல்வெட்டே காலத்தால் முந்தியது என்ற கூற்று மாற்றப்பெற்றுள்ளது. நெடுநிலைக் கல்லில் (menhir) எழுத்துக்கள் கிடைத்திருப்பதும் இதுவே முதல் முறையாகும். காலக்கணிப்பில் இருந்த புரியாத பல புதிர்களுக்கு விடையளித்துள்ளது. தொன்மைத் தமிழக மக்கள் பரவலான கல்வியறிவுப் பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகிறது. தமிழர் தம் பாரம்பரியத்தை பறைசாற்றும் இந்நடுகற்கள் இந்திய வரலாற்றின் மைல்கற்கள் என்றால் அது மிகையன்று.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:48:34(இந்திய நேரம்)