தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சாதவாகனர் காசுகள்

  • சாதவாகனர் காசுகள்

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    சாதவாகனர் (பொ.ஆ.மு. 2 ஆம் நூ. – பொ.ஆ. 1 ஆம் நூ.):

    மௌரியர்களது ஆட்சியைத் தொடர்ந்து தக்காணம் மற்றும் மத்திய இந்தியாவில் தனது ஆட்சியை ஏற்படுத்தியோர் சாதவாகனர்கள். இவர்கள் ஆந்திரர் எனப் புராணங்களில் அழைக்கப்படுகின்றனர். ஆனால் இவர்களது முந்தையக் கல்வெட்டுகள் ஆந்திராவில் காணப்பெறவில்லை. இவர்கள் இந்தியாவில் கன்வர்களை தோற்கடித்து மஹாராஷ்டிராவிலும் ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளனர். தக்காணத்தில் இவர்களது ஆட்சி கோதாவரி ஆற்றின் கீழ்ப்பகுதி வரையிருந்தது. கர்நாடகா, ஆந்திரா பகுதியும் உட்பட்டிருந்தது. இவர்களது இருமொழி (தமிழ், பிராகிருத எழுத்துக்கள்) பொறிக்கப் பெற்ற காசுகளுடன் எழுத்துப்பொறிப்பற்ற காசுகளும் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன.

    சாதவாகனக் காசுகள்:

    வஸிட்டி மகனது திரு
    புதுமாவிகு,
    உஜ்ஜைன் குறியீடு
    மற்றும் சைத்யம்
    வஸிட்டி புதச ஸ்ரீசதகளிஸ

    சாதவாகனரது காசுகள் தமிழ்நாட்டில் திருக்கோயிலூர், கரூர் போன்ற ஊர்களில் மேற்பரப்பாய்வில் கிடைக்கின்றன. காஞ்சிபுரம், மாளிகைமேடு (கடலூர் மாவட்டம்) பகுதிகளில் அகழாய்வில் கிடைக்கின்றன.

    சின்னங்கள்:

    பொதுவாக இவர்களது காசுகளில் ஒருபுறத்தில் குதிரை, யானை, சிங்கம் அல்லது சைத்யம் போன்ற சின்னங்களுடன் மறுபுறம் பெருக்கல் குறியீட்டின் நான்கு முனைகளிலும் சிறு வட்டமிட்டிருக்கும் சின்னமே காணப்பெறும். இது உஜ்ஜயினி சின்னம் என்று அறிஞர்களால் அழைக்கப் பெறுகின்றது.

    இவை மட்டுமின்றி வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ நோக்கி நிற்கும் யானை உருவத்தினைச் சுற்றிலும் அரசனின் பெயர் பொறிப்புகள் இடம் பெற்றிருக்கும். பின்புறம் வழக்கம் போல் உஜ்ஜயின் சின்னம் இடம்பெறும்.

    இவை மட்டுமின்றி ஒரு புறத்தில் அரசரின் உருவம் பொறிக்கப் பெற்று அவற்றைச் சுற்றிலும் அவரது பெயர் பிராகிருத மொழியில் வட இந்திய பிராமி எழுத்திலும் மறுபுறம் அவ்வரசர்களின் பெயர்கள் தமிழ் மொழியிலும் பொறிக்கப் பெற்ற காசுகளையும் 1. வஸிட்டி புத்ர சிவசிரி புலுமாவி, 2. வாஸிட்டி புத்ர சாதகர்னி, 3. வாஸிட்டி புத்ர சிவசிரி புலுமாவி, 4. வாஸிட்டி புத்ர சிவஸ்கந்த சாதகர்னி, 5. கௌதமி புத்ர யஞ்ஞசிரி சாதகர்னி, 6. வாஸிட்டி புத்ர விஜய சாதகர்னி போன்ற அரசர்கள் வெளியிட்டுள்ளனர். இவ்வகைக் காசுகள் தக்காணம், மராட்டியம் ஆகிய பகுதிகளில் கிடைக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஒன்று கூட கிடைக்கவில்லை.

    இவ்விதம் ஆந்திர மன்னர்களான சாதவாகனர்கள் தெலுங்கு மொழியைப் பயன்படுத்தாது தமிழ் மொழியில் காசுகளை வெளியிடுவதற்கான காரணத்தை ஆராய்வது அவசியமாகும். இது குறித்து ஆய்வு செய்த ஐராவதம் மகாதேவன் அவர்கள் அரசியல் மற்றும் நிர்வாகப் பயன்பாட்டிற்குத் தமிழ், பிராகிருத மொழிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் மேலும் தமிழ் நாட்டுடனான வணிகத் தொடர்பும் இதற்குக் காரணமாகலாம் எனவும் ஊகிக்கிறார். ஆயினும் தமிழ்நாட்டில் இவ்வகைக் காசுகள் (இருமொழி காசுகள்) கிடைக்கப் பெறாமையால் இவை மேலும் ஆராயத்தக்கவை.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:45:35(இந்திய நேரம்)