தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேர மன்னன் மாக்கோதைக் காசு

  • முதலாம் இராசராச சோழரின் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டு

    (பொ.ஆ. 1011)

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    அமைவிடம்: தஞ்சாவூர், இக்கல்வெட்டுக்கள் பெரியகோயிலின் விமானத்தின் அடிச்சுவற்றில் வடக்கு மற்றும் மேற்குப் புறத்தில் அமைந்துள்ளன.
    காலம் : பொ.ஆ 1011
    மொழி : தமிழ்
    எழுத்து : தமிழ் மற்றும் கிரந்தம்

    குறிப்பு

    இதுவே தஞ்சைப் பெரிய கோயிலில் மொத்தம் 97கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் முதல் கல்வெட்டாக இக்கல்வெட்டு இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டு கோயிலின் விமானச் சுவற்றின் வடக்கு மற்றும் மேற்குப் புறங்களில் வெட்டுப்பட்டுள்ளது. வடபுறம் 9 பிரிவுகளும் மேற்கு புறம் 4 பிரிவுளுமாக பிரிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு 99 பத்திகளை கொண்டுள்ளது.

    1. ஸ்வஸ்ஸ்ரீ திருமகள் போலப் பெருநில செல்வியுந் தனக்கேயுரிமை
    2. பூண்டமை மநக்கொளக்காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி வேங்கை நாடுங் கங்கபாடியுந் தடிகைபாடியும் நுளம்ப பாடியுங் குடமலைநாடும் கொல்ல
    3. முங்கலிங்கமும் எண்டிசை புகழ் தர ஈழமண்டலமும் இரட்டபாடி
    4. ஏழரை இலக்கமுந்திண்டறல் வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளரு
    5. ழியுளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டேய் செழியரைத்தேசு கொள் கோ ராஜகேசரிவர்ம்மரானஸ்ரீ ராஜராஜதே3வர்க்குயாண்டு இருப்பத்தாறாவது நாள் இருபதினால் உடையார்ஸ்ரீ
    6. ராஜராஜதே3வர் தஞ்சாவூர்க் கோயிலிநுள்ளால் இருமடி சோழநின்கீழைத் திரும
    7. ஞ்சந சாலைதா3நஞ்செய்தருளா விருந்து தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி
    8. ஸ்ரீ ராஜராஜஸ்வரமுடையார்க்கு நாங்குடுத்தநவும் அக்கன் குடுத்தநவும் நம் பெண்டுகள் குடுத்தநவும் மற்றும் குடுத்தார் குடுத்தநவும்
    9. ஸ்ரீ விமாநக் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிஞ்சருள வெட்டிந. . . . . . .
    10. யாண்டு இருபத்தைஞ்சாவது நாள் முன்னூற்றொருபத்திரண்டினால் உடையார்
    11. ஸ்ரீ ராஜராஜதேவர் குடுத்த ஸ்ரீ பலி எழுந்தருளும் பொன்னின்
    12. கொள்கைதேவர்
    13. ஒருவர் ஆடவல்லானென்னுங் கல்லால் நிறை எண்ணூற்றிருபத்தொன்பதின் கழஞ்செய் முக்காலே மூன்று மஞ்சாடி. . . . . . . . . .


    கல்வெட்டுச் செய்தி

    இக்கல்வெட்டு தஞ்சைப் பெரிய கோயிலில் முதன் முதல் வெட்டப்பெற்றுள்ள கல்வெட்டாகும். சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் தாம் தஞ்சாவூரில் எடுப்பித்த கோயிலில், ஸ்ரீ பலி கொள்கைதேவர், தட்சிண மேரு விடங்கர் போன்ற பொற் சிலைகளை எழுந்தருளிவித்துள்ளார். இச்சிலைகளுக்கு ஆபரணங்களை ராஜராஜனும் அவரது தமக்கையாரும் , மனைவிமார்களும் மற்றும் பிறரும் கொடை வழங்கியுள்ளனர். அவர்கள் கொடுத்த பொற்கொடைகளைப் பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயிலை நாம் இன்று பெரிய கோயில் என்று தமிழிலும் , பிரகதீஸ்¢வரம் என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கின்றோம். ஆனால் ராஜராஜன் தாம் கட்டிய இக்கோயிலுக்கு தமது பெயரை இட்டு ‘ஸ்ரீ ராஜராஜீஸ்வரம்’ என்று அழைத்துள்ளார். தமது வாய்மொழி ஆணையின் மூலம் (திருவாய்மொழிந்தருளி) இதை விமானக் கல்லிலே வெட்டவும் கூறியுள்ளார். இக்கல்வெட்டின் முதற்பகுதியில் இடம்பெறும் ராஜராஜனின் மெய்க்கீர்த்தியில் ராஜராஜன் காந்தளூர்ச் சாலை, கங்க பாடி, நுளம்ப பாடி, கங்க பாடி, இரட்டப்பாடி ,குடமலை நாடு, கொல்லம், கலிங்கம், ஈழம் இப்பகுதிகளை வென்றதையும் பாண்டியரை வென்றதையும் கூறுகின்றது. பொன்னை அளக்க ஆடவல்லான் என்னும் எடைக்கல் பயன்படுத்தப்பெற்றுள்ளது. ராஜராஜன் இந்த ஆணையை அரண்மனைக்குக் கீழக்குத் திசையிலுள்ள அரசர்கள் குளியலறையிலிருந்து வழங்கியதாகக் கூறப்படுகிறது. அரண்மனையின் பெயர் இருமடி சோழன் என்று அழைக்கப்பெற்றுள்ளது.

    சிறப்பு

    அறசெயல்களைக் கேட்ட உடனே செய்யும் எண்ணம் அரசர்களிடம் இருந்துள்ளது. இது ராஜராஜன் குளியறையில் இருக்கும்பொழுது கூட தானம் செய்துள்ளதால் இது விளங்கும்.

     

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:55:32(இந்திய நேரம்)